![](pmdr0.gif)
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 6 (பூமகள் இலம்பகம் 2327- 2377) &
(இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598)
cIvaka cintAmani - part 6 (verses 2327-2598)
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும் பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 6 (பூமகள் இலம்பகம் 2327- 2377) &
(இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598)
-
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1961
உள்ளடக்கம்
-
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
11. பூமகள் இலம்பகம் (2327-2377)
கொற்ற வெண்குடை நிழற்ற அரியணைமிசை அரசுவீற்றிருந்த சீவகன், தன்னாட்டில் பதினாறாண்டு அரசிறை தவிர்த்தனன். இறைவன் கோயிலுக்கும் மறையோர்க்கும் கணி கட்கும் இறையிலியாக நன்னிலங்களை வழங்கினன். கட்டியங்காரனால் இன்னலுற்றோர்க்கெல்லாம் நிலமுதலிய ஈந்து இன்ப முறுவித்தான். நாட்டின்கண் பகையும் பசியுங் கெட்டன ; யாண்டும் மாந்தர் ஒருவனும் ஒருத்தியும் போன்று இன்புற்று வாழ்ந்தனர்.
------------
-
2327. கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்.
விளக்கம் : கண்ணாடி, தன்னைச் சேர்ந்தவர் செயலாலே இருக்கு மாறுபோல, இம் மார்பும் தன்னைச் சேர்ந்த மகளிர் செயலாயே இருத்தலின், கண்ணாடி அன்ன மார்பன் என்று இன்பச் சிறப்புக் கூறினார்; கையும் காலும் தூக்கத் தூக்கும் - ஆடிப்பாவை போல - மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே என்றாற்போல; கண்ணாடிபோல முதுகு காட்டாத மார்பன் என்பாரும் உளர்; பகைவர் வீரத்தின் அழகை விளக்கும் மார்புமாம். ( 1 )
------------
-
2328. கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்ன
கூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக்
கூடார மாலைக் குவிமென்முலைக் கோதை நல்லார்
கூடார மாட மயில்போலக் குழீயி னாரே.
விளக்கம் : கூட்டுப் புலியும் முழைக் கோளரியும் போன்ற பகைவர் என்றது சூரபன்மனையும் ஒழிந்த அவுணரையும் என்றும், வேல் நினைந்தான் முருகன் என்றும், ஈண்டு அம் முருகனைப் போன்ற சீவகனைக் குறிப்பதாகவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வுவமை கட்டியங்காரன் முதலியோர்க்குத் தகாதென்றெண்ணி மேலும், முருகன் என்று சீவகனுக்கு ஒருபெயர் கூறினார், திருமால் போந்தான் (சீவக. 2369) என்று மேலும் கூறுவர் என்பர். கூடாரம் - கூடகாரம்; நெற்கூடுகள். ( 2 )
------------
-
வேறு
2329. மாலைச் செற்றான் மக்களொ டெல்லா முடனேயிம்
மாலைச் செற்றான் வைந்நுனை யம்பின் னிவனென்பார்
மாலைக் கின்றே மாய்ந்தது மாயாப் பழியென்பார்
மாலைக் கேற்ற வார்குழல் வேய்த்தோண் மடநல்லார்.
விளக்கம் : நல்லார் என்பார் என்க. மால்; சச்சந்தன். குணமாலைக்குற்ற பழி சீவகன் அவளைத் தீண்டியதனால் - துன்பமுற்றான் என்பது. ( 3 )
------------
-
2330. நாகந் நெற்றி நன்மணி சிந்தும் மருவிபோ
னாகந் நெற்றிந் நன்மணி யோடை நறவிம்மு
நாகந் நெற்றிந் நன்மலர் சிந்நி நளிர்செம்பொ
னாகந் நெற்றி மங்கைய ரொத்தார் மடநல்லார்.
விளக்கம் : நாகம் நான்கும் நிரலே, மலை, யானை, சுரபுன்னை, வானுலகம் என்க. ஓடை - முகபடாம். நற - தேன். நன்மலர் சிந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செய என்னெச்சமாக்குக. ( 4 )
------------
-
2331. கோடிக் கொடுங் கூம்புயர் நாவாய் நெடுமாடங்
கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாருங்
கோடித் தானைக் கொற்றவற் காண்பா னிழைமின்னக்
கோடிச் செம்பொற் கொம்பரின் முன்முன் றொழுவாரும்.
விளக்கம் : இருபது பட்டிற்குக் கோடி என்பதைப் பெயராக்கியும் உரைப்பர். கோடிக்கோடும் + கோள்திக்கு ஓடும் எனக் கண்ணழிக்க. கூம்பு பாய்மரம். நாவாய் - ஓடம். கோடித்தானை என்புழிக் கோடி - எண்ணுப் பெயர்; கொம்பரிற் கோடி என மாறுக, கோடி - வளைந்து.
------------
-
2332. அம்புகை வல்லில் லார்கழன் மள்ளர் திறலேத்த
வம்புகைக் கொண்டா லாரிவற் கீண்டு நிகராவா
ரம்புகை யார்ந்த வந்துகி லல்குல் லவிர்கோதா
யம்புகைக் காணா மையனைக் கையிற் றொழுதென்பார்.
விளக்கம் : இரண்டாம் அடியில் அம்பு என்பது நீர். அது நீர் சூழ்ந்த உலகிற்கு ஆகுபெயராயிற்று. உகை - உகைக்கின்ற; செலுத்துகின்ற மள்ளர் - வீரர். அம்புகை - அழகிய புகை. ஈற்றடியில் அம்பு - வளையல். ( 6 )
------------
-
2333. மைத்துன நீண்ட மாமணி மாடம் மிசையேறி
மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் மலர்தூவ
மைத்துன மன்னர் மால்களி றேறிப் புடைசூழ
மைத்துன நீண்ட மாமணி வண்ண னவனொத்தான்.
(விளக்கம்.) துன்ன என்பன துன என்றும், உன்ன என்பது உன என்றும் வந்தமை விகாரங்கள். மைத்தல் - ஒளி கெடுதல்; மைம் மைப்பினன்று குருடு (பழ. 188) என்றாற் போல. மணி வண்ணன் : திருமால். ( 7 )
------------
-
வேறு
2334. ஊது வண்டரற் றும்முயர் தாமரைப்
போது பூங்கழு நீரொடு பூத்துடன்
வீதி மல்கின போன்மிளிர் வேற்கணு
மாத ரார்முகப் பூவு மலர்ந்தவே.
விளக்கம் : தாதூதுவண்டென்க. கழுநீர் - ஒரு நீர்ப்பூ. முகப்பூ - முகப்பொலிவு. தாமரைப்பூ மகளிர் முகத்திற்கும் கழுநீர் கண்களுக்கும் உவமை. ( 8 )
------------
-
2335. வீணை வித்தகன் வேந்தடு வீங்குதோள்
காணுங் காரிகை யார்கதிர் வெம்முலைப்
பூணு மாரமு மீன்றுபொன் பூத்தலர்ந்
தியாண ரூரம ராபதி போன்றதே.
விளக்கம் : அமராவதி : வானவர் நாட்டின் தலைநகர். வீணை வித்தகன் என்றது சீவகனை. வேந்தடுதோள், வீங்குதோள் என இயைக்க. காரிகையார் - அழகியர். யாணர்ஊர் - புதுவருவாயினையுடைய இராசமாபுரம். ( 9 )
------------
-
2336. தேம்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும்
பூம்பெய் கோதைப் புரிசைக் குழாநல
மோம்பு திங்க ளுலந்து சுடர்கண்ட
வாம்ப லாய்மலர்க் காடொத் தழிந்ததே.
விளக்கம் : தாரவன் : சீவகன், பூங்கோதை, பெய்கோதை எனத் தனித்தனி கூட்டுக. புரிசை - மதில், சுடர் - சிறப்பால் ஞாயிற்றை உணர்த்திற்று. ( 10 )
------------
-
வேறு
2337. மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்ப வேபோ
லாகம் மறவ ரகன்கோயில்புக் கம்பொன் மாலைத்
தோகைம் மடவார் துவர்வாய் துடித் தஞ்ச வெம்பா
வேகம் முடைத்தாய் விழியாத்தொழித் தேகுகென்றார்.
விளக்கம் : அழாமற் பொருமுதலின் வாய்துடித்தது. மாகம் - முகிலுக்கு ஆகுபெயர்; மணிணையுடைய பாம்பென்க. ஆக மறவர், ஆகம்மறவர் என வண்ணத்தால் மகரவொற்று விரிந்து நின்றது, தோகை - மயில் : ஆகுபெயர். வெம்பா - வெம்பி. விழியா - விழித்து. ( 11 )
------------
-
2338. செய்பாவை யன்னார் சிலம்பார்க்கு மென் சீற டியார்
செய்பூந் தவிசின் மிசையல்லது சேற லில்லார்
மையார்ந்த கண்ணீர் மணிப்பூண்முலை பாய விம்மா
வெய்தா மடவார் வெறுவெந்நிலத் தேகி னாரே.
விளக்கம் : செய்பாவை : வினைத்தொகை. சிற்பிகளாலியற்றப் பட்ட பாவை என்க; திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். விம்மா - விம்மி. ( 12 )
------------
-
2339. நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப்
பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள்
வருத்தம் மிழற்றிப் பசும்பொற்சிலம் போசை செய்யச்
செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார்.
விளக்கம் : பருக்கென்ற எனவே கொப்புளித்தன ஆயின. நிலமோந்துழி - நிலத்திற் பட்டவிடத்து. நெருப்புற்றபோலச் செய்யவாகி என இயைக்க. மரலினது பழம் கொப்புளுக்குவமை, மரற்பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள் (பொருந, 45) என்றார் பிறரும். செருக்கற்ற என்றது வாடின என்றவாறு.
------------
-
2340. பொற்பூண் சுமந்து பொருகோட்டை யழித்து வெம்போர்
கற்பா னெழுந்த முலையார்களங் கண்டு நீங்கி
நற்பூ ணணிந்த முலையார்நிலை கால்ச ரிந்து
நெற்றிந் நிறுத்து வடம்வைத்த முலையி னாரும்.
விளக்கம் : அழித்தென்பது, எதிர்காலம் நோக்கிய இறந்த காலச் சொல்; அழித்துப் கற்பான் என்க. இப்பாட்டுக் குளகம்.
------------
-
2341. செங்காற் குழவி தழீயினார்திங்கள் புக்க நீரா
ரங்கான் முலையி னரும்பால்வரப் பாயினாரும்
பைங்காசு முத்தும் பவழத்தொடு பைம்பொ னார்ந்த
பொங்கார் முலையார் திருமுற்ற நிறைந்து புக்கார்.
விளக்கம் : நிறைந்து - நிறைய. சீவகன், இவர் பெறும் புதல்வர் அரசகுல மன்மையின், தன் குலத்திற்குப் பகையன்மையுணர்ந்து, அருளால் தீங்கு செய்யாது அவரைப் போக விடுகின்றானென்று மேற் கூறுகின்றார். கட்டியங்காரன் அருளின்மையாற் பகையென்றும், பெண் கொலை புரிந்து குலத்தெடுங்கோறல் (சீவக.261) எண்ணினான் என்றும் ஆண்டுக் கூறினார். எதிர் வந்து பொருதலின், முன்பு அவன் புதல்வரைக் கொன்றான் என்க.
------------
-
2342. பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னா
நெய்யார்ந்த கூந்த னிழற்பொன்னரி மாலை சோரக்
கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா
நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார்.
விளக்கம் : பெய் - பெய்தல். பூங்கொடிமின் - அழகிய கொடி மின்னல். மின்னா - மின்னி. பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. வளையார் : மகளிர். சோரா - சோர்ந்து. நையா - நைந்து, துயரா - துயர்உற்று. பிணைமான் - பெண்மான். சீவகனுக்குப் புலியும் மகளிர்க்கு மானும் உவமைகள். (16)
------------
-
2343. வட்டம் மலர்த்தா ரவனாலருள் பெற்று வான்பொற்
பட்டம் மணிந்தா ளிவர்தங்களுள் யாவ னென்ன
மட்டா ரலங்க லவன்மக்களுந் தானு மாதோ
பட்டா ரமருட் பசும்பொன்முடி சூழ வென்றார்.
விளக்கம் : அடுத்த செய்யுளும் இஃதும் ஒருதொடர். வட்டத்தார். மலர்த்தார் என இயைக்க. தாரவன் : கட்டியங்காரன். பட்டம் அணிந்தாள் - பட்டத்தரசி, என்று சீவகன் வினவ என்க. களத்தின் செய்தி அவட்குக் கூறுகின்றுவர் பட்டார் என்றார் என்க. ( 17 )
------------
-
2344. மாலே றனையா னொடுமக்களுக் கஃதோ வென்னா
வேலேறு பெற்ற பிணையின்னனி மாழ்கி வீழ்ந்து
சேலேறு சின்னீ ரிடைச்செல்வன போன்று செங்கண்
மேலேறி மூழ்கிப் பிறழ்ந்தாழ்ந்த விறந்து பட்டாள்.
விளக்கம் : யாவள் என்று வினாவ இறந்து பட்டாள் என்று விடையிறுத்தனர். அஃதோ என்றது. மன்னர் தீ ஈண்டு தம் கிளையோடு எரித்திடும் (சீவக. 250) என்று அமைச்சர் கூற, அவன் கேளாதிருந்தமை தான் கேட்டிருத்தலின், அது பின்பு பயந்தபடியோ என்றான். மால் - பெருமையுமாம். ( 18 )
------------
-
2345. ஐவா யரவி னவிராரழல் போன்று சீறி
வெய்யோ னுயிர்ப்பின் விடுத்தேனென் வெகுளி வெந்தீ
மையா ரணல மணிநாகங் கலுழன் வாய்ப்பட்
டுய்யா வெனநீ ருடன்றுள்ள முருகல் வேண்டா.
விளக்கம் : பாம்பினது நஞ்சு ஒன்றற்கு உயிருள்ளளவும் வெகுண்டு, அவ்வுயிர் போய பின்பு அவ் வெகுட்சி நீங்குமாறுபோல, யானும் கட்டியங்காரன் உயிர்போமளவும் வெகுண்டு, அவனுயீர் போய பின்னர் அவ் வெகுளியை விட்டேன் என்றாள்.
------------
-
2346. மண்கேழ் மணியி னுழையுந்துகி னூலின் வாய்த்த
நுண்கேழ் நுசுப்பின் மடவீர்நம்மை நோவ செய்யே
னொண்கேழ்க் கழுநீ ரொளிமுத்த முமிழ்வ தேபோற்
பண்கேழ் மொழியீர் நெடுங்கண்பனி வீழ்த்தல் வேண்டா.
விளக்கம் : மண் - மண்ணுதல்; கழுவுதல், கேழ் - ஒளி. ஆடை போர்த்து நின்றமையால் துகிலின் நுழையும் மண்கேழ் மணியின் மடவீர் என்றான். துகிலின் நுழையும் மணியின் மடவீர் என்க. நோவ : பலவறிசொல். கழுநீர் - கண்ணுக்கும், முத்தம் - கண்ணீர்த்துளிக்கும் உவமை. ( 20 )
------------
-
2347. என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையி னீரே
மன்னிங்கு வாழ்வு தருதும்மவற் றானும் வாழ்மின்
பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின்னென்றான்
வின்னுங்க வீங்கி விழுக்கந்தென நீண்ட தோளான்.
விளக்கம் : வாழ்வு - வாழ்தற்குரிய பொருள். மன் என்றது கட்டியங்காரனை. இங்கு மன் வாழ்வு தருதும் என மாறுக. மன்தந்த பொருள் என்பது கருத்து. இங்குப் பொன்கொண்டு என மாறுக. (21)
------------
-
2348. தீத்தும்மும் வேலான் றிருவாய்மொழி வான்மு ழக்கம்
வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக்
காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார்
சேய்ச்செந் தவிசி நெருப்பென்றெழுஞ் சீற டியார்.
விளக்கம் : மயில் மழைக்கு மகிழ்தலின் மயில்போல் என்றார். தும்மும் என்றது - காலும் என்பதுபட நின்றது. வேலான் : சீவகன். வாய்த்து - வாய்ப்ப. கேட்ட மஞ்ஞை என இயைப்பினுமாம் ( 22 )
------------
-
2349. காதார் குழையுங் கடற்சங்கமுங் குங்கு மமும்
போதா ரலங்கற் பொறையும்பொறை யென்று நீக்கித்
தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா
மாதார் மயிலன் னவர்சண்பகச் சாம்பலொத்தார்.
விளக்கம் : கணவனை யிழத்தலின் இவற்றை நீங்கி, உணவைச் சுருக்கியவராய் நோன்பை மேற்கொண்டனர். ( 23 )
------------
-
2350. ஆய்பொற் புரிசை யணியாரகன் கோயி லெல்லாங்
காய்பொற் கடிகைக் கதிர்க்கைவிளக் கேந்தி மள்ளர்
வேய்பொன் னறையும் பிறவும்விரைந் தாய்ந்த பின்றைச்
சேய்பொற் கமல மகள்கைதொழுச் சென்று புக்கான்.
விளக்கம் : கடிகை - துணித்தது; என்றது பொன்போர்த்த மூங்கிற் குழாயை. புரிசைக் கோயில், அணியார் கோயில், அகன் கோயில் என இயைக்க. கடிகை - துண்டம். கடிகைக்கைவிளக்கு, கதிர்க் கைவிளக்கு என இயைக்க. பொன்னறை - கருவூலம். சேய் : உவமவாகுபெயர்; சீவகன். கமலமகள் - திருமகள். ( 24 )
------------
-
2351. முலையீன்ற பெண்ணைத் திரடாமங்க டாழ்ந்து முற்று
மலையீன்ற மஞ்சின் மணிப்பூம்புகை மல்கி விம்மக்
கலையீன்ற சொல்லார் கமழ்பூவணைக் காவல் கொண்டார்
கொலையீன்ற வேற்கண் ணவர்கூடிய மார்பற் கன்றே.
விளக்கம் : முலைபோன்ற காயையீன்ற பெண்ணை என்க. பெண்ணை - பனை; இது தாமத்திற்குவமை. முலை பனைக்குவமமன்மையின் அடுத்து வரலுவமம் அன்றென்க. மஞ்சின் - முகில்போல. ( 25 )
------------
-
2352. போர்க்கோல நீக்கிப் புகழ்ப்பொன்னி னெழுதப் பட்ட
வார்க்கோல மாலை முலையார்மண் ணுறுப்ப வாடி
நீர்க்கோலஞ் செய்து நிழல்விட்டுமிழ் மாலை மார்பன்
றார்க்கோல மான்றேர்த் தொகைமாமற் றொழுது சொன்னான்.
விளக்கம் : முன்னர் 2326 ஆஞ் செய்யுளிற் சீவகனை அரசர் நீராட்டியதாகப் பொருள்கூறிய நச்சினார்க்கினியர் ஈண்டுச் சீவகன் நீராடியதனைக், கள வேள்வி முடித்துக் களத்தினின்றும் வருதலின், பின்னும் மஞ்சனம் ஆடினான் என்பர். ( 26 )
------------
-
2353. எண்கொண்ட ஞாட்பி னிரும்பெச்சிற் படுத்த மார்பர்
புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப் பொற்ப நோக்கிப்
பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை யண்ணல் போல
மண்கொண்ட வேலா னடிதைவர வைகி னானே.
விளக்கம் : எண் கொண்ட ஞாட்பின் என்பதற்குத் தேவாசுரம், இராமாயணம், மாபாரதம்என்ற போரில் வீரர் புண்படுமாறுபோல என அப் போர்களோடு எண்ணுதல் கொண்ட போரில் என்று ஆசிரியர் கூற்றாகவும் கூறலாமென்றும் நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். பலர் புண்களையும் அறிந்து பரிகரித்தாற்கோவிந்தனைக் கூறினான். செய்க: வேண்டிக் கோடற்கண் வந்த வியங்கோள். முன்னர், மண் கருதும் வேலான் (சீவக. 1225) என்றதற்கேற்ப, ஈண்டு, மண்கொண்ட வேலான் என்றார். ( 27 )
------------
-
வேறு
2354. வாள்க ளாலே துகைப்புண்டு
வரைபுண் கூர்ந்த போல்வேழ
நீள்கால் விசைய நேமித்தே
ரிமைத்தார் நிலத்திற் காண்கலாத்
தாள்வல் புரவி பண்ணவிழ்த்த
யானை யாவித் தாங்கன்ன
கோள்வா யெஃக மிடம்படுத்த
கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார்.
விளக்கம் : அஃறிணையும் உயர்திணையும் எண்ணிச் சிறப்பினால் அயாவுயிர்த்தார் என உயர்திணை முடிபைப் பெற்றன. ( 28 )
------------
-
2355. கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்
கூந்தன் மகளிர் குழைசிதறி
யழுவா ரழுகைக் குரலொலியு
மதிர்கண் முரசின் முழக்கொலியுங்
குழவாய்ச் சங்கின் குரலொலியுங்
கொலைவல் யானைச் செவிப்புடையு
மெழுவார் யாழு மேத்தொலியு
மிறைவன் கேளாத் துயிலேற்றான்.
விளக்கம் : விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்டபுண் - இடும்பை தரும்புண் என்பர் நச்சினார்க்கினியர். விழுமம் - இடும்பை. குரைப்பொளி: இருபெயரொட்டு. அழுவார் : வினையாலணையும் பெயர். குழுவாய்ச் சங்கென்புழி, குழு - திரட்சி, செவிப்புடை - காதடித்தலால் எழும் ஒலி. எழுவார் . எழுப்புவோர். இறைவன் : சீவகன். ( 29 )
------------
-
2356. தொடித்தோண் மகளி ரொருசாரார்
துயரக் கடலு ளவர்நீந்த
வடிக்கண் மகளி ரொருசாரார்
வரம்பி லின்பக் கடனீந்தப்
பொடித்தான் கதிரோன் றிரைநெற்றிப்
புகழ்முப் பழநீர்ப் பளிங்களைஇக்
கடிப்பூ மாலை யவரேந்தக்
கமழ்தா மரைக்கண் கழீஇயினான்.
விளக்கம் : ஒரு சாராராகிய மகளிர் துயரக் கடலுள் நீத்த ஒரு சாராராகிய மகளிர் இன்பக் கடல் நீக்க என இயைக்க. தோற்றோரும் வென்றோருமாகிய இருசாராருள் ஒருசாரார் என்க. பொடித்தான் - தோன்றினான். முப்பழம் - கடு, நெல்லி, தான்றி என்பன. பளிங்கு - கருப்பூரம். ( 30 )
------------
-
2357. முனைவற் றொழுது முடிதுளக்கி
முகந்து செம்பொன் கொளவீசி
நினைய லாகா நெடுவாழ்க்கை
வென்றிக் கோல விளக்காகப்
புனையப் பட்ட வஞ்சனத்தைப்
புகழ வெழுதிப் புனைபூணான்
கனைவண் டார்க்கு மலங்கலுங்
கலனு மேற்பத் தாங்கினான்.
விளக்கம் : முனைவன் என்றது அருகக்கடவுளை. பிறராற் பெறலாமென்று நினையலாகா என்றவாறு. கண்டோர் புகழ எழுதி என்க. கனை வண்டு - மிக்கவண்டு. அலங்கல் - மாலை. ( 31 )
------------
-
2358. முறிந்த கோல முகிழ்முலையார்
பரவ மொய்யார் மணிச்செப்பி
லுறைந்த வெண்பட் டுடுத்தொளிசேர்
பஞ்ச வாசங் கவுட்கொண்டு
செறிந்த கமுநீர்ப் பூப்பிடித்துச்
சேக்கை மரீஇய சிங்கம்போ
லறிந்தார் தமக்கு மநங்கனா
யண்ணல் செம்மாந் திருந்தானே.
விளக்கம் : முலையார் மெலிய என்றும் பாடம். இது மற்றை நாளிலே சமய மண்டபமிருந்த காட்சி. ( 32 )
------------
-
2359. வார்மீ தாடி வடஞ்சூடிப்
பொற்பார்ந் திருந்த வனமுலையா
ரேர்மீ தாடிச் சாந்தெழுதி
யிலங்கு முந்நீர் வலம்புரிபோற்
கார்மீ தாடிக் கலம்பொழியுங்
கடகத் தடக்கைக் கழலோனைப்
போர்மீ தாடிப் புறங்கண்ட
புலால்வேன் மன்னர் புடைசூழ்ந்தார்.
(விளக்கம்.) வார் - கச்சு. வடம் - முத்துவடம். பொற்பு - பொலிவு. கார்மீதாடி - மேகத்தை வென்று. கலம் - அணிகலன். கழலோன்: சீவகன். ( 33 )
------------
-
வேறு
2360. தொல்லை நால்வகைத் தோழருந்
தூமணி நெடுந்தேர்
மல்லற் றம்பியு மாமனு
மதுவிரி கமழ்தார்ச்
செல்வன் றாதையுஞ் செழுநக
ரொடுவள நாடும்
வல்லைத் தொக்கது வளங்கெழு
கோயிலு ளொருங்கே.
விளக்கம் : நந்தட்டன் சிறந்தமையிற் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பின்னரும் நபுல விபுலரைப் பேசாது விட்டதனால் அவர்கள் போரில் இறந்திருத்தல் வேண்டும். திணை விராய் எண்ணி அஃறிணையினால் முடிந்தது. தொக்கது என்பதனாற் பன்மையொருமை மயக்கமுமாம். ( 34 )
------------
-
2361. துளங்கு வெண்மதி யுகுந்தவெண்
கதிர்தொகுத் ததுபோல்
விளங்கு வெள்ளியம் பெருமலை
யொழியலந் தெழிலார்
வளங்கொண் மாநகர் மழகதிர்
குழீஇயின போலக்
களங்கொண் டீண்டினர் கதிர்முடி
விஞ்சையர் பொலிந்தே.
விளக்கம் : ஒழிய என்பதற்குக், கலுழவேகன் தங்க என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 35 )
------------
-
2362. எண்ண மென்னினி யெழின்முடி
யணிவது துணிமின்
கண்ண னாரொடு கடிகையும்
வருகென வரலும்
பண்ணி னார்முடி பழிச்சிய
மணிபொனிற் குயிற்றி
யண்ண லாய்கதி ரலமவரப்
புலமக ணகவே.
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். இனி யென்றார் காலங்கழிக்குமது தகாது என்றற்கு. என்றதனாலே புரோகிதன் முதலாகத் துறைதோறும் அழைக்க வேண்டுவாரை அழைத்ததும், அங்குரார்ப்பணம் அதிவாசம் முதலியசடங்குகள் யாவும் நடத்தி முழுத்தம் பார்த்திருந்ததுவும் தோன்றக் கூறினார். முடியமைத்தற்குரிய நூல்கள் எல்லாம் முற்ற முடித்தலின், நாமகள் மகிழ என்றார். புலமகள் நகப் புண்ணினாரும் என்க. ( 36 )
------------
-
2363. விரியு மாலையன் விளங்கொளி முடியினன் றுளங்கித்
திருவின் மால்வரைக் குலவிய தனையதோர் தேந்தா
ரகுலி போல்வதோ ராரமு மார்பிடைத் துயல
வெரியும் வார்குழை யிமையவ னொருவன்வந் திழிந்தான்.
விளக்கம் : வந்தவன் சுதஞ்சணன், திருவில் - வானவில் இமையவன் - தேவன்; என்றது சுதஞ்சணனை, இழிந்தான் - இறங்கினன்.
( 37 )
------------
-
2364. கொம்மை யார்ந்தன கொடிபட வெழுதின குவிந்த
வம்மை யார்ந்தன வழகிய மணிவட முடைய
வெம்மை செய்வன விழுத்தகு முலைத்திட முடைய
பொம்மெ லோதியர் பொழிமின்னுக் கொடியென விழிந்தார்.
விளக்கம் : கொம்மை - பெருமை; வட்டமுமாம். கொடி - தொய்யிற் கொடி. அம்மை - அழகிய மை. வெம்மை - விருப்பம், இவர்கள் - சுதஞ்சணன் மனைவிமார் என்க. ( 38 )
------------
-
2365. மையல் யானையின் படுமதங்
கெடப்பகட் டரசன்
செய்த மும்மதம் போற்றிசை
திசைதொறுங் கமழுந்
தெய்வ வாசத்துத் திருநகர்
வாசங்கொண் டொழிய
வெய்யர் தோன்றினர் விசும்பிடைச்
சிறப்பொடும் பொலிந்தே.
விளக்கம் : சிறப்பென்றார் சீவகன் மணிமுடி விழாவிற்குச் சிறப்புறக் கொண்டு வந்த பொருள்களை. மையல் - மயக்கம். படுமதம் : வினைத்தொகை. பகட்டரசன் - யானைகட்குத் தலைவனாகிய களிறு. இதனை யூதநாதன் என்ப. வெய்யர் - விரைந்தனராய் : முற்றெச்சம். ( 39 )
------------
-
2366. வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப்
பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற்
பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி
யெரிபொ னீண்முடி கவித்தனன் பலித்திரற் றொழுதே.
விளக்கம் : பவித்திரன் என்றார் நெஞ்சின் தூய்மை தோன்ற. சீவகன் மந்திரமோதி நாய்ப்பிறப்பை நீக்கிய ஆசிரியனாதலின் சுதஞ்சணன் தொழுதான். ( 40 )
------------
-
2367. தேவ துந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பா
னாவி யம்புகை யணிகிளர் சுண்ணமோ டெழுந்த
நாவி னேத்தின ரரம்பையர் நரம்பொலி யுளர்ந்த
காவன் மன்னருங் கடிகையுங் கடவது நிறைத்தார்.
விளக்கம் : ஆவி : அவியென்பதன் விகாரம் மன்னர் கைக் காணிக்கை இட்டு வணங்கினார். கடிகையர் மங்கலம் பாடினர். நாவின் ஏத்துநர் பாடமாயின், ஏத்துநராகிய அரம்பைய ரென்க. ( 41 )
------------
-
2368. திருவ மாமணிக் காம்பொடு
திரள்வடந் திளைக்கு
முருவ வெண்மதி யிதுவென
வெண்குடை யோங்கிப்
பரவை மாநில மளித்தது
களிக்கயன் மழைக்கட்
பொருவில் பூமகட் புணர்ந்தன
னிமையவ னெழுந்தான்.
விளக்கம் : திருவ : அ : அசை. காம்பும் வடமும் திளைக்கும் மதி : இல்பொருளுவமை. குடையும் முடிபுனை மங்கலப் பொருள்களில் ஒன்று. ( 42 )
------------
-
வேறு
2369. மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை
வெண்கவரி விரிந்து வீசப்
பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமா
முழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
மன்னர் முடியிறைஞ்சி மாமணியங்
கழலேந்தி யடியீ டேத்தச்
சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்
போற்றிசைப்பத் திருமால் போந்தான்.
விளக்கம் : பொன்னங்குடை : பொன் அழகுமாம் இது உலாக் குடையாதலிற் பொற்குடை என்றலே தகவுடைத்து. காத்தல் தொழிலாலும் வடிவாலும் திருமால் என்றே கூறினார். அடுத்து இரண்டு உலா அரசர்க்காகாமையின் மணத்திற்குப் பின் உலாக் கூறுவார் ஈண்டு கன்னிலம்மிதித்தற்கு மண்டபத்தே புகுந்தமைதோன்ற, அடியீடேத்த என்றார். ( 43 )
------------
-
2370. மந்தார மாமாலை மேற்றொடர்ந்து
தழுவவராத் தாம மல்கி
யந்தோவென் றஞ்சிறைவண் டேக்கறவின்
புகைபோய்க் கழுமி யாய்பொற்
செந்தா மரைமகளே யல்லதுபெண்
சாராத திருவின் மிக்க
சிந்தா மணியேய்ந்த சித்திரமா
மண்டபத்துச் செல்வன் புக்கான்.
விளக்கம் : தழுவ வாராத் தாமங்களில் தேனையுண்ண முடியாமல் வண்டுகள் ஏக்கற்றன. திருவல்லது பெண்சாராத எனவே சமய மண்டபமாம். மேல் நினைத்தன நல்குவான் சீவகனென்பதைக் கொண்டு, சிந்தாமணி ஏய்ந்த என்றார். ( 44 )
------------
-
2371. பைங்க ணுளையெருத்திற் பன்மணி
வாளெயிற்றுப் பவள நாவிற்
சிங்கா சனத்தின்மேற் சிங்கம்போற்
றேர்மன்னர் முடிகள் சூழ
மங்குன் மணிநிற வண்ணன்போல்
வார்குழைகடிருவில் வீசச்
செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போற்
றேர்மன்ன னிருந்தா னன்றே.
விளக்கம் : மங்குல் - திசை என்பர் நச்சினார்க்கினியர். உளை - பிடரிமயிர். சிங்கம் மன்னர்கட்குவமை; மணிநிறவண்ணன்; திருமால். செஞ்சுடர் - ஞாயிறு. எனவே தந்தையைப்போலிருந்தான் என்றார் நச்சினார்க்கினியர். ( 45 )
------------
-
வேறு
2372. வார்பிணி முரச நாண
வானதிர் முழக்க மேய்ப்பத்
தார்பிணி தாம மார்பன்
றம்பியை முகத்து ணோக்கி
யூர்பிணி கோட்டஞ் சீப்பித்
துறாதவ னாண்ட நாட்டைப்
பார்பிணி கறையி னீங்கப்
படாமுர சறைவி யென்றான்.
விளக்கம் : முகத்துள் : உள் உருபு மயக்கம். பாரிற்குக் கட்டின கடமையினின்றும் நீங்க என்றது ஆறில் ஒன்னையும் தவிர என்றவாறு. இது கடமை கொள்ளாமை என்னும் பொருட்டாய் நாட்டை, என்னும் இரண்டாவதற்கு முடிபு ஆயிற்று. ஐ : அசை எனினுமாம். ( 46 )
------------
-
2373. கடவுள ரிடனுங் காசில்
கணிபெறு நிலனுங் காமர்
தடவளர் முழங்குஞ் செந்தீ
நான்மறை யாளர் தங்க
ளிடவிய நிலத்தோ டெல்லா
மிழந்தவர்க் கிரட்டி யாக
வுடனவை விடுமி னென்றா
னொளிநிலா வுமிழும் பூணான்.
விளக்கம் : இவை இறையிலி நிலங்கள், தட என்பது தூபமுட்டி எனினும் ஈண்டு வேள்விக் குண்டத்தை உண்த்திதுகின்றது. இறையிலி நிலங்களை முன்போல விடுமின் எனவும், இழந்தவர்க்கு இரட்டியாக விடுமின் எனவும் இருமுறை கூட்டிக் கூறுக. (47)
------------
-
2374. என்றலுந் தொழுது சென்னி
நிலனுறீஇ யெழுந்து போகி
வென்றதிர் முரசம் யானை
வீங்கெருத் தேற்றிப் பைம்பொற்
குன்றுகண் டனைய கோலக்
கொடிநெடு மாட மூதூர்ச்
சென்றிசை முழங்கச் செல்வன்
றிருமுர சறைவிக் கின்றான்.
விளக்கம் : நிலன் உறீஇ - நிலத்தைப் பொருந்தும்படி வணங்கி என்க. வீங்கெருத்து - பருத்த பிடரி. பொன்குன்றம் மாடத்திற்குவமை. அறைவிக்கின்றான் : வினையாலணையும் பெயர். இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர். ( 48 )
------------
-
2375. ஒன்றுடைப் பதிளை யாண்டைக்
குறுகட னிறைவன் விட்டா
னின்றுளீ ருலகத் தென்று
முடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியு நோயும்
பொருந்தலில் பகையு மென்ன
மன்றல மறுகு தோறு
மணிமுர சார்ந்த தன்றே.
விளக்கம் : ஒன்றுடைப் பதினையாண்டு என்றது பதினாறாண்டு என்றவாறு. கடன் - அரசிறைப் பொருள். பசியும் நோயும் பொன்றுக என மாறுக. என்ன - என்று வள்ளுவன் கூறி முழக்க முரசு ஆர்த்தது என்க. ( 49 )
------------
-
2376. நோக்கொழிந் தொடுங்கி னீர்க்கு
நோய்கொளச் சாம்பி னீர்க்கும்
பூக்குழன் மகளிர்க் கொண்டான்
புறக்கணித் திடப்பட் டீர்க்கும்
கோத்தரு நிதியம் வாழக்
கொற்றவ னகரோ டென்ன
வீக்குவார் முரசங் கொட்டி
விழுநக ரறைவித் தானே.
விளக்கம் : கோ - பசுவுமாம். கொற்றவன் தரும் என ஒருசொல் வருவிக்க. அல்லது கோத்தரும் என்பதிலுள்ள தரும் என்பதைச் சேர்க்க. கோத்லைத் தரும் நிதியம் என்பது கோத்தரு நிதியம், என விகாரப்பட்டது. அரசன் கூறாதன தான் கூறினானல்லன்; அவன் அரசாட்சி பெற்றாற் செய்யும் அறங்களாகத் தனக்கு முற்கூறியவற்றைப் பின் தான் சாற்றுவித்தான் என்க. ( 50 )
------------
-
2377. திருமக னருளப் பெற்றுத்
திருநிலத் துறையு மாந்த
ரொருவனுக் கொருத்தி போல
வுளமகிழ்ந் தொளியின் வைகிப்
பருவரு பகையு நோயும்
பசியுங்கெட் டொழிய விப்பாற்
பெருவிறல் வேந்தர் வேந்தற்
குற்றது பேச லுற்றேன்.
விளக்கம் : திருமகன் : சீவகன், அன்பான் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் கூடிய வழி உளமகிழ்ந்திருத்தல் போன்று மகிழ்ந்து என்றவாறு. வைகி - வைக. ஒளி - புகழ். வேந்தர் வேந்தன் : சீவகன். ( 51 )
பூமகள் இலம்பகம் முற்றிற்று.
-------------
சீவக சிந்தாமணி : 12. இலக்கணையார் இலம்பகம் (2378 -2598)
அவ்வாறு அருளாட்சி புரிகின்ற காலத்தே தன்னை அன்புடன் வளர்த்த தந்தையாகிய கந்துக்கடனுக்குப் புதுவதாக அரசுரிமையையும் தாயாகிய சுநந்தைக்குப் பெருந்தேவிப் பட்டத்தையும் வாங்கினன். நந்தட்டனுக்கு இளவுடையான் என்னும் இளவரசுப் பட்ட மீந்தான் நபுலவிபுலர்க்குக் குறுநில மன்னர் மகளை மணஞ் செய்வித்தான். அவர்க்கு நாடுகள் பலவு மீந்தான். தன் பொருட்டு இன்னலுற்ற மாந்தர்க்கு நிதியும் நாடும் நல்கினான். கைத்தாயர்க்கு வளமிக்க ஐந்தூர்களை வழங்கினன். கட்டியங்காரனுடைய பொருளை எல்லாம் மாமனாகிய கோவிந்த மன்னனுக்கு நல்கினான். சுதஞ்சணனுக்குக் கோயில் எடுப்பித்து அவன் வரலாற்றை நாடகமாக எழுதி நடிப்பித்தான். இளம்பருவத்தே தான் விளையாடுதற்கு இன்னிழலளித்தஆலமரத்திற்குப் பீடமமைத்து ஐந்தூரை அதற்கு இறையிலியாக விட்டான். இவ்வாறு நல்லறம் பலவு மியற்றி நாடின்புற அருளாட்சி செய்தனன்.
------------
-
2378. அலங்க லேந்திய குங்கும வருவரை மார்பன்
கலந்த காரிகை யவர்களைத் தருகென வருள
விலங்கு மாலைவெள் ளருவிய வெழில்வரை மணந்த
புலம்பு நீள்சுரம் போய்க்கொணர்ந் தருளொடுங் கொடுத்தார்.
விளக்கம் : அலங்கல் - மாலை. அருவரை - கடத்தற்கரிய மலை. மார்பன் : சீவகன். கலந்தகாரிகையர் என்றது - மனைவிமாரை. நீள்சுரம் - நெடிய பாலைவழி. அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் என மாறுக. ( 1 )
------------
-
2379. மோடு கொண்ணிலா முளைத்தெழு பருதிகண் டறியாப்
பாடு வண்டொடு பறவையு நடுக்குறுங் காப்பின்
மாட மாமணிச் சிவிகையின் மயிலென விழிந்தார்
வீடு கண்டவர் போன்றுமின் னிடுகொடி யனையார்.
விளக்கம் : திங்களும் ஞாயிறுங் கண்டறியாத மாடத்தின் கண்ணே, காப்பினையுடைய சிவிகையினின்றும் இழிந்தனர் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். துன்புறுதற்கு ஒரு சாபம் பெற்று, அச் சாபம் வீடுகண்டவரைப் போல மகிழ்ந்து இழிந்தாரென்க; வீடுகண்டவர் பின் வருத்தம் நீங்கினாற் போல இருவரும் வருத்தம் நீங்கினார் என்றுமாம். ( 2 )
------------
-
2380. அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர்
பொன்றி வாடிய மேனியர் பொன்னிறை சுருங்கார்
சென்று காதலன் றிருவிரி மரைமல ரடிமே
லொன்றி வீழ்ந்தனர் குவளைக்க ணுவகைமுத் துகவே.
விளக்கம் : அன்று என்றது இவன் பிரிந்த நாளிலே என்பதுபட நின்றது. பொன்றி - கெட்டு. பொன்போன்ற நிறை என்க. நிறை - கற்பு காதலரிருவரும் தம் நெஞ்சை ஒருவர் மற்றொருவர்பால் நிறுத்தலின் நிறை எனப்படும். அதுவே கற்பு. திரு - அழகு. மரைமலர் - தாமரை மலர். உவகைமுத்து - இன்பக் கண்ணீர்த்துளி. ( 3 )
------------
-
2381. இலங்கு பூண்வரை மார்புற வெடுத்தவன் முயங்க
மலங்கி வாட்கண்கள் வருபனி சுமந்துடன் வெருவிக்
கலங்கு நீரிடைக் கலக்குறு கருங்கய லிணைபோற்
புலம்பி யோடின செவியுற நெடியன பொலிந்தே.
விளக்கம் : முதலில் அவன் பிரிவைக் குறித்து வருந்தின; பிறகு தெளிந்துன. ஓடுதல் - கெடுதல்; ஓடிய துணர்தலும் (சிறுபாண். 214) என்றாற் போல. ( 4 )
------------
-
2382. வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்த
கானக் கார்முல்லை கார்மழைக் கெதிர்ந்தன போல
மான மங்கையர் வாட்டமும் பரிவுந்தங் கணவன்
றேனெய் மார்பகந் தீண்டலுந் தீர்ந்தொளி சிறந்தார்.
விளக்கம் : மழைக்கு : உருபு மயக்கம். தேனைப் போன்ற மார்பு என்றார், தேனுக்கு இன்சுவை நிகழ்ந்த காலத்தே புளிச்சுவை நிகழுமாறு போல, இம் மார்பும் இம் மகளிர்க்கு இன்பம் நிகழ்த்தின காலத்தே பிறர்க்கும் இவ்வாறாம் என்னும் கருத்தை அவர்க்குப் பிறப்பித்தலின். ( 5 )
------------
-
2383. சேலுண் கண்ணியர் சிலம்பொடு திலகமுந் திருத்தி
மாலை நல்லன மதுக்கமழ் தகையன மிலைச்சிக்
கோல மென்முலைக் குங்கும மிடுகொடி யெழுதிச்
சோலை வேய்மரு டோண்முத்துந் தொழுதக வணிந்தார்.
விளக்கம் : சேல் போன்ற கண். மையுண்கண் எனத் தனித்தனி கூட்டுக. சிலம்பு முதலாகத் திலக மீறாகவுள்ள எல்லா அணிகளையும் திருத்தி என்றவாறு. இடுகொடி - எழுதுங்கொடி; தொய்யில். ( 6 )
------------
-
2384. நஞ்சு மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல
வஞ்சி வாட்கண்கண் மதர்த்தன வலர்ந்துடன் பிறழப்
பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய
வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ.
விளக்கம் : அவசத்தாற் பிறந்த அனந்தர் நோக்கினை நஞ்சு என்றார். உடன் - எல்லாம். பஞ்சு : ஆடைக்குக் கருவி ஆகுபெயர். தனது நுண்மையால் ஊற்றின்பம் பெறாத இடை, மெய் புகுந்தாலொத்த முயக்கத்தாலே (அகநா. 110 : 365 : 7) ஊற்றின்பம் பெறும்படி வைகுதலின், நுண்ணிடை கவின்பெற என்றார். ( 7 )
------------
-
2385. அரிபொற் கிண்கிணி யணிகிளர் சிலம்பொடு சிலம்புந்
திருவச் சீறடிச் செழுமலர்க் கொழுங்கயன் மழைக்க
ணுருவ நுண்ணிடை யொளிமணி வருமுலை யுருவா
ரெரிபொன் மேகலை யிலக்கணை கடிவினை நொடிவாம்.
விளக்கம் : திருவ : அ : அசை.அரி - பரல். “(அரி - ஐது) ஐதாகிய பொன்னாவது தகடு“ என்பர் நச்சினார்க்கினியர். திருவ : ஈற்றகரம் அசை. வருமுலை : வினைத்தொகை. உரு - அழகு. கடிவினை - மணத்தொழில். ( 8 )
------------
-
2386. ஆழி மால்கட லகன்பெருங் கேள்விக டுறைபோ
யூழி னன்றியு முறுவினை யோரையின் முடிப்பான்
சூழி யானையுந் துளங்குபொற் சிவிகையு முடையான்
வேழ வேந்தற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான்.
விளக்கம் : ஆழி - கரை. மால் - பெரிய. துறைபோதல் - முற்றக் கற்றல். யானை சிவிகை முதலியவற்றை விருதாகப் பெற்ற கணி என்றவாறு.
-
“........................புரையோர் புகழ
நிழற்பெருங் குடையும் நேராசனமும்
செருப்பொடு புகுதலும் சேனை யெழுச்சியும்
------------
-
2387. ஓங்கு கொற்றவற் கோதிய வுயர்பெரு நாளால்
வீங்கு வெள்ளியங் குன்றென விளங்கொளி யுடைய
தேங்கொண் மாலையுந் திலகமு மணிந்ததிண் குணத்த
பாங்கிற் பண்ணின நூற்றெட்டுப் படுமதக் களிறே.
விளக்கம் : வெள்ளணி யணிந்தனவாதலின் வெள்ளிக்குன்று போன்றன; வெள்ளிக் குன்றெனப் பண்ணப்பட்டன. ( 10 )
------------
-
2388. விளங்கு வெண்டுகி லுடுத்துவெண் சாந்துமெய் பூசித்
துளங்கு மஞ்சிகை துளைச்சிறு காதினுட் டுளங்க
வளங்கொண் மாலைகள் சூடிமுத் தணிந்துவண் முரசங்
களங்கொள் வேழத்தி னேற்றினர் கடிமுர சறைவான்.
விளக்கம் : மங்கலச் செயல்களை அறிவிக்கும் வள்ளுவன் வெண் மலர் வெள்ளாடை முதலியன அணிதல் மரபு. மஞ்சிகை - ஓரணிகலன். அறைவான் - அறைதற்கு. ( 11 )
------------
-
2389. கேண்மின் கேண்மின்கள் யாவரு மினியன கேண்மின்
பூண்மி னித்தில மணிவடம் பூசுமின் சாந்தம்
வாண்மி னுண்ணிடை வருந்தினுஞ் சூட்டணிந் தழகா
ராண மாகிய வருவிலை வண்ணப்பட் டுடுமின்.
விளக்கம் : கேண்மின்; விரைசொல்லடுக்காதலின் மூன்றாயிற்று. வடம் பூண்மின், சாந்தம் பூசுமின் என மாறி இயைக்க. நித்தில மணி : பண்புத்தொகை. ஆணம் - நேயம். உடுமின் - உடுத்துங்கோள்.( 12 )
------------
-
2390. பிள்ளை வெண்பிறைச் சிறுநுதற் பெரும்பிட்ட மணிமி
னுள்ள மேனியு மொளிர்மணிக் கலங்களிற் புனைமின்
வள்ளல் வாய்மொழி யான்படு பாலமிர் தல்லா
லுள்ள மேவினும் பிறவுணப் பெறீரெழு நாளும்.
விளக்கம் : பிள்ளைப் பிறை என்றது, பிள்ளை குழவி (தொல். மரபு. 24) என்னுஞ் சூத்திரத்து உம்மையை எச்சப்படுத்தி அதனாற் கொள்க. பிள்ளைப் பிறை என்றது இளம்பிறையை. இது நெற்றிக்குவமை. முன்பு அணியணிந்த இடமொழிய உள்ள மேனி என்க. வள்ளல் வாய் மொழி - அரசன் கட்டளை. பாலமிர்து - பாற் சோறு; பாயசம். ( 13 )
------------
-
2391. வாழை மல்கிய மணிக்குலைக் கமுகொடு நடுமின்
றாழ நாற்றுமின் றாமங் ளகிற்குடம் பரப்பி
யாழின் பாடலு மாடலு மாங்குதோ றியற்றிப்
போழு மால்விசும் பெனப்பல பொலங்கொடி யெடுமின்.
விளக்கம் : மல்கிய - நிறைந்த மணிக்குலை - நீலமணிபோன்ற குலை. நாற்றுதல் - தூங்கவிடுதல், தாமங்கள் நாற்றுமின் என மாறுக. மால் விசும்பு போழும் எனக் கண்டோர் கூறும்படி என்க. ( 14 )
------------
-
2392. மாலை வாண்முடி மன்னவன் மணவினை யெழுநாட்
சீல மில்லன சினக்களி றகற்றுகென் றணிந்த
கோல மார்முர சிடியுமிழ் தழங்கென முழங்க
நீல மாக்கட னெடுநகர் வாழ்கென வறைந்தார்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், நெடுநகர் வாழ்கென என்பதைக் கேண்மின் என்பதன் முன் அமைப்பர். சீலம் - ஒழுக்கம். இல்லனவாகிய சினக்களிறு என்க. அவை திருமணவிழாவிற் குழுமும் மாந்தர்க்குத் தீங்கு செய்யும் என்பதுபற்றி அகற்றுக என்றவாறு.
-
விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி
எழாநிலை புகாஅ இனங்கடி சீற்றத்து
ஆணை யிகக்கும் அடக்கருங் களிறு
சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென.
என்றார் கதையினும். ( 1 - 38; 90 - 3.) தழங்கு - முழக்கம். ( 15 )
------------
-
வேறு
2393. முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய்
விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின
புரையில் பொன்மணி யாழ்குழ றண்ணுமை
வரவ வானி னதிர்ந்த வணிமுழா.
விளக்கம் : போய் - போக. போகா நிற்க இவையும் நிகழ்ந்தன என மேல் வருவனவற்றையும் உடனிகழ்ச்சியாக்குக. ஆர்த்த என்பது ஆர்ந்த என விகாரப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர். ( 16 )
------------
-
2394. விண்வி ளக்குவ போல்விரி பூந்துகள்
கண்வி ளக்கிக் கலந்தவெண் சாந்தினான்
மண்வி ளக்கி மலர்ப்பலி சிந்தினார்
பண்வி ளக்கிய பைங்கிளி யின்சொலார்.
விளக்கம் : விண் - ஆகுபெயர் விளக்குதல் - துடைத்துத் தூய்மை செய்தல் கண்விளக்கி - தகுதிபற்றிய வழக்கு. மண்விளக்கி - மண்ணைமெழுகி. மலர்ப்பலி - மலராகிய பலி. இல்லுறை தெய்வத்திற்குப் பலி சிந்தினார் என்க. ( 17 )
------------
-
2395. ஆய்ந்த மோட்டின வான்படு பாலுலை
போந்து பொங்கிய வாவியி னாற்பொலிந்
தேந்து மாடங்க டாமிழி னென்பன
பூந்து கில்புறம் போர்த்தன போன்றவே.
விளக்கம் : ஆய்ந்த - அழகிய. மோட்டின - வயிற்றை யுடையன. மாடங்கள் அகத்தேயிருந்து புறம்போந்து சுற்றிய பாலாவியினால் அம் மாடங்கள் துகில்போர்தத்ன போல் தோன்றும் என்பதாம். ( 18 )
------------
-
2396. திருவி னல்லவர் செம்மலர்ச் சீறடி
பரவி யூட்டிய பஞ்சரத் தக்களி
விரவி மீநிலஞ் சேர்ந்தொளி பூத்துராய்க்
குருதி வானிலங் கொண்டது போன்றதே.
விளக்கம் : திருவினும் நல்லவர் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. திரு - திருமகள். செம்மலர் - செந்தாமரை மலர். பஞ்சு அரத்தக் களி எனக் கண்ணழிக்க. அரத்தம் - செந்நிறம். உராய் - பரந்து. குருதிவான் - செக்கர் வானம்.(19)
------------
-
2397. பால்வெண் டிங்கண் மணிக்கை படுத்தவை
போலு மாடியி னோக்கிப் பொலங்கலக்
கோலஞ் செய்பவர் கோல வெறிப்பினான்
மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே.
விளக்கம் : மணிக்கை - மணியாலியன்ற கைப்பிடி. ஆடி - கண்ணாடி. பொலங்கலம் - பொன் அணிகலன், வெறிப்பு - கண்வெறியோடல். மாலை வண்டினம் - ஒழுங்குடைய வண்டுத்திரள். மாலைக்கண் - ஒரு வகைக் கண்ணோய். ( 20 )
------------
-
2398. போக மாமழை போழ்ந்து புதத்தொறு
மாக மேந்துவ பொன்மணித் தோரண
மாக நாற்றின தாம மணிக்குட
மேக மாநகர் வீதி நிரைத்தவே.
விளக்கம் : போக மாமழை - நுகர் பொருளைத் தரும் பெரிய முகில். புதவு - புத என நின்றது; வாயில் மாகம் - வானம். ஏகமாநகர் - ஒப்பற்ற நகர். ( 21 )
------------
-
2399. ஆடன் மங்கையர் கிண்கிணி யார்ப்பொலி
பாட லின்னொலி பண்ணமை யாழொலி
மோடு கொண்முழ விண்முழக் கீண்டிய
மாட மாநகர் மாக்கட லொத்ததே.
விளக்கம் : ஆடன் மங்கையர் - விறலியர். மோடு - பெருமை. மாநகர் - இராசமாபுரம். ( 22 )
------------
-
2400. சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுக
ளந்த ரத்தெழு மின்புகை யாலரோ
விந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வழி
வந்தி ருந்தது போன்மலி வுற்றதே.
விளக்கம் : சுந்தரத்துகள் - சிந்துரப்பொடி. பூந்துகள் - மகரந்தப் பொடி. பொற்றுகள் - பொற்சுண்ணம். இன்புகை - மணப்புகை. சாறு - திருவிழா . ( 23 )
------------
-
வேறு
2401. நிரந்து கன்னலு நெய்யு நீந்தப்பெய்
திரந்து பாலமிர் தெங்கு மூட்டுவார்
பரந்து பூந்துகில் பன்ம ணிக்கலஞ்
சுரந்து கொள்கெனச் சுமக்க நல்குவார்.
விளக்கம் : நிரந்து - பரவி. கன்னல் - கருப்பஞ்சாறு. கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று என்றார் பிறரும். ( 24 )
------------
-
2402. வருக்கை யின்பழம் வாழை யின்கனி
திருக்கொண் மாங்கனி தெளித்த தேறலைக்
கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்து
புரித்த தெங்கிள நீரும்பூ ரிப்பார்.
விளக்கம் : வருக்கை - பலாமரம்; வருக்கை முக்கனியுளொன்று. ( 25 )
------------
-
2403. கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்.
விளக்கம் : முற்செய்யுள்களில் பாலடிசில் முதலிய உணவுப் பொருள்களைக் கொடுத்ததாகக் கூறியவர் ஈண்டு வெற்றிலை முதலிய முகவாசப் பொருள்களைக் கூறினார். உண்ணுதல் தின்னுதல் என்னும் பொருட்டு. நச்சினார்க்கினியர் மாநிலம் உண்ண எனக் கூட்டுவர். அவர், வெற்றிலையை உண்ணவென்றல் மரபன்மையின், ஈண்டு மாநிலம் உண்ண எனவே மண்ணுண்ணும்படி என்னும் பொருட்டாம். அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான் என்பது பன்மை பற்றிக் கூறிற்றெனல் வேண்டும்; பாகு பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின். இனி, மாந்தர் முற்கூறிய பாலடிசில் முதலியவற்றை உண்டலின், அவர் தின்றற்குப் பளித முதலியவற்றைக் கொள்ளை கொண்டு சுமக்கலாம் படித்தன்றாக ஈட்டுவா ரென்றலுமாம், என்பர். ( 26 )
------------
-
2404. தூம மார்ந்தன துப்பு ரவ்வுக
ளேம மாயின வேந்தி நிற்றலா
னாம நன்னகர் நன்பொற் கற்பகங்
காம வல்லியுங் களங்கொண் டிட்டதே.
விளக்கம் : இட்டது : ஒருமை பன்மை மயக்கம். தூமம் - புகை. துப்புரவ்வுகள் என்புழி வகரமெய் வண்ணத்தால் விரிந்தது. ஏமம் - இன்பம். கற்பகம். ஆடவர்க்கும் காமவல்லி மகளிர்க்கும் உவமை. ( 27 )
------------
-
2405. வழுவின் மாந்தரு மாவு மல்கிய
தொழுதி தன்னையான் சுமக்க லேனேனா
முழுது மண்மகண் முற்றும் வாய்திறந்
தழுதிட் டாணெயும் பாலு மாகவே.
விளக்கம் : இஃது அரவம் கூறியது. நிலம் சுமக்கலாற்றாதபடி மாந்தர் குழுமினர், பொருள்கள் நிரம்பின, பேரொளி மிக்கது என்பது கருத்து. தொழுதிதொகுதி. ( 28 )
------------
-
2406. கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கண்
மடலெழுந் தலமருங் கமுகும் வாழையு
மடியிருந் துகிலுடை மாக்க ணாடியும்
புடைதிரள் பூரண குடமும் பூத்தவே.
விளக்கம் : கோயில் - அரண்மனை. மடல் - புல்லினத்தின் ஓர் உறுப்பு. இருந்துகில் - கரிய உறைத்துகில் எனினுமாம். மாக்கண்ணாடி - பெரிய கண்ணாடி. புடை - பக்கம். பூரணகுடம் - நிறைகுடம். பூத்த - பொலிவுபெற்றன. ( 29 )
------------
-
2407. கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி
யுடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுட்
குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்க்
தடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே.
விளக்கம் : கடி - மணம். காய்பொன் : வினைத்தொகை. மணியுடைப் பொற்சிலம்பு என்க. கோதை - மாலை. தாது-பூந்துகள். (30)
------------
-
2408. துளங்குபொற் குழைகளுந் தோடுஞ் சுண்ணமுங்
கிளர்ந்தகில் சாந்துபூக் கமழ்ந்து கேழ்கிள
ரிளங்கதி ரெறிமணிப் பூணு மாரமும்
விளங்கிமே லுலகினை வெறுப்பித் திட்டதே.
விளக்கம் : துளங்கும் - அசையும். கிளர்ந்து - கிளரப்பட்டு. கமழ்ந்து . கமழப்பட்டு. விளங்கி விளங்கப்பட்டு. ( 31 )
------------
-
2409. விரிந்துவான் பூத்தென விதானித் தாய்கதி
ரருங்கலப் பொடியினா லாபொற் பூமகண்
மருங்குல்போற் குயிற்றிய நகரின் மங்கலப்
பெருந்தவி சடுத்தனர் பிணையன் மாலையார்.
விளக்கம் : பொன் பூமகள் - திருமகள் மணவறை நிலத்தைத் திருமகளின் இடைபோலப் புனைதல் வழக்கம், ஈண்டு நச்சினார்க்கினியர் பூமகள் என்பதற்கு நிலமகள் என்றே பொருள் கூறுகின்றனர். திருமகள் என்றலே சிறப்பென்பதனை.
-
போரடு மன்னர்க்குப் புரையோர் புகழ்ந்த
பாசடைத் தாமரைத் தாதகத் துறையும்
மாசின் மடமகள் மருங்கின் வடிவாய்க்
குலாஅய்க் கிடந்த கோலக் கோணத்துக்
கலாஅய்க் கிடந்து கவ்விய கொழுந்தின்
வள்ளியு மலரும் கொள்வழிக் கொளீஇ
வலமுறை வகுத்த நலமுறை நன்னகர்
------------
-
2410. நலங்கிளர் காணமு மணியு நன்பொனும்
வலம்புரி முத்தமுங் குவித்த மங்கல
மிலங்கின மணிவிளக் கெழுந்த தீம்புகை
கலந்தவா யிரத்தெண்மர் கவரி யேந்தினார்.
விளக்கம் : காணம் - பொற்காசு. குவித்த : பலவறிசொல். குவிக்கப்பட்டன என்க. தீம்புகை - இனிய நறுமணப்புகை. கலந்த : பலவறி சொல். ( 33 )
------------
-
2411. மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்
மங்கல மன்னவன் வாழ்த்த வேறலு
மங்கல வச்சுதந் தெளித்து வாய்மொழி
மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார்.
விளக்கம் : உறுத்தி - உறுத்த. மங்கலப் பெருங்கணி - மங்கலப் பொழுதினை ஆராய்ந்து கூறும் அரசவைக் கணியன். ஓரை - முழுத்தம். மன்னவன் மங்கலம் வாழ்த்த என மாறுக. அச்சுதம் - அரிசி. கருவி - மயிர்க்கத்தி. நாவிதன் கருவி முன்னுறுத்த வாழ்த்தினார் என்க. ( 34 )
------------
-
2412. முழங்கின வின்னிய மொய்த்த தேத்தொலி
கொழுங்கயற் கண்ணினார் கொண்டு பொன்னக
லிழிந்தனர் திருமயி ரேற்ப நீரதி
னிழன்றன சாமரை நிரைசங் கார்த்தவே.
விளக்கம் : திருமயிர் : சீவகன் தலையிலிருந்து மஞ்சிகனாற் கழிக்கப் பட்டது. இன்னியம் - இனிய இசைக்கருவிகள், ஏத்து ஒலி : வினைத்தொகை கண்ணினார், திருமயிரைப் பொன்னகலிலே ஏற்பக்கொண்டு இழிந்தார் என்க. ( 35 )
------------
-
2413. பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி
போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையை
நாட்கடி மயிர்வினை நன்பொற் றாமரைப்
பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார்.
விளக்கம் : கடிக்கோயில் என்றும் பாடம். மயிர்வினை மணம் என்பது புருவம் ஒதுக்குதல் என்பர். இங்ஙனம் மண மகட்குப் புருவமொதுக்கும் வாக்கத்தினை,
-
எதிர்நோக் காற்றா இலங்கிழை முகத்தையும்
மதிமாசு கழீஇய வண்ணம் போலக்
கதிர்மே லிலங்கக் கைவினை முடித்தபின்
வேறு
------------
-
2414. விரைத்தலை மாலை சூட்டி
மின்னனா ரங்கை சேப்ப
வரைத்தசாந் தணிந்த கோட்ட
வாயிரத் தெட்டு வேழ
நிரைத்தன மண்ணு நீர்க்கு
முரசொடு முழவம் விம்ம
வரைத்தலைத் துவலை போன்று
மதநில நனைப்ப வன்றே.
விளக்கம் : விரை - மணம். அங்கை - உள்ளங்கை. சேப்ப - சிவக்கும்படி, மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய நீர். மண்ணுநீர் ஆயிரத்தெட்டு யானைகள் மேலேற்றி வருதலை கோல் யானை நாலிரண்டு மிகையா ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் எனவரும் கதை யானும் (2 - 2 :202, 4) உணர்க. எட்டுடன் கூடிய நூறு ஆயிரம் முதலிய எண்களே சிறப்புடைத்தாதல் தெய்வ அருச்சனை முறையாற் காண்க. ( 37 )
------------
-
2415. கான்முகம் புதைத்த தெண்ணீர்
கவர்ந்துபொற் குடங்க ளார்த்தி
யூன்முகம் புதைத்த வேற்கண்
ணவர்களிற் றுச்சி யேற்றி
வான்முகம் புதைத்த பன்மீன்
மதியென மருண்டு நோக்கத்
தேன்முகம் புதைத்த மாலைக்
குடைநிழற் றிருவிற் றந்தார்.
விளக்கம் : குடங்கட்குப் பன்னிறமுடைமையானும், சிறுமை பெருமையானும் மீனும் திங்களும் உவமையாயின. ( 38 )
------------
-
2416. இழைத்தபொன் னகரின் வெள்ளி
யிடுமணை மன்ன ரேத்தக்
குழைப்பொலிந் திலங்கு காதிற்
கொற்றவ னிருந்த பின்றை
மழைக்கலின் றெழுந்த வார்கொண்
மணிநிற வறுகை நெய்தோய்த்
தெழிற்குழை திருவில் வீச
மகளிர்நெய் யேற்று கின்றார்.
விளக்கம் : பொன்னகர் என்றது மணவறையை. இடுமணை : வினைத்தொகை. கொற்றவன் : சீவகன். பின்றை - பின்பு. மழைக்குக் கவின் றெழுந்த என்க. மணி - நீலமணி. அறுகை - அறுகம்புல். நெய் யேற்றுதல் - ஒரு சடங்கு. ( 39 )
------------
-
2417. மின்னுமிழ் வைரக் கோட்டு
விளங்கொளி யிமய மென்னும்
பொன்னெடுங் குன்றம் போலப்
பூமிமே னிலவி வைய
நின்னடி நிழலின் வைக
நேமியஞ் செல்வ னாகி
மன்னுவாய் திருவோ டென்று
வாழ்த்திநெய் யேற்றி னாரே.
விளக்கம் : வயிரம் என்னும் மணி பிறத்தற்கிடமான கோடு என்க. வையம் - உலகம். நேமியஞ் செல்வன் - சக்கரவாளத்திற்குத் தலைவன். திரு - ஈண்டிலக்கணை. ( 40 )
------------
-
2418. நீடு நீர்மணி நீரு மல்லவு
மாடு நீரன வத்து மண்களு
மூடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார்
கூடி யின்னியங் குழுமி யார்த்தவே.
விளக்கம் : அல்ல என்றது துவரையும் மண்ணையும் ஒழிந்த ஐந்து விரையும் முப்பத்திருவகை ஓமாலிகையுமாம். பத்து மண் என்றும் பாடம்.
மண்ணாவன:
-
ஆனையே றேனக்கோ டாற்றங் கரைபுற்று
வானவர்தங் கோயிலெழில் வான்கழனி - பானிலவு
முத்தெரியும் வெண்டிரைநீர் மூதூர் வடதருவேர்
பத்துமிதன் மண்ணாகப் பார்.
------------
-
2419. திருவ மன்னவன் சென்னித் தேர்மன்னர்
பொருவெண் பொற்குட முமிழும் பொங்குநீர்
பருதி தன்னொளி மறையப் பான்மதி
சொரியுந் தீங்கதிர்த் தோற்ற மொத்தவே.
விளக்கம் : திருவ : அ : அசை. வெண்பொன் : வெள்ளி. மன்னவன் : சீவகன். பருதி - ஞாயிறு; சீவகனுக்குவமை. மதி சொரியும் தீங்கதிர் - வெள்ளிக்குடத்து நீர்க்குவமை. ( 42 )
------------
-
2420. துளங்கு மாமணித் தூண்க ணான்கினால்
விளங்கு வெள்ளிவேய்ந் தாய்ந்த மாலைசூழ்
வளங்கொண் மாமணிக் கூடஞ் சேர்த்தினா
ரிளங்க திர்கொலோ விருந்த தென்னவே.
விளக்கம் : மணித்தூண் நான்கினால் விளங்கு கூடம், வெள்ளியால் வேய்ந்து மாலைசூழ் கூடம் என இயைக்க.( 43 )
------------
-
2421. ஆய்ந்த பானிற மாய்பொற் கம்பலம்
வேய்ந்த பொங்கணை வெண்பொற் கட்டின்மே
னீந்து நித்தில விதான நீழலாற்
கேந்தி னாரணி யேந்து நீர்மையாற்.
விளக்கம் : ஆய்தல் - உள்ளதன் நுணுக்கம் (தொல். உரி. 52.) மானிற ஆய்பொன் என்றும் பாடம். ( 44 )
------------
-
2422. ஈரங் கொன்றபி னிருண்ம ணிச்சுடர்
நீர வாய்நிழ லுமிழுங் குஞ்சியை
யார கிற்புகை வெறியி னாலமைத்
தேர்ப டச்செய்தா ரெழுதிற் றென்னவே.
விளக்கம் : ஈரம் கொன்று என்றது ஈரம் இல்லையாய் உணர்த்திய பின்னர் என்றவாறு. இருள் மணி - நீலமணி. நீரவாய் - இயல்புடையனவாக. நிழல் - ஒளி. குஞ்சி - ஆண்மயிர் வெறி - மணம். ஏர் - அழகு. ( 45 )
------------
-
2423. ஈடில் சந்தன மேந்து தாமரைத்
தோடின் பயில்வினாற் பூசித் தூமலர்
வீடு பெற்றன வின்றொ டென்னவே
சூடி னானரோ சுரும்புண் கண்ணியே.
விளக்கம் : ஈடு என்பது இடுதல் என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். வீடு பெற்றன என்றது, இவன் சூடிய மலர் பெற்ற அழகு தாம் குடுங்காலத்திற் பிறவாமை கண்டு, எல்லோரும் தம்மைச் சூடுந் தன்மையைக் கைவிடுதலை மலர் பெற்ற என்றவாறு என்று விளக்கங் கூறுவர் அவர். ( 46 )
------------
-
2424. மற்ப கம்மலர்ந் தகன்ற மார்பின்மேல்
விற்ப கக்குலா யாரம் வில்லிடக்
கற்ப கம்மலர்ந் தகன்ற தோவெனப்
பொற்ப கப்பொலங் கலங்க டாங்கினான்.
விளக்கம் : பக மலர்ந்து எனற்பாலது வண்ணநோக்கி வருமொழி மகரம் விரிந்து நின்றது. பக - நீங்க. வில் - இந்திர வில். பொற்பை அகத்தேயுடைய என்க. ( 47 )
------------
-
2425. உருவ மார்ந்தன வுரோமப் பட்டுடுத்
தெரியும் வார்குழை சுடர விந்திர
திருவி லன்னதார் திளைப்பத் தேங்குழ
லரிபெய் கண்ணியர்க் கநங்க னாயினான்.
விளக்கம் : செயவென் எச்சங்கள் ஆன் வந்தியையும் வினை நிலையான் (தொல். வினை. 35) முடிந்தன. இவளை யொழிந்தார்க்கு அரியனாய் வருத்துதலின், அநங்கன் என்றார். ( 48 )
------------
-
2426. தாவி றாழ்வடந் தயங்க நீருறீஇ
மேலி யச்சுதந் தெளித்த பின்விரைந்
தாவி யம்புகை சுழற்றி யாடியும்
வீவில் வெஞ்சுடர் விளக்குங் காட்டினார்.
விளக்கம் : ஆவி அம்புகை : வினைத்தொகை. இவை காட்டல் இயல்பு. தா - குற்றம். தயங்க - விளங்க. அச்சுதம் - அரிசி. ஆவி - ஆவித்த; வாய்விட்ட, ஆடி - கண்ணாடி. வீவு - அவிதல். ( 49 )
------------
-
2427. உவரி மாக்கட லொல்லென் வெண்டிரை
யிவரி யெழுவபோன் றிலங்கு வெண்மயிர்க்
கவரித் தொகைபல வீசுங் காவல்
ரிவரித் தொகையென்ப தின்றி யாயினார்.
விளக்கம் : கவரி என்பது மானின் பெயராய் அதன் மயிரைக் குறித்தமையால் முதல் ஆகுபெயர்; வெண்மயிர் என்பது கவரிக்கு அடை ஆகையால் அடையெடுத்த ஆகுபெயர். இத் தொகையர் எனற்பாலது இத்தொகை என வந்தது செய்யுள் விகாரம். ( 50 )
------------
-
2428. அறுகு வெண்மல ரளாய வாசநீ
ரிறைவன் சேவடி கழுவி யேந்திய
மறுவின் மங்கலங் காட்டி னார்மணக்
குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே.
விளக்கம் : அளாய் - கலந்து, இறைவன்; அருகக்கடவுள் மங்கலம் - அட்டமங்கலம். குறைவில் கைவினை மணக்கோலம் என மாறுக. ( 51 )
------------
-
வேறு
2429. ஊனிமிர் கதிர்வெள்வே லுறைகழித் தனபோலுந்
தேனிமிர் குவளைக்கட் டிருமக் ளனையாளைப்
பானிமிர் கதிர்வெள்ளி மணைமிசைப் பலர்வாழ்த்தி
வானிமிர் கொடியன்னார் மணியணை மிசைவைத்தார்.
விளக்கம் : உறை கழித்த வெள்வேல் என்றவாறு. வேல் கண், குவளைக்கண் என இயைக்க. திருமகள் அனையாள் - ஈண்டிலக்கணை. பால்போலப் பரந்த கதிரையுடைய என்க. வானிமிர்கொடி - காமவல்லி. மணைமிசை மணியணைமிசை என இயைக்க. ( 52 )
------------
-
2430. வரைவிளை வளர்பொன்னே வலம்புரி யொருமணியே
திரைவிளை யமிர்தம்மே திருவிழை யெனவேத்தி
வரிவளை முழவிம்ம மணிகிள ரொலியைம்பா
லரைவிளை கலைநல்லா ரறுகினெய் யணிந்தனரே.
விளக்கம் : ஏகாரம்: தேற்றம். திருவிழைக என்று பாடமாயின். ஏகாரங்களை விளியாக்கி நின்னைத் திருவிரும்புக என்க. அரசு என்னும் பண்புப் பெயர். அரை என்று பண்பு மாத்திரையை விளக்கிற்றென்பர் நச்சினார்க்கினியர். ( 53 )
------------
-
2431. கள்ளவிழ் கமழ்கோதைக் காவலன் றிருமகளை
வெள்ளணி மதயானை விழுமணிக் குடமேற்றித்
தெள்ளறன் மண்ணுந்நீ ராட்டினர் தேமலர்மே
லொள்ளிழை யவளொத்தா ளுருவநுண் ணுசுப்பின்னாள்.
விளக்கம் : இருபக்கமும் யானைகளை நிறுத்தி அவற்றின் மேலிருந்து நீராலே ஆட்டுதலின் திருமகளைப் போன்றாள். திருமகளின் இருபக்கமும் யானைகள் இருக்குமென்பர். ( 54 )
------------
-
2432. வான்மலர் நுரைசூடி மணியணி கலன்சிந்தாத்
தானிள மணலெக்கர்த் தவழ்கதிர் மணியார
மேனைய நறுஞ்சுண்ணங் குங்கும மிடுங்களியாத்
தேனின் மிசைபாடத் தீம்புன னடந்தஃதே.
விளக்கம் : தான் : அசை. வான் - சிறந்த. மலராகிய நுரையைச் சூடி என்க. சிந்தா - சிந்தி. இளமணலாலிடும் எக்கராக என்க. இடுங்களியர் - இடாநின்ற வண்டலாக. நடந்ததே என்பது நடந்தஃதே என விரித்தல் விகாரம் பெற்றது. ( 55 )
------------
-
2433. நான்றபொன் மணிமாலை நகுகதிர்ப் பவளத்தூ
ணூன்றின வொளிமுத்த மண்டபத் தொளிர்திங்கள்
கான்றன கதிர்காய்த்தும் வட்டணைக் கதிர்முத்த
மீன்றபொன் விதானத்தின் னீழலுய்த் திரீஇயினரே.
விளக்கம் : மாலை நான்ற தூண்; பவளத்தூண் என இயைக்க ஊன்றின - ஊன்றப் பட்ட கான்றனவாகிய கதிர் என்க. ( 56 )
------------
-
2434. மையணி மதயானை மத்தக வகலல்கு
னெய்யணி குழன்மாலை நிழலுமிழ் குழைமங்கை
மெய்யணி கலன்மாலை மின்னிருந் துகிலேந்திக்
கையணி குழன்மாலைக் கதிர்முலை யவர்சூழ்ந்தார்.
விளக்கம் : கையணி : கைசெய்யப்பட்ட என்றுமாம். மத்தகம் போலும் அகலல்குல் என்க. நிழல் - ஒளி. மங்கை : இலக்கணை. முலையவர் : பணிமகளிர். ( 57 )
------------
-
2435. அவ்வளை யவிராழிக் கால்பொலிந் தழகார்ந்த
மைவிளை கழுநீர்க்கண் விலாசியு மணியல்குற்
கைவளை யலங்கார மாலையுங் கமழ்கோதை
நைவள மிகுசாய னங்கையைப் புனைகின்றார்.
விளக்கம் : மைவிளை கழுநீர் - நீலோற்பலம். அ + வளை - அழகிய வளையல். அவிராழி : வினைத்தொகை. மை - கருமை. விலாசி, அலங்காரமாலை என்போர் இலக்கணையின் தோழியர். நைவளம் - ஒரு பண். புனைதல் - ஒப்பனை செய்தல். ( 58 )
------------
-
2436. யானையு ளரசன்றன் னணிகிளர் வலமருப்பீர்ந்
தூனமி லொளிர்செம்பொன் பதித்தொளி மணியழுத்தி
வான்மண முறச்செய்த மங்கல மணிச்சீப்புத்
தான்முகில் கழிமதிபோற் றன்னுறை நீக்கினளே.
விளக்கம் : யானையுளரசன் - யூகநாதன், ஈர்ந்து அரிந்து. ஊனம் - குற்றம். உறைக்கு முகிலும், சீப்பிற்குத் திங்களும் உவமை. (59)
------------
-
வேறு
2437. மைந்நூற் றனைய மாவீ ழோதி
வகுத்துந் தொகுத்தும் விரித்துங்
கைந்நூற் றிறத்திற் கலப்ப வாரிக்
கமழு நானக் கலவை
யைந்நூற் றிறத்தின் னகிலின் னாவி
யளைந்து கமழ வூட்டி
யெந்நூற் றிறமு முணர்வா ளெழிலேற்
றிமிலின் னேற்ப முடித்தாள்.
விளக்கம் : கையால் முடித்தாள். குழலையும் அளகத்தையும் வகுத்தும், கொண்டையைத் தொகுத்தும், பனிச்சையையும் துஞ்சையையும் விரித்தும் முடித்தாள். ( 60 )
------------
-
2438. கரும்புந் தேனும் மமிழ்தும் பாலுங்
கலந்த தீஞ்சொன் மடவாட்
கரும்பும் மிலையு மயக்கி யாய்ந்த
முல்லைச் சூட்டு மிலைச்சித்
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னிற்
செம்பொற் பட்டஞ் சேர்த்தி
விரும்பும் முத்தம் மாலை நான்ற
விழுப்பொன் மகரஞ் செறிந்தாள்.
விளக்கம் : மடவாள் : இலக்கணை. மயக்கி - இடையிடையே விரவி. முல்லைச்சூட்டு கற்பிற்கறிகுறியாகச் சூடுதல் மரபு. மிலைச்சி - சூட்டி. திங்கள் - நெற்றிக்குவமை. மின் - பட்டத்திற்குவமை. மகரம் - ஓரணிகலன். முல்லை சான்ற முல்லையும் என்றதனால் முல்லை மலர்மாலை கற்பின் சிறந்த அடையாளம் என்பது தெளியப்படும். ( 61 )
------------
-
2439. கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்
கமழ்பூ நெரித்து வாங்கிக்
கிள்ளை வளைவா ருகிரிற் கிள்ளித்
திலகந் திகழப் பொறித்துத்
தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்
திருநீர் நுதலின் னப்பி
யுள்ளம் பருகி மதர்த்த வாட்கண்
ணுருவம் மையிற் புனைந்தாள்.
விளக்கம் : பொறித்து - எழுதினாற் போல வைத்து. கள்ளும் என்பதற்கு - களவுகாணும் எனப் பொருள் கூறி கிள்ளையின் வளைவாய்தான் தன் றன்மையைக் கள்ளும் என்றார்; கமழ்தேனும் பொசியும் அளவன்றி ஒழுகும் குவளைப்பூ என்க என்றார் நச்சினார்க்கினியர். வண்டு ஒழுகும் என்றல் மரபன்று என்று கருதி இங்ஙனம் கூறினர். கணவனுள்ளத்தைப் பருகி என்க. ( 62 )
------------
-
2440. நாகம் மருப்பி னியன்ற தோடுந்
நலங்கொள் கறவுக் குழையும்
போக நீக்கிப் பொருவிஃ றிருவில்
லுமிழ்ந்து மின்னுப் பொழியு
மேக மாகி யெரியும் மணியின்
னியன்ற கடிப்பு வாங்கி
மேக விசும்பிற் றேவர் விழைய
விளங்கச் சேர்த்தி னாளே.
விளக்கம் : தேவர் : ஈண்டுப் பெண்பண்பை யென்பர் நச்சினார்க்கினியர். நாகம் மருப்பு - மகரவொற்று வண்ண நோக்கிக் கெடாது நின்றது. நாகம் - யானை. சுறவுக்குழை - மகரக்குழை. இல்திருவில் - லகரம் ஆய்தமாகத் திரிந்தது. மின்னு - மின்னல். கடிப்பு - ஒரு செவியணிகலன். தேவர் - தேவமகளிர். ( 63 )
------------
-
வேறு
2441. விலங்கரம் பொருத சங்கின்
வெள்வளை தெளிர்க்கு முன்கை
நலங்கிளர் பவள நன்பொன்
விரன்மணி யாழி மின்னக்
கலந்தின்று பணைத்த தோளுங்
கவின்வளர் கழுத்து மார்ந்த
வலம்புரி யீன்ற மூத்த
மணிநிலா நக்க வன்றே.
விளக்கம் : சங்கின் : இன் : அசை என்பர் நச்சினார்க்கினியர். விலங்கு - வளைந்த. அரம் - ஈர்வாள். தெளிர்க்கும் - ஒலிக்கும். பவளவிரல், நன்பொன் மணியாழி என மாறுக, கலம் - அணிகலம். கவின் - அழகு, நக்க - கெடுத்தன. ( 64 )
------------
-
2442. மாமணி முகடு வேய்ந்த
மரகத மணிச்செப் பன்ன
தூமணி முலைக டம்மைத்
தொழுதகக் கமழுஞ் சாந்திற்
காமரு காம வல்லிக்
கொடிகவின் கொண்டு பூத்துத்
தூமணிக் கொழுந்து மென்றோட்
டுயல்வர வெழுதி னாளே.
விளக்கம் : மாமணி : அணிகலன். மரகதம் - முலைக்கண்ணுக்கும் மணிச் செப்பு - முலைக்கும் உவமை. நச்சினார்க்கினியர், மரகதமணியைத் தலையிலே அழுத்திய பெரிய பவழச் செப்பு. இவள் நிறம் பவழத்தின் நிறமென்றார் பலவிடத்தும் என்பர். ( 65 )
------------
-
2443. நாண்சுமக் கலாத நங்கை
நகைமின்னு நுசுப்பு நோவப்
பூண்சுமக் கலாத பொன்ஞாண்
வடத்தொடு புரள நோக்கிப்
பாண்குலாய் வண்டு பாடும்
படுகணை மறந்து காமன்
காண்கிலேன் கடிய வென்னா
வுருகிமெய் கரந்திட் டானே.
விளக்கம் : மெய் கரந்திட்டான் என்றது அநங்கனானான் என்றபடி. சுமக்கலாத நாண் உடைய நங்கை என இயைக்க. பெண்மைப் பண்பு நான்கனுள் நாணமே சிறந்தமை பற்றி அதன் மிகுதி கூறுவார் இங்ஙனம் கூறினர். நகை - ஒளி. சுமக்கலாத பூண் பொன்ஞாண் வடத்தொடு புரள என மாறுக. ( 66 )
------------
-
2444. அவாக்கிடந் தகன்ற வல்கு
லணிகிளர் திருவிற் பூப்பத்
தவாக்கதிர்க் காசு கண்டா
ராவியைத் தளரச் சூட்டிக்
கவாய்க்கிடந் தணங்கு நாறுங்
கண்கொளாப் பட்டு டுத்தா
ளுவாக்கதிர்க் திங்க ளம்மென்
கதிர்விரித் துடுத்த தொத்தாள்.
விளக்கம் : ஆவியை : ஐ : அசை. கண்கொளா - இழை தெரியாத. இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம் (மலைபடு. 561). அணிந்தாள் என்று பாடமாயின், விலாசி அணிந்தாள் என்க. ( 67 )
------------
-
2445. இடைச்செறி குறங்கு கௌவிக்
கிம்புரி யிளக மின்னும்
புடைச்சிறு பரடு புல்லிக்
கிண்கிணி சிலம்போ டார்ப்ப
நடைச்சிறு பாதங் கோல
மணிவிர லணிந்து நாகத்
துடைச்சிறு நாவிற் றோகை
யிரீஇயினண் மாலை சேர்ந்தாள்.
விளக்கம் : குறங்குசெறி - துடையில் அணியும் ஓரணிகலன். குறங்கு - துடை. கிம்புரி இடைச்செறி என மாறுக. நாகத்தடை - நாகத்தினுடைய. தோகை - முன்றானை : உவமவாகுபெயர், இரீஇயினாள் - வைத்தாள். மாலை - அலங்காரமாலை; தோழி. ( 68 )
------------
-
2446. அம்மல ரடியுங் கையு
மணிகிளர் பவழ வாயுஞ்
செம்மலர் நுதலு நாவுந்
திருந்தொளி யுகிரோ டங்கேழ்
விம்மிதப் பட்டு வீழ
வலத்தக மெழுதி யிட்டா
ளம்மலர்க் கண்ட முள்ளிட்
டரிவையைத் தெரிவை தானே.
விளக்கம் : இக் கோலம் பிற்காலத்தில் வழங்கப் பெறாதாயிற் றென்பர். அ மலர் அடி - அழகிய மலர்போலும் அடி, அணி - அழகு, உகிர் - நகம், விம்மிதம் - வியப்பு, கண்டம் - கழுத்து. அரிவை என்றது இலக்கணையை தெரிவை - அலங்காராமாலை. செம்மலர் - நெற்றிமாலை என்பர் நச்சினார்க்கினியர். ( 69 )
------------
-
2447. வாண்மதர் மழைக்க ணோக்கி
வருமுலைத் தடமு நோக்கிக்
காண்வர வகன்ற வல்குற்
கண்விருப் புற்று நோக்கிப்
பாணுவண் டாற்றுங் கோலச்
சிகழிகைப் படியு நோக்கி
யாண்விருப் புற்று நின்றா
ரவ்வளைத் தோளி னாரே.
விளக்கம் : வாள்கண், மதர்க்கண், மழைக்கண் என்க. வருமுலை : வினைத்தொகை காண் - அழகு : காட்சி, பாணு - பண், சிகழிகை - மயிர்முடி. ( 70 )
------------
-
வேறு
2448. தெருள்கலான் படைத்தவன் காணிற் செவ்வனே
மருள்கலா தவர்களு மருள்வர் மம்மர்நோ
யிருளிலா ரெங்ஙன முய்வ ரின்னதா
லருளிலா ரவணல மணிந்த வண்ணமே.
விளக்கம் : மருள்கலாதவர் - துறவியர். இருளையுடைய இல்லார், என்க. இல்லார் - இல்லறத்தோர். வண்ணம் இன்னது என மாறுக. ( 71 )
------------
-
2449. அலர்ந்தவந் தாமரை யல்லிப் பாவையைப்
புலந்துகண் சிவந்தன போன்று நீர்பிரிந்
திலங்கிமின் னுமிழ்ந்துலா மேனி யேந்துபொன்
மலர்ந்ததோர் கற்பக மணிக்கொம் பாயினாள்.
விளக்கம் : திருவை நிகராகக் கூறுதற்குப் புலந்து சீறினாள் போன்றிருந்தது என்றார், கண்கள் மையெழுதுதலாற் சிவந்துநீர் சொரிதலை. இது தற்குறிப்பேற்றம். கண்ணுக்குக் குளிர்ச்சியும் அழகும் தரும் மையாகிய அஞ்சனத்தைக் கண்ணில் அகமும் புறமும் எழுதுதலால் கண் கரித்து நீர் சிந்திச் சிவந்தது. ( 72 )
------------
-
2450. மருடகு மல்லிகை மாலை வல்லவன்
பொருடகத் தொடுத்தன் புனைந்த பூஞ்சிகை
யிருடுணித் திடையிடை யியற்றி வெண்ணிலாச்
சுருடுணித் தொருவழித் தொகுத்த தொத்ததே.
விளக்கம் : மருள் - மயக்கம். பொருள் எழுத்திற்கு ஆகுபெயர். கூந்தலுக்கு இருளும், மல்லிகைப்பூவிற்கு வெண்ணிலாவும் உவமை. ( 73 )
------------
-
2451. கோமக ளுருவமாய்க் கூற்றம் போந்தது
போமினும் முயிருயக் கொண்டு போய்மனங்
காமின் மெனக்கலை சிலம்பு கிண்கிணி
தாமனும் வாயினாற் சாற்று கின்றவே.
விளக்கம் : காமினம் : அம் : அசை, மனும் : மன்னும் என்பதன் விகாரம். ( 74 )
------------
-
2452. அருளிலா ரிவடம ரன்ன ராயினு
முருடிரை யுலகெலா முருளு மின்றெனக்
கருதின கவரிசாந் தாற்றி வெண்குடை
யரிவையை மறைத்தன வால வட்டமே.
விளக்கம் : உலகம் கெடுமென அறிந்தும் இவளை அணிந்துவிட்ட உறவினர் அருளிலராயிருந்தார் என்று கருதினபோல இவை மறைத்தன, இது தற்குறிப்பேற்ற அணி. ( 75 )
------------
-
வேறு
2453. கரும்பே தேனே யமிர்தே காமர் மணியாழே
யரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மே
சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும்
பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே.
விளக்கம் : அடுத்த செய்யுளுடன் இஃது ஒரு தொடர். கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாயிருத்தலின், கரும்பு. நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு இயற்றலின், தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியுங் கொடுத்தலின், அமிர்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றுவித்தலின், யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின், திரு. நடையால், அன்னம், சாயலால். மயில். காலமன்றியும் கேட்டோர்க்கு இன்பஞ் செய்தலின், குயில். மன்னன் மகளே யென்றல் புகழன்மையின், மன்னன் பாவாயென்றது. அவன் கண்மணிப் பாவை யென்பதுணர்த்திற்று : இனி, இவள் கொல்லிப் பாவையல்லள் மன்னன் பாவை என்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின், பூவை. நோக்கத்தால். மான். நச்சினார்க்கினியர் மழலை மணியாழ் என்று கூட்டுவர். ( 76 )
------------
-
2454. அம்மெல் லனிச்சம் மலரு மன்னத் தூவியும்
வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் னிலவப் பூம்போ தனநின் னடிபோற்றி
இம்மென் கலையா ரிடுவென் றேத்த வொதுங்கினாள்.
விளக்கம் : அனிச்சமு மன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
என்றார் வள்ளுவனாரும் : (1120) இம் மென்னும் - ஒலிக்குறிப்பு. கலை - மேகலையணி. ஒதுங்கல் - நடத்தல். ( 77 )
------------
-
2455. தூமாண் டுமக் குடமா யிரமாய்ச் சுடர்பொற்றூண்
டாமாயிரமாய்த் தகையார் மணித்தூ ணொருநூறாய்ப்
பூமாண் டாமத் தொகையாற் பொலிந்த குளிர்பந்தர்
வேமா னியர்தம் மகளின் விரும்ப நனிசேர்ந்தாள்.
விளக்கம் : தூமக்குடம் ஆயிரமாய்ப் பொற்றூண் ஆயிரமாய் விளங்கும் பந்தரிலே, மணித்தூண் நூறாய்த் தாமத்தாற் பொலிந்த வேள்விச்சாலை என்பர் நச்சினார்க்கினியர்; தாவிரி வேள்விச்சாலை எனப் பின்னர் 2490 ஆம் செய்யுளில் வருவது கொண்டு கூறினார். ( 78 )
------------
-
2456. தேனார் காமன் சிலையுங் கணையுந் திறைகொண்ட
வானார் மதிவாண் முகமும் மடமான் மதர்நேர்க்குங்
கோனார் மகடன் வடிவு நோக்கிக் குடைமன்ன
ரானார் கண்ணூ டழல்போ யமையா ரானாரே.
விளக்கம் : காமன் வில்லையும் தேனார் கணையையும் வென்ற புருவமுங் கண்ணும் முகத்திற்கு அடை. ( 79 )
------------
-
வேறு
2457. வண்டலர் கோதை வாட்கண்
வனமுலை வளர்த்த தாயர்
கண்டுயி ருண்ணுங் கூற்றங்
கயிறுரீஇக் காட்டி யிட்டா
ருண்டுயிர் சிலர்கண் வாழ்கென்
றுத்தரா சங்கம் வைத்தார்
தெண்டிரை வேலி யெங்குந்
தீதின தாக மாதோ.
விளக்கம் : கண்ணையும் முலையையும் கூற்றமென்றே கண்டிருந்தும் என்க. காட்டியிட்டார்; ஒருசொல். உத்தராசங்கம் - மேலாடை. உத்தராசங்கமிட் டொளிக்குங் கூற்றமே என்றார் கம்பநாடரும் (எழுச்சிப் - 17.) ( 80 )
------------
-
2458. கண்ணினா லின்று கண்டாங்
கூற்றினைக் காமர் செவ்வா
யொண்ணுத லுருவக் கோலத்
தொருபிடி நுசுப்பிற் றீஞ்சொல்
வண்ணித்த லாவ தில்லா
வருமுலை மதர்வை நோக்கிற்
பெண்ணுடைப் பேதை நீர்மைப்
பெருந்தடங் கண்ணிற் றம்மா.
விளக்கம் : அம்மா : வியப்பிடைச்சொல்.
-
பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு
( 81 )
------------
-
2459. அரத்தக மருளிச் செய்த
சீறடி யளிய தம்மாற்
குரற்சிலம் பொலிப்பச் சென்னிக்
குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான்
றிருக்குவாய்க் கிடந்த மார்பிற்
சீவக னாங்க ளெல்லாந்
தரித்திலந் தவத்தை யென்று
தார்மன்ன ரேமுற் றாரே.
விளக்கம் : மருளி - மருள : எச்சத்திரிபு. அரத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. அளிய - அளிக்கத்தக்கன. சென்னிக்குஞ்சி - தலைமயிர்.
( 82 )
------------
-
2460. கோவிந்த னென்னுஞ் செம்பொற்
குன்றின்மேற் பிறந்து கூர்வேற்
சீவக னென்னுஞ் செந்நீர்ப்
பவளமா கடலுட் பாய்வான்
பூவுந்தி யமுத யாறு
பூங்கொடி நுடங்கப் போந்து
தாவிரி வேள்விச் சாலை
மடுவினுட் டாழ்ந்த தன்றே.
விளக்கம் : செந்நீர் - புதுநீர். உந்தி, கொப்பூழையும் ஆற்றிடைக் குறையையும்; கொடி, இடையையும் படர்கொடியையும் உணர்த்தும். பூவுந்தி : உவமமும் வேற்றுமையுந் தொக்கன என்பர் நச்சினார்க்கினியர். ( 83 )
------------
-
2461. சாணிடை நெடிய வாட்கண்
டளையவிழ் குவளை பூப்பப்
பூணுடை முலையின் பாரம்
பொறுக்கலாச் சுளிவின் மேலு
நாணட நடுங்கிக் கையா
னகைமுகம் புதைத்த தோற்றஞ்
சேணிடை யரவு சேர்ந்த
திங்களை யொத்த தன்றே.
விளக்கம் : கையிடையே கண் தோன்றுதலின், அலர்கின்றாற் போன்றது என்றார். நாணத்தால் முகம் புதைத்தாள். ( 84 )
------------
-
2462. முத்துமிழ் திரைக ளங்க
மொய்கொள் பா தால முத்தீ
யொத்தன வேலை வேள்வி
யொலிகட னான்கு நாண
வைத்தநான் மறையு நீந்தி
வான் குண மென்னுஞ் சாலி
வித்திமே லுலகத் தின்பம்
விளைத்து மெய் கண்டநீரார்.
விளக்கம் : அடுத்த செய்யுட்களுடன் தொடரும். மொய்கொள் பாதாலம் என்றது வடவாமுகாக்கினி; கடலிடையிலே பாதாலத்தே செல்ல நீரைவாங்குதலின், அதற்குப் பாதாலமென்று பெயர் கூறினார். குணம் : ஆகுபெயர். ( 85 )
------------
-
2463. தருமணற் றருப்பை யார்ந்த
சமிதையிம் மூன்றி னானும்
விரிமல ரணிந்த கோல
வேதிகை யியற்றி யானெ
யொருமணி யகலுட் பெய்தோர்
பொன்னக லார்ந்த தூப
மிருமணி யகலு ணீர்பெய்
திடவயி னிரீஇயி னாரே.
விளக்கம் : தருமணல்: தண்டிலார்த்தமாகக் கொண்டு வந்த மணல். தண்டிலமாவது தீயை வளர்க்குமிடத்தே சதுரமாகப் பரப்புகின்ற மணல். ஆர்ந்த சமிதை; சமிதைக்குக் கூறும் இலக்கணம் நிறைந்த சமிதை; என்றது பருதிகளையும் வேண்டும் சமிதைகளையும். வேதிகை : திருமணத்திற்கென விட்ட நான்கு தூண்களையுடைய திண்ணை. இயற்றுதலாவது : திண்ணையில் தீயை வளர்க்குமிடத்தே தண்டிலத்தைக் கற்பித்து அதிலே தீயை எழுப்பித் தருப்பையை நான்கு விளிம்பிலும் சூழவைத்துப் பருதிகளைக் கீழ்த்திசை ஒழிந்த திசைகளிலே வைத்தல் முதலியன. இருமணி அகல் என்றது பிரணீத பாத்திரமும் புரோட் சணீபாத்திரமும். ஒரு மணி அகல் ; ஆச்சியாஸ் தாலி. பொன் அகலார்ந்த தூபம் பெய்து என்றதுவும் மேற்செய்யுளில் ஆன்பாலவி யென்றதுவும் மதுபர்க்கார்த்தமாக வைத்தவை.
சங்கதாய வராய சமர்ப்யதே சுவாமிகாது வதூர் ஜல பூர்வகம்!.
ஸ்தாப்யதே விவாக மகீதலே பாவகோ விதிவத் மதுபர்க்க: !!
என்று திருமணத் திண்ணையிலே தீயை வளர்த்து மதுபர்க்கங் கூறினார். ( 86 )
------------
-
2464. நெற்பொரி நிறையப் பெய்து
நிழலுமிழ் செம்பொன் மூழிக்
கற்புரி கடவு ளான்பா
லவியொடு கலப்ப வைத்து
மூற்பெரி யானை யாகத்
தருப்பையான் முடிந்து மூன்று
பொற்புரி வரையும் பொய்தீர்
சமிதைக ளிரண்டும் வைத்தார்.
விளக்கம் : பொரி - இலாச ஹோமார்த்தமான பொரி. கற்புரி கடவுள் - அச்மா ரோபணார்த்தமான அம்மி. ஆன்பாலவி பாலும் நெய்யுங் கலந்தது. மூன்று பொற்புரிவரை யென்றது, தண்டிலத்தை மேற்கே தொடங்கிக் கிழக்கே முடியத் தெற்கில் விளிம்பிலம் நடுவிலும், வடக்கில் விளிம்பிலும் தெற்கே தொடங்கி வடக்கேமுடிய மேற்கே விளிம்பிலும் நடுவிலும், கிழக்கில் விளிம்பிலும் கீறின கீற்றுக்கள். தீயை எழுப்புவதற்கு முன்பே கீறுகின்றவற்றை ஈண்டுக் கூறினாரென்றுணர்க. முதன்மூன்று கீறிக் குறுக்கு மூன்று கீறுதல் தோன்றமுன் றென்றொழியாது பின்னரும் பொலிவு பெறப் புரிந்தவரை என்றார். மூன்று வரையைக்குண்டம் என்றல் பொருந்தாது. பொய்தீர் சமிதைகள் இரணடாவன : தென்கீழைக் கோடியிலும் வடகீறைக் கோடியிலும் வைக்கும் ஆகார சமிதைகள் இரண்டும். ( 87 )
------------
-
2465. மந்திர விதியின் மாண்ட
சிறுவிரற் றருப்பை சூழ்ந்து
முந்துநா மொழிந்த நெய்யை
முனைமுதிர் தருப்பை தன்னான்
மந்திரித் தமைய முக்கான்
மண்ணிமற் றதனை நீக்கிச்
சிந்தித்து மறையிற் செந்தீத்
தண்டிலத் தங்கண் வைத்தார்.
விளக்கம் : செந்தீக்கு அருகே நெய்யை வைத்தார். முனைமுதிர்ந்த நெய் என்பர் நச்சினார்க்கினியர். ( 88 )
------------
-
2466. தண்டிலத் தகத்திற் சாண்மே
லெண்விரற் சமிதை நானான்
கெண்டிசை யவரு மேத்தத்
துடுப்புநெய் சொரித லோடுங்
கொண்டழற் கடவுள் பொங்கி
வலஞ்சுழன் றெழுந்த தென்ப
தெண்டிரை வேலி யெங்குந்
திருவிளை யாட மாதோ.
விளக்கம் : என்ப : அசை. தண்டிலம் - ஓமம் பண்ணுதற்குக் குறிப்பிட்ட இடம். துடுப்பு - அகப்பை. தீ வலஞ்சுழன்று எழுந்தது உலகில் திருமிகுதற்கு ஏது வென்க. திரு - செல்வம். ( 89 )
------------
-
2467. கரையுடைத் துகிலிற் றோன்றுங்
காஞ்சன வட்டின் முந்நீர்த்
திரையிடை வியாழந் தோன்றத்
திண்பிணி முழுவுஞ் சங்கு
முரசொடு முழங்கி யார்ப்ப
மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப
வரசரு ளரச னாய்பொற்
கலசநீ ரங்கை யேற்றான்.
விளக்கம் : தீயை வளர்த்து நீர் விடுதலும் (உதகம் பண்ணுதலும்) உளதாதலின், இங்ஙனம் கூறினார்.( 90 )
------------
-
2468. குளிர்மதி கொண்ட நாகங்
கோளைவிடுக் கின்ற தேபோற்
றளிர்புரை கோதை மாதர்
தாமரை முகத்தைச் சேர்ந்த
வொளிர்வளைக் கையைச் செல்வன்
விடுத்தவ ளிடக்கை பற்றி
வளரெரி வலங்கொண் டாய்பொற்
கட்டிறா னேறி னானே.
விளக்கம் : தளிர் புரை கை எனவும், மாதர் விடுத்து எனவும் பிரித்துக்கூட்டுவர் நச்சினார்க்கினியர். பின் செய்தற்குரிய ஓமங்களையும் பண்ணிக் கைப்பிடித்துத் தீயை வலங் கொண்டான்; எனவே, பொரியால் உள்ள ஓமமும் அம்மியில் கால் வைத்ததும் பெற்றாம். கட்டில் - திருமணம் பண்ணி எழுந்திருந்து சாந்தியான கூத்தும் ஆலத்தியும் கண்டு அருந்ததி காணப் போமளவும் இருக்கும் கட்டில், இஃது அரசியல். ( 91 )
------------
-
2469. விளங்கொளி விசும்பிற் பூத்த
வருந்ததி காட்டி யான்பால்
வளங்கொளப் பூத்த கோல
மலரடி கழீஇய பின்றை
யிளங்கதிர்க் கலத்தி னேந்த
வயினிகண் டமர்ந்தி ருந்தான்
றுளங்கெயிற் றழுவை தொல்சீர்த்
தோகையோ டிருந்த தொத்தான்.
விளக்கம் : உண்ணாதிருத்தல் மரபு. உவமை : இல் பொருளுவமை. பூத்த - தோன்றிய. அருந்ததி - ஒரு விண்மீன். கழீஇய - கழுவிய. பின்றை - பின்னர். அயினி - அன்னம. உழுவை - புலி; சீவகனுக்குவமை. தோகை - மயில்; இலக்கணைக்குவமை. ( 92 )
------------
-
2470. பொன்னங் காழிற் பொலிந்த
முத்து விதானம் புணர்ந்துதேன்
மன்னு மாலை பலதாழ்ந்து
மணப்புகை விம்மி மல்கிய
வன்னத் தூவி யடர்பஞ்சி
யவிர்மயி ராதி யாகப்
பன்னிச் சொன்ன பதினைந்தும்
படுத்தார் பாவை மார்களே.
விளக்கம் : இது கட்டிலின் சிறப்புக் கூறியது. நச்சினார்க்கினியர் முற் செய்யுளையும் இதனையும் ஒரு தொடராக்கி, இப்படுக்கையிலே இலக்கணையோடு, மயிலுடன் புலி யிருந்தது போலச் சீவகன் இருந்தானெனக் காட்டுவர். ( 93 )
------------
-
வேறு
2471. பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனிமயிர் குளிர்ப்பன கண்கொ ளாதன
வெலிமயிர் போர்வைவைத் தெழினி வாங்கினா
ரொலிமயிரிச் சிகழிகை யுருவக் கொம்பனார்.
விளக்கம் : பனி - பனித்தல். கனிமயிர் - வேதற்குரிய மயிர். நுண்மையாற் கட்பொறி கதுவமாட்டாதன. எழினி - உருவுதிரை. ஒலிமயிர் : வினைத்தொகை. ஒலித்தல் - தழைத்தல். ( 94 )
------------
-
2472. விழுத்தகு மணிச்செவி வெண்பொற் கைவினை
யெழிற்பொலி படியக மிரண்டு பக்கமுந்
தொழிற்பட வைத்தனர் துளும்பு மேகலைக்
கழித்தவே லிரண்டுகண் டனைய கண்ணினார்.
விளக்கம் : செவி - படிக்கத்தின் உறுப்பு. வெண்பொன் - வெள்ளி. படியகம் - படிக்கம். இருவர்க்கும் தொழிற்பட என்க. துளும்பும் - அசையும். உறைகழித்த வேலென்க. ( 95 )
------------
-
வேறு
2473. அங்கருங் காலி சீவி
யூறவைத் தமைக்கப் பட்ட
செங்களி விராய காயுஞ்
செம்பழுக் காயுந் தீந்தே
னெங்கணுங் குளிர்த்த வின்னீ
ரிளம்பசுங் காயு மூன்றுந்
தங்களி செய்யக் கூட்டித்
தையலார் கைசெய் தாரே.
விளக்கம் : கருங்காலி - ஒருவகை மரம். செங்களி - சிவந்த குழம்பு. காய் - ஈண்டுக் களிப்பாக்கு. பழுக்காய் - முதிர்ந்த பாக்கு. பசுங்காய் - பச்சைப்பாக்கு. கைசெய்தல் - கலத்தல். ( 96 )
------------
-
2474. கைசெய்து கமழு நூறுங்
காழ்க்கும்வெள் ளிலையுங் காம
மெய்தநன் குணர்ந்த நீரா
ரின்முக வாச மூட்டிப்
பெய்தபொற் செப்பு மாலைப்
பெருமணிச் செப்புஞ் சுண்ணந்
தொய்யறப் பெய்த தூநீர்த்
தொடுகடற் பவளச் செப்பும்.
விளக்கம் : இஃது அடுத்த செய்யுளுடன் தொடர்ந்தது. நூறு - சுண்ணாம்பு. வெள்ளிலை - வெற்றிலை. நீரார் - தன்மையுடையோர். தொய் - குற்றம். தொடுகடல் : வினைத்தொகை. ( 97 )
------------
-
2475. தாமணி நானச் செப்புஞ் சலஞ்சலக் கலன்பெய் செப்புந்
தூமணித் துகில்க ளார்ந்த வலம்புரித் துலங்கு செப்புங்
காமநீர்க் காம வல்லி கவின்கொண்டு வளர்ந்த தேபோ
னாமவே னெடுங்கட் பாவை நயப்பன வேந்தி னாரே.
விளக்கம் : தாமம் - தாம் என ஈறு கெட்டது. சலஞ்சலம், வலம்புரி என்பன சங்கின் வகை. காமமாகிய நீர். காமவல்லி - ஒரு பூங்கொடி. கவின் - அழகு. நாமம் - அச்சம். பாவை : இலக்கணை. ( 98 )
------------
-
2476. விரிகதி ரார மின்னித்
தாரெனுந் திருவில் வீசிக்
குரிசின்மா மேகம் பெய்த
கொழும்புயற் காம மாரி
யரிவைதன் னெஞ்ச மென்னு
மகன்குள நிறைந்து வாட்கட்
கரியமை சேறு சிந்திக்
கலிங்குக டிறந்த வன்றே.
விளக்கம் : என்றது, அவன் விளைத்த காம இன்பம் நிறைதலின், உவமைக் கண்ணீர் வீழ்த்தின என்றவாறு. புயல் - நீர். புயலன்றலர் சடை ஏற்றவன் (சிற் - 240) என்றார். ( 99 )
------------
-
2477. தோக்கையந் துகிலி னாடன்
றுணைமுலை பொருது சேந்த
வேக்கொசி விலாத வில்லா
னிடுகொடி யகல மின்றேன்
றேக்கிவண் டிமிருங் கோதை
செல்வன்றா ருழக்க நைந்து
பூக்கொய்து துவண்ட கொம்பின்
பொற்பின ளாயி னாளே.
விளக்கம் : இதனால் இருவர் புணர்ச்சியும் கூறினார். தோக்கை - கொய்சகம். இடுகொடி - வினைத்தொகை. மார்பில் வரைந்திட்ட பூங்கொடி என்க. ஆடவர் மார்பில் பூங்கொடி வரையும் வழக்கத்தை, ஆடுகொடி அணிந்த வுயர் அலங்கல் வரை மார்பன் (2483) என்பதனானும் உணர்க. இடுகொடியை முலைக்கு அடையாக்குவர் நச்சினார்க்கினியர். பொருது என்னுந் தொழில்பற்றி யானை எனவும் மலை எனவும் உரைத்துக்கொள்க. ( 100 )
------------
-
2478. அணித்தகு பவள மேற்பக்
கடைந்துமுத் தழுத்தி யம்பொன்
றுணித்தடி விளிம்பு சேர்த்தித்
தொழுதகச் செய்த வண்கை
மணிச்சிரற் சிறகு நாண
வகுத்தசாந் தால வட்டம்
பணித்தகு மகளிர் வீசிப்
பாவையைக் குளிர்ப்பித் தாரே.
விளக்கம் : அணித்தகு - அழகிய. ஏற்ப - பொருந்தும்படி. தொழு - தொழுதல். வண்கை - வளப்பமுடைய கைப்பிடி. மணிச்சிரல் - அழகிய சிச்சிலிப் பறவை. சாந்தாலவட்டம் - ஒருவகை விசிறி. பணித்தொழிலிலே தகுதிபெற்ற மகளிர் என்றவாறு. பாவை : இலக்கணை. ( 101 )
------------
-
2479. சேந்து நீண்ட செழுந்தாமரைக் கண்களி
னேந்தி மாண்ட முலைக்கண்களி னெழுதிச்
சாந்த மாக மெழுதித்தகை மாமல
ராய்ந்து சூட்டி யவனஞ்சலி செய்தான்.
விளக்கம் : கூட்டத்திற்கு இடையீடு செய்தான் எனக் கருதி அவள் ஊடியதால் அவன் அஞ்சலி செய்தான் ஊடல் தீர்க்க. ( 102 )
------------
-
2480. மணிசெய் வீணை மழலைக்குழல் பாண்டிலோ
டணிசெய் கோதை யவர்பாடிய கீதம்
பணிவில் சாயல் பருகிப்பவ ளக்கொடி
மணியு முத்துமலர்ந் திட்டதொத் தாளே.
விளக்கம் : மணி - பவளம் : வாய்க்குவமை. இவர் பண்டு செய்த நிலைமை தோன்றப் பாடிய பாட்டினாற் சிறிது முறுவல் கொண்டாள் என்றார்; இவ்வாறு பாடுதல் மரபு. பாட்டுக்குப் பரிசில் கொடுத்தாள் என்றாற் போலவும் நின்றது. ( 103 )
------------
-
2481. எய்த்து நீர்ச்சிலம் பின்குரன் மேகலை
வித்தி மாதர் வருத்தம்விளைத் தாளெனத்
தத்து நீர்த்தவ ளைக்குரற் கிண்கிணி
யுய்த்தொர் பூசலுட னிட்டன வன்றே.
விளக்கம் : அவன் புணர்தலால், கிண்கிணியும் சிலம்பும் உடனே பூசலிட்டன. அப்போது அவள் புணர்தலால் மேகலையும் வருத்தம் விளைத்தாள் என்பன÷ பால அவற்றுடனே பூசலிட்டன என்பர் நச்சினார்க்கினியர். ( 104 )
------------
-
2482. ஏந்தி நாங்களுட னேயிடு பூசலை
வேந்தர் வேந்தன் கொடுங்கோ லினனாகி
யாய்ந்து கேட்டு மருளானென் றவிந்தன
சாந்த மேந்துமுலை யாள்கலந் தாமே.
விளக்கம் : இரண்டு காலத்தும் அவட்கே ஒலித்தலின் அவள்கலம் என்றார். நாங்கள் உடனே ஏந்தியிடு பூசலை என மாறுக. ஏந்தி - எடுத்து. வேந்தன் - சீவகன். கேட்டும் என்புழி - உம்மை இழிவு சிறப்பு. தாம். ஏ : அசைகள். ( 105 )
------------
-
வேறு
2483. வீடுமலி யுலகினவர் போலவிளை யாடுந்
தோடுமலி கோதையொடு துதைந்தவரை மின்போ
லாடுகொடி யணிந்தவுய ரலங்கல்வரை மார்பன்
கூடுமயிர் களையும்வகை கூறலுறு கின்றேன்.
விளக்கம் : அதிகார தேவர்கள் அதிகார முடிவிற் கற்பம் அறுதியாக இருந்து முத்தி எய்துவரென்பதனால், உலகமென்றது வீடுபெறுதற்குக் காரணமான துறக்கம் எனப்பட்டது. இனி, வீடுமலி உலகினவர் : சிவலோகம், பரமபதம் என்கிற உலகிலுள்ள அரனும் அரியும் என்றும் கூறலாம். இவர்கள் என்றும் பொன்றா நிறையின்பத்தினைத் தேனுண்ணும் வண்டென முறையுறத் துய்ப்பவராவர். நாலாம் நாள் அரசர்க்கு மயிர்களைதல் முறைமையென்று கூறுதலின் அது கூறுகின்றார். ( 106 )
------------
-
2484. உச்சிவரை வளர்ந்திளமை யொழிந்தவுயர் திண்கா
ழிச்சவிய வல்லவென வெழுதியவை யூன்றிக்
கச்சுவிளிம் பணிந்ததொழிற் கம்பலவி தான
நச்சுமணி நாகருறை நாகமென விரித்தார்.
விளக்கம் : வரையுச்சி என மாறுக. இளமை ஒழிந்த என்றது முற்றிய என்றவாறு. காழ் - கழி. சவிய : பலவறி சொல் : அழகுடையன.விதானம் - மேற்கட்டி. நாகம் - நாகருலகம். ( 107 )
------------
-
2485. முத்தக நிறைந்தமுளை யெயிற்றுமத யானை
மத்தகமுந் திருமகடன் வடிவுபட மாதோ
வொத்தகல மெண்முழமென் றோதிநக ரிழைத்தார்
மொய்தெரிசெம் பொற்றுகளி னூன்முடிவு கண்டார்.
விளக்கம் : இருபுறத்தும் மதயானைகளை நிற்ப இடையே திருமகளுருவம் அமையக் கோலஞ் செய்தார் என்க. முதிரிண ரூழ்கொண்ட முழவுத்தா ளெரிவேங்கை, வரிநுதல் எழில்வேழம் பூ நீர்மேற் சொரிதர, புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித், திருநயந் திருந்தன்ன, என்றார் கலியினும் (44 : 4 - 7) (108 )
------------
-
2486. உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள்
கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால்
செழுந்துபடச் செந்நெனிறைத் தந்நுண்கொடி யறுகின்
கொழுந்துகுறைத் தணிந்துகொலை வேற்கணவ ரமைத்தார்.
விளக்கம் : செழுந்து : உரிச்சொல் ஈறு திரிந்தது. இச் செய்யுளோடு கொழுங்களி உழுந்தும் செழுங்கதிர்ச் செந்நெலும், உப்பும் அரிசியும், கப்புரப் பளிதமொடு, ஐவகை வாசமும் கை புனைந்தியற்றிய, முக்கூட்டமிர்தும் அக்கூட்டமைத்து எனவரும் பெருங்கதைப் பகுதி (2-4 : 88-91) ஒப்புநோக்கற்பாலது. ( 109 )
------------
-
2487. செங்கய லிரட்டைதிரு வார்சுடர்க ணாடி
பொங்குகொடி வார்முரசந் தோட்டிபுணர் கும்ப
மங்கலங்க ளெட்டுமிவை மணியிற்புனைந் தேந்தி
யங்கயற்க ணரிவையர்க டென்கிழக்கி னின்றார்.
விளக்கம் : திருவாரென்றது சாமரை அடியை. இனி, கும்பத்தோடு புணர்ந்த மங்கலங்கள் எட்டுமெனவே சாமரை கூறிற்றென்றுமாம். ( 110 )
------------
-
2488. வெள்ளுருவ மாலைவட கீழிருவர் மின்போ
லொள்ளுருவ வாளுருவி நின்றனர்தென் மேல்பா
லுள்ளுருக நோக்கியுய ருழுத்தகலு மேந்திக்
கள்ளுருவ மாலையவர் கைதொழுது நின்றார்.
விளக்கம் : வடகீழ் - வடகீழ்த்திசை. தென்மேல் - தென்மேற்றிசை. அன்பினால் உள்ளுருக என்க; தெய்வத்தை நோக்கி என்க. உழுத்தகல் - உழுந்து பெய்த அகல். ( 111 )
------------
-
2489. தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தால
மாரவட மேற்றிசைக்க ணிருந்தவலிர் பஞ்சிச்
சீர்நிறைய வரையகலந் திருத்தத்திரு நோக்கும்
வாரமுறைக் கருவிவடக் கிருந்தனகண் மாதோ.
விளக்கம் : இருந்தன கள் : கள் : அசை. பஞ்சி : வெண்டுகிலுக்குக் கருவியாகுபெயர். உறை கருவி பாடமாயின் வாரம் உறைகின்ற கருவி என்க. தோரை - மூங்கிலரிசி. மணித்தாலம் - மணியாலியன்ற தாலம் (தட்டு) இதனைத் தாம்பாளம் என்பர். இருந்த : பலவறிசொல். வாரம் - நடுவின்மை. ( 112 )
------------
-
2490. பானுரையி னெய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித்
தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல்
வேனிரைச்செய் கண்ணியொடு மெல்லென விருந்தான்
வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே.
விளக்கம் : செய் : உவமைச் சொல். நொய்ய - மெத்தென்ற. தான் - அசை. இரவி - ஞாயிறு. இது சீவகனுக்குவமை. திங்கள் - இலக்கணைக்குவமை - கண்ணி : இலக்கணை. மன்னர் பெருமான் : சீவகன். ( 113 )
------------
-
வேறு
2491. குளநென் முன்றிற்கனி தேன்சொரி
சோலைக் குளிர்மணி
வளமை மல்கியெரி யம்மட
மந்திகை காய்த்துவா
னிளமை யாடியிருக் கும்வனத்
தீர்ஞ்சடை மாமுனி
கிளையை நீங்கிக்கிளர் சாபத்தி
னாவித னாயினான்.
விளக்கம் : இளமையாடுதல் : ஒன்றை மற்றொன்றாக எண்ணி மயங்குதல். குளநெல் - ஒருவகை நெல். குளநெல் உணங்கும் முன்றில் என்க. எரியம்மடமந்தி என்புழி வண்ண நோக்கி மகரவொற்று விரிந்து நின்றது. காய்த்துவான் : வினையெச்சம். நாவிதன் - மயிர்வினைஞன். ( 114 )
------------
-
2492. ஆய்ந்த கேள்வி யவன்கான்
முளையாய்வழித் தோன்றினான்
றோய்ந்த கேள்வித் துறைபோ
யலங்காரமுந் தோற்றினான்.
வேந்தன் றன்னாற் களிற்றூர்
சிறப்பொடு மேயினான்
வாய்ந்த கோல முடையான்
பெருமஞ்சிகர்க் கேறனான்.
விளக்கம் : அடுத்த செய்யுளுடன் தொடரும். ஆய்ந்த கேள்வியவன் என்றது சாபத்தால் நாவிதனாயினான் என்ற அம் முனிவன் என்பதுபட நின்றது. கான்முளை - வழித்தோன்றல் - பிள்ளை. கல்வி கேள்விகளிற் றுறைபோய் என்க. அலங்காரம் - ஒரு நூல். அலங்காரம் என்னும் ஒரு நூலையுஞ் செய்தான். அதனாற் வேந்தனாற் சிறப்பொடு மேயினான் எனினுமாம். கோலம் - அழகு. மஞ்சிகர் - நாவிதர். ( 115 )
------------
-
வேறு
2493. நித்தில வடமும் பூணு
மாரமு நிழன்று தாழ
வொத்தொளிர் குழைகள் காதி
னான்றுபொன் னூச லாடப்
பைத்தர வல்குற் பாவை
கரகநீர் சொரியப் பாங்கின்
வித்தகன் பூசி வெள்வேல்
வேந்தனுக் கிறைஞ்சி னானே.
விளக்கம் : வேந்தனுக்கு : வேந்தனை : உருபுமயக்கம். நித்திலவடம் - முத்துவடம். நிழன்று - ஒளிர்ந்து. பைத்து - படத்தையுடைய : பாவை என்றது ஒரு பெண் என்பதுபட நின்றது. வித்தகன் என்றது - நாவிதனை. பூசி - வாய்பூசி. ( 116 )
------------
-
2494. நச்செயிற் றரவி னோக்கின்
யொளிமுடிச் சிதறி னானே.
வச்சிர வண்ணன் காப்ப
மன்னரை நடுங்க நோக்கி
வச்சுதங் கொண்டு மன்ன
வாழிய ரூழி யென்னா
யுச்சிவண் டிமிரு மாலை
னடிமுடித் தெளித்து நங்கை
விளக்கம் : செல்வமுண்டாதற்கு வைச்சிர வண்ணனைக் கூறினான். நச்செயிற்று ........ ஊழி என்னுமளவும் நாவிதன் வாழ்த்தியது. வைச்சிரவணன் என்பது வச்சிரவண்ணன் எனப்பட்டது. அவன், குபேரன். அச்சுதன் - அரிசி. அடிமுடி - அடியினும் முடியினும். நங்கை : இலக்கணை. ( 117 )
------------
-
2495. வாக்கினிற் செய்த பொன்வாண்
மங்கல விதியி னேந்தி
யாக்கிய மூர்த்தத் தண்ணல்
வலக்கவு ளுறுத்தி யார்ந்த
தேக்கணின் னகிலி னாவி
தேக்கிடுங் குழலி னாளை
நோக்கல னுனித்து நொய்தா
விடக்கவு ளுறுத்தி னானே.
விளக்கம் : ஆடவர்க்கு வலக்கவுளினும் மகளிர்க்கு இடக்கவுளினும் உறுத்துதல் மரபு. மின்வாள் அழித்த மேதகு கைவினைப் பொன்வாள் பற்றிப்பன்மாண் பொலிகென வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி என்றார் பெருங் கதையினும் (2 - 4 : 161 - 3).(118 )
------------
-
2496. ஆய்ந்தபொன் வாளை நீக்கி
யவிர்மதிப் பாகக் கன்மேற்
காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப்
பூநிறீஇக் காமர் பொன்ஞாண்
டோய்ந்ததன் குறங்கில் வைத்துத்
துகிலினிற் றுடைத்துத் தூய்தா
வாய்ந்தகைப் புரட்டி மாதோ
மருடகப் பற்றி னானே.
விளக்கம் : பூவை நிறுத்தியிட்டு என்ப - குனிதலின் பொன்நாண் தோய்ந்த குறங் கென்றார். மாது ஓ : அசைகள். இச் செய்யுளோடு
-
பொன் வாள் பற்றிப் பன்மாண் பொலிகென
வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி
இலக்கணம் பிழையா எஃகமை இருப்பின்
நீரளந்தூட்டிய நிறையமை வாளினைப் பஞ்சிப் பட்டொடு துரூஉக்கிழி நீக்கிப்
பைங்கதிர் அவிர்மதிப் பாகத் தன்ன
அங்கேழ்க் கன்மிசை அறிந்துவாய் தீட்டி
வெங்கேழ்த் துகின்மிசை விதியுளி புரட்டிச்
செங்கேழ்க் கையிற் சிறந்துபா ராட்டி
ஆசறு நறுநீர் பூசனை கொளீஇ.(2 4 : 164 71)
------------
-
வேறு
2497. ஏற்றி யும்மிழித் தும்மிடை யொற்றியும்
போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக்
கூற்ற னான்முகங் கோலஞ்செய் தான்கடற்
றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே.
விளக்கம் : ஏற்றுதல் - ஏற வொதுக்குதல். இழித்தல் - மயிரைத் தாழ ஒதுக்குதல். கூற்றனான் : சீவகன். செஞ்சுடர் - ஞாயிற்று மண்டிலம். ( 120 )
------------
-
2498. கோதைப் பாரத்தி னானுந்தன் னாணினு
மேதி லான்முக நோக்கு மிளிவினும்
பாத நோக்கிய பான்மதி வாண்முக
மேதமின்றி யெடுத்தனள் மெல்லவே.
விளக்கம் : கோதைப்பாரம் - மாலையாலாகிய சுமை. தன்னாண் - தனக்கியல்பாயுள்ள நாணம். ஏதிலான் - அயலான்; ஈண்டு நாவிதன். எடுத்தல் - நிமிர்த்துதல். ( 121 )
------------
-
2499. உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ
யிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர்
வெருவி யோட விசும்பிற குலாவிய
திருவிற் போற்புரு வங்க டிருத்தினான்.
விளக்கம் : கண்கள் அஞ்சி பார்க்க வானில் வளைத்த திருவில் என்பர் நச்சினார்க்கினியர். அவன் புருவந் திருத்தினபோது கண்கள் அஞ்சின என்றவே தக்கது. ( 122 )
------------
-
2500. ஆர மின்ன வருங்குயந் தான்களைந்
தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழி
னீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான்
றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான்.
விளக்கம் : குயம் - ஈண்டு மயிர்க்கத்தி. ஓரும் : அசை. கத்தரிகையாற் செய்யும் தொழில் என்க. நீரின் - நீர்மையால். ஏத்துபு - ஏத்தி; தொழுது. கண்ணியான் - நாவிதன். ( 123 )
------------
-
வேறு
2501. அன்னப் பெடைநடுக்கி யசைந்து
தேற்றா நடையாளு
மன்னர் குடைநடுக்கும் மாலை
வெள்வேன் மறவோனு
மின்னு மணிக்குடத்தின் வேந்த
ரேந்தப் புனலாடிப்
பொன்னங் கடிமலருந் துகிலுஞ்
சாந்தும் புனைந்தாரே.
விளக்கம் : அசைந்து - இளைத்து. பிறரைத் தேற்றாநடை என்க. மன்னர் - பகைமன்னர். நடுக்கும் - நடுங்கச் செய்யும். மறவோன் - சீவகன். வேந்தர் குடத்தின் ஏந்த அடி என்க. ( 124 )
------------
-
2502. எஞ்சுற்ற மென்றிரங்கா தாக
மெல்லாங் கவர்ந்திருந்து
தஞ்சுற்றம் வேண்டாத முலைக்கீழ்
வாழ்வு தளர்கின்ற
நஞ்சுற்ற வேனெடுங்கட் பாவை
நல்கூர் சிறுநுசுப்பிற்
கஞ்சுற் றுழிப்புலர்ந்தாங் கணிந்தா
ரம்ம மணிவடமே.
விளக்கம் : அம்ம : இத் தீங்கினைக் கேட்பீராக! இடம் தந்து தோற்றுவித்தலின் மார்பை முலைகட்குச் சுற்றம் என்றார். அஞ்சுதலாவது சுற்றத்தையே வருத்துங் கொடுங்கோன்மை மிக்க முலைகளின் கீழ்க் குடியிருந்தால் இறந்துபடுவோமென்று அஞ்சுதல். மணிவடத்தின் ஒளி இருளை ஓட்டுகலின் அதனை அணிந்து விடிந்தாற்போல இருந்தது. இடையைச் சுற்றி அணிதலின் தளையிட்டாராயிற்று. பாவையது நுசுப்பு, நல்கூர் நுசுப்பு என்க. ( 125 )
------------
-
2503. சுடுமண் மிசைமாரி சொரியச்
சூழ்ந்து சுமந்தெழுந்து
நெடுநன் னிமிராவி நாறு
நெய்தோய் தளிர்மேனி
துடிநுண் ணிடைப்பெருந்தோட் டுவர்வா
யேழை மலர்மார்பன்
கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக்
காமக் கடலாழ்ந்தான்.
விளக்கம் : எழுந்த என்றும் பாடம். சுடுமண் - ஞாயிற்றின் வெப்பத்தால் நன்கு சுடப்பட்ட மண். இதனை வெங்கார்மண் என்பது இன்றும் வழக்கிலுளது. வெங்கார் மண்ணிலே ஞெரேலென மழைபொழியுங்கால் ஓர் ஆவி தோன்றி மணப்பது இயல்பு. இம்மணம் சிறந்த மகளிர் மேனி மணத்திற்கு உவமை. துடி - உடுக்கை. துவர் - பவளம். ஏழை; இலக்கணை. மார்பன் : சீவகன்
(126 )
------------
-
வேறு
2504. வழக்கு தாரவன் மார்பிடை மட்டுகப்
புழுங்கு கோதைபொற் பின்றிறம் பேசலாம்
விழுங்கு மேகம் விடாது தழீஇக்கிடந்
தொழிந்த மின்னுக் கொடியொத் தொழிந்திட்டாள்.
விளக்கம் : உலகம் கொண்டாடப்படுதலின் வழங்கு தாரவன் என்றார். மட்டு உகாநிற்கவும் பின்னரும் மட்டையுகுத்தற்குப் புழுங்குவதொரு கோதை என இக் கோதைக்குச் சிறப்புக் கூறினார். புழுக்கம் வேட்கையால் தோன்றும் என்க. ( 127 )
------------
-
2505. தாம மார்பனுந் தையலு மெய்யுணர்
வாமி தென்றறி யாது களித்தவர்
தூமங் கொப்புளிக் குந்துகிற் சேக்கைமேற்
காம னப்பணைக் கள்ளுக வைகினார்.
விளக்கம் : மார்பன் : சீவகன். தையல் : இலக்கணை : மெய்யுணர்வு - தம்மூடம்பு என்று உணரும் உணர்ச்சி. மெய்யுணர்வாமிது என்றறியாது என்றது, மெய்மறந்து என்றவாறு. தூமம் - நறுமணப்புகை, சேக்கை - படுக்கை. அப்பணை - அம்பாகிய அணை. காமன் அம்பு - மலரம்பு. ( 128 )
------------
-
வேறு
2506. மாதர்தன் வனப்பு நோக்கி
மகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான்
காதலித் திருப்பக் கண்கள்
கரிந்துநீர் வரக்கண் டம்ம
பேதைமை பிறரை யுள்ளி
யழுபவர்ச் சேர்த வென்றாள்
வேதனை பெருகி வேற்கண்
டீயுமிழ்ந் திட்ட வன்றே.
விளக்கம் : வனப்பு நோக்கிக் கண் கரிந்தது; ஆக்கம் பற்றிப் பிறந்த மருட்கை (தொல். மெய்ப். 7. பேர்) என்னும் மெய்ப்பாடு; மருட்கை என்பது வியப்பு. ( 129 )
------------
-
2507. நாறுசாந் தழித்து மாலை
பரிந்துநன் கலன்கள் சிந்திச்
சீறுபு செம்பொ னாழி
மணிவிர னெரித்து விம்மா
வேறியு மிழிந்து மூழுழ்
புருவங்கண் முரிய நொந்து
தேறுநீர் பூத்த செந்தா
மரைமுகம் வியர்த்து நின்றாள்.
விளக்கம் : நாறுசாந்து : வினைத்தொகை. பரிந்து - அறுத்து. சீறுபு - சீறி. விம்மா - விம்மி. ஊழூழ் - முறைமுறையே. முரிய - வளைய வியர்த்த முகத்திற்கு நீர் துளிக்கப்பட்ட தாமரை மலர் உவமை. ( 130 )
------------
-
2508. இற்றதென் னாவி யென்னா
வெரிமணி யிமைக்கும் பஞ்சிச்
சிற்றடிப் போது புல்லித்
திருமகன் கிடப்பச் சேந்து
பொற்றதா மரையிற் போந்து
கருமுத்தம் பொழிப் வேபோ
லுற்றுமை கலந்து கண்கள்
வெம்பணி யுகுத்த வன்றே.
விளக்கம் : பொற்ற : பொற்பென்னும் உரிச்சொல் திரிந்தது. பொழிதல் ஈண்டு முத்துக்களின் வினை. ஊடல் முழுதும் தீராமையின் வெம்பனியாயிற்று. உற்று - ஊடல் தீர்தலுற எனத் திரிக்க. பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் - என்றபடி சேர்தலும் உண்டு (கனி. 89) என்றாராகலின், அடியில் வணங்கிய பின்னும் ஊடல் தீராது அழுதாள் என்றல் கற்பிற்குப் பொருந்தாது. இளிவே இழவே (தொல். மெய்ப். 5) என்னும் சூத்திரத்தில் அழுகையாவது அவலமும் கருணையும் ஆதலின், கயமலருண் கண்ணாய் என்னும் (37) கலியில், தானுற்றநோயுரைக் கல்லான் பெயரு மன் ..... சேயேன்மன் யானும் துயருழப்பென் என்ற வழிப் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலந் தோன்றினாற் போல, இதனையும் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த கருணையென்று கொள்க வணங்குதல் : அவற்கு இளிவரவு அதனாற் கருணை பிறந்தது. அழுகை ஈண்டுக் கருணை. இதனால் ஊடல் தீரக் கருதினாளாம். ( 131 )
------------
-
2509. கொண்டபூ ணின்னைச் சார்ந்து
குலாய்க்கொழுந் தீன்ற கொம்பே
கண்டுகண் கரிந்து நீரா
யுகுவது கரக்க லாமே
பண்டியான் செய்த பாவப்
பயத்தையார்க் குரைப்பென் றேன்காள்
வண்டுகாள் வருடி நங்கை
வரந்தர மொழிமி னென்றான்.
விளக்கம் : நின்னை விடாமற் பார்த்தலாற் கண் கரிந்து நீர் பெருகியது என்றுரைத்தும், அவளுக்குச், சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடு பிறத்தலின், விடை கொடாமல் நின்றாள், எனவே, அவன் வண்டுகளையும் தேன்களையும் விளித்துக் கூறினான். சிதைவு பிறர்க்கின்மை யாவது : புணரக் கருதி உள்ளஞ் சிதைந்து நிறையழிந்துழிப் புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல்; பிறர்க்கின்மை யெனவே தலைவன் உணரும். இது கற்பிற்கும் உரித்தென்றார். இம்மெய்ப்பாடு இவட்கு நிகழ்ந்தமை தான் உணர்ந்து, இடையில் வந்த புள்ளை நோக்கி, இனி நுமக்கு எளிது, நீர்ஊடல் தீர்ப்பீராக என்றான் : ஊடற்குக் காரணம் இன்றியும் இத்துணை யெல்லாம் நிகழ்ந்ததற்கு வருந்தினான் ஆதலின். ( 132 )
------------
-
2510. பூவையுங் கிளியுங் கேட்டுப்
புழைமுகம் வைத்து நோக்கிக்
காவலன் மடந்தை யுள்ளங்
கற்கொலோ விரும்பு கொல்லோ
சாவம்யா முருகி யொன்றுந்
தவறில னருளு நங்கை
பாவையென் றிரத்து மென்ற
பறவைக டம்முட் டாமே.
விளக்கம் : அவள் ஊடல் தீரக் கருதிய தன்மையை அவை தெளியாமையின், இவன் இறந்து படும் எனக்கருதி இங்ஙனம் கூறின.
( 133 )
------------
-
2511. பெற்றகூ ழுண்டு நாளும்
பிணியழந் திருத்தும் பேதாய்
முற்றிமை சொல்லி னங்கை
மூன்றுநா ளடிசில் காட்டாள்
பொற்றொடி தத்தை யீரே
பொத்துநும் வாயை யென்றே
கற்பித்தார் பூவை யார்தங்
காரணக் கிளவி தம்மால்,
விளக்கம் : தந்தையீரே! என்பது இகழ்ச்சியாலும், பூவையார் என்பது சிறப்பினாலும் திணை வழுவமைதியாயின. ( 134 )
------------
-
2512. பழியொடு மிடைந்த தேனுஞ்
சீறடி பரவி னாற்கு
வழிபடு தெய்வ மாகி
வரங்கொடுத் தருளல் வேண்டு
மொழிபடைக் களிறு போல
வுயங்கவு முருகி நோக்காப்
பிழிசடு கோதை போலாம்
பெண்டிரைக் கெடப்பி றந்தாள்.
விளக்கம் : நற்குணமுடைய கிளி, பூவையின் மொழியைக் கேளாமல் இவ்வாறு கூறியது. இது அடுத்த செய்யுளுடன் தொடரும். பரத்தையர் தம்மியல்பு கெட்டுப் பொருள் வேட்கையால் அதன் தன்மையராவர் ஆதலின், ஆம் என்றார். அக் கோதையை உபாயத்தால் நெகிழ்த்துத் தேனை வாங்குதல் போலப் பரத்தையரையும் பொருளால் மனம் நெகிழ்த்து இன்பங் கோடல் வேண்டும். பெண்டிரை : ஐ : அசை. கெட - பொல்லாராக. ( 135 )
------------
-
2513. ஈன்றதா யானு மாக
விதனைக்கண் டுயிரை வாழே
னான்றியான் சாவ லென்றே
நலக்கிளி நூலின் யாப்ப
மான்றவண் மருண்டு நக்காள்
வாழிய வரம்பெற் றேனென்
றான்றவ னாரப் புல்லி
யணிநலம் பரவி னானே.
விளக்கம் : யானும் : இவட்குப் பிள்ளையாகிய யானும், இதனை - இவன் இறந்தால் இவட்கு உளதாகும் பழியை. வாழிய என்றது கிளியை : இங்ஙனங் கொடியவளைப் பெற்றதால் இவளுடைய தாய் கொடியவளானாள். ( 136 )
------------
-
2514. நிறையோத நீர்நின்று நீடவமே
செய்யினும் வாழி நீல
மறையோ விரிவை வரிநெடுங்க
ணொக்கிலையால் வாழி நீலங்
கண்ணொவ்வா யேனுங்
களித்து நகுதிநின்
வண்ண மிதுவோ மதுவுண்பார்
சேரியையோ வாழி நீலம்.
விளக்கம் : தோற்றாலும் நாணமின்றி நகுதல் நின் சாதியியல்பு! மற்றும் நீகுடியர்சேரியிலிருப்பதாலும் இந்நிலை அடைந்தாய்! (இயற்கைப் பண்பும் நட்புப் பயனும் இந்நிலையைத் தந்தன!) என்கின்றாய் என்றான். வண்ணம் : நிறத்தையும் சாதியையும் குறிக்கும். நிறம் : கருநிறம். வாழி : இகழ்ச்சிக் குறிப்பு. களித்து நகுதி - தேனை உட்கொண்டு மலர்கின்றாய்; செருக்கி நகைக்கின்றாய். இஃது, அறுசீரடியே ஆசிரியத்தளையொடு - நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே (தொல். செய் - 64) எனச் செய்யுளியலிற் கலிக்கு அறுசீரடி விதித்தலின், வாழி நீலம் என ஆசிரியத் தளை பெற்ற அறுசீரடிகள், கண்ணொவ்வா யேனும் களித்து நகுதி நின் என்னும் நேரடியின் முன்னும் பின்னும் வந்த அகநிலைக் கொச்சகம். உம்மை யான் வெண்டளையும் வீரவும். பாநிலை வகையே கொச்சகக்கலியென - நூனவில் புலவர் நுவன்றறைந்தனரே தொல் செய். 155) என அகநிலைக் கொச்சகத்திற்கு விதி கூறலின் ஓசை துள்ளியவாறு முணர்க. இனி, ஆசிரியத்துறை என்பார்க்கு ஆகாமை கடவுள் வாழ்த்தாகிய முதற் கவியிற் கூறினாம். ( 137 )
------------
-
2515. பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா
பைங்கிளி பூவை யென்னு
மாண்பிலா தாரை வைத்தா
ரென்னுறா ரென்று நக்கு
நாண்குலாய்க் கிடந்த நங்கை
நகைமுக வமுத மீந்தாள்
பூண்குலாய்க் கிடந்த மார்பிற்
பொன்னெடுங் குன்ற னாற்கே.
விளக்கம் : சீவகன் இவளுடைய கண்களைப் பாராட்டியதால் இங்ஙனம் கூறி நகைத்தாள். பூவைக்கும் கிளியின் கருத்தேயிருத்தலின் சேர்த்துக் கூறினாள். ( 138 )
------------
-
2516. நலங்குவித் தனைய மாதர்
நன்னல மாய வெல்லாம்
புலம்புவித் தருளி னீங்கிப்
பகைப்புலம் புக்க வேந்திற்
கலங்குவித் தனைய நம்பி
கவர்ந்திடக் கலாப மேங்கச்
சிலம்புநொந் திரங்கத் தேன்றார்
பரிந்துதே னெழுந்த தன்றே.
விளக்கம் : நம்பிமாதர் நலத்தை யெல்லாம் சிலம்பிரங்கத் தார்பரியப் புலம்புவித்துக் கவர்ந்திட, அம் மாதரும் கலாபமேங்க நம்பி நலத்தைக் கவர்ந்திடத் தேனினம் எழுந்தது - என்பர் நச்சினார்க்கினியர். புலம்புவித்தல் - அவசமாக்குதல். பரிந்து - பரிய : எச்சத் திரிபு. இரங்கல், ஏங்கல் என்பவை ஒலித்தற் பொருள். கலமானது பல நிலங்களிற் பிறந்த பல மணிகளையும் தன்னிடத்திற் சேர்த்தாற்போலப் பலரிடத்துள்ள நற்குணங்கள் யாவும் தான் சேர்ந்தவன் என்றார். ( 139 )
------------
-
2517. திருநிறக் காம வல்வி
திருக்கவின் கொண்டு பூத்துப்
பெருநிறங் கவினி யார்ந்த
கற்பகம் பிணைந்த தேபோ
லருநிறக் குருசின் மார்பத்
தசைந்தன ளலங்கல் வேலு
நெரிபுறத் தடற்று வாளு
நீலமு நிகர்த்த கண்ணாள்.
விளக்கம் : நெரிவுற்ற தடத்து வாழும் என்ற பாடத்திற்கு, நெரிவுற்ற நீலம் எனப் பொருள் கூறுக; வலிய அலர்த்தின நீலம் எனல் வேண்டும். ( 140 )
------------
-
வேறு
2518. மணிக்கண் மாமயிற் சாயன் மாதரு
மணிக்கந் தன்னதோ ளரச சீயமும்
பிணித்த காதலாற் பின்னிச் செல்வழிக்
கணித்த நாள்களேழ் கழிந்த காலையே.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். மணி - நீலமணி. கண் - புள்ளி. மாதர் : இலக்கணை. அணிக்கந்து - அழகிய தூண். சீயம் - சிங்கம்; என்றது சீவகனை. கணித்த - குறிக்கப்பட்ட. ஏழும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது. ( 141 )
------------
-
2519. சூட்டுஞ் சுண்ணமு மணிந்து சுந்தர
மோட்டி யொண்பொனூ லோங்கு தாரொடு
பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்தபின்
மோட்டு முத்தொளிர் வடம்வ ளாயினார்.
விளக்கம் : சுந்தரம் - சிந்துரப்பொடி. ஓட்டி - பூசி. பொனூல் - பொன்னூல். மோட்டு முத்து - பருத்த முத்து. வளாயினார் - வளைத்தார். ( 142 )
------------
-
2520. பானு ரைய்யன பைந்து கிலணிந்
தானி ரைய்யினத் தலங்க லேறனான்
மானி ரைய்யினம் மருளு நோக்கினா
ரூனு யிருணு மொருவ னாயினான்.
விளக்கம் : பானுரைய்யன், தானிரைய்யின், மானிரைய்யின், என மூவிடத்தும் யகர வாற்று வண்ணநோக்கி விரிந்தன. ஏறு - காளை; இனம் - திரள். மகரவொற்று வண்ணத்தால் விரிந்து இனம் மருளு நோக்கினர் என நின்றது. உணும் - உண்ணும். ( 143 )
------------
-
2521. சுநந்தை தன்மகன் சுடர்பொற் சூழித்தே
னினங்க வர்ந்துண விலிற்று மும்மதத்
தநந்த னன்னகை யானை யேறினான்
குனிந்த சாமரை குளிர்சங் கார்த்தவே.
விளக்கம் : சுநந்தைகள் - தன் : அசை. மகன் - சீவகன். இலிற்றும் - பிலிற்றும். அநந்தன் - ஆதிசேடன். இது யானைக் கையினுக்குவமை. சாமரை குனிந்த என மாறுக. குனிந்த - வீசின. குளிர் சங்கு : வினைத்தொகை. ( 144 )
------------
-
வேறு
2522. இரும்பிடி நூறு சூழ
விறுவரை நின்ற தேபோற்
கரும்பொடு காய்நெற் றுற்றிக்
கருப்புரக் கந்தி னின்ற
சுரும்புசூழ் மதத்த சூளா
மணியெனுஞ் சூழி யானைப்
பெருந்தகைப் பிணையன் மன்னர்
முடிமிதித் தேறி னானே.
விளக்கம் : சூளாமணி என்பது யானையின் பெயர் முற்செய்யுளில் யானையின் பெயரும் ஏறின முறையுங் கூறாமையின் இங்குக் கூறினார். ( 145 )
------------
-
2523. சட்டகம் பொன்னிற் செய்து
தண்கதிர் வெள்ளி வேய்ந்து
வட்டநல் வைரம் வாய்ப்ப
நிறைத்துமேன் மணிகள் சேர்த்திச்
சுட்டுதற் கரிய முத்தின்
றொத்துவாய் நாற்ற முந்நீர்ப்
பட்டவான் பவளக் காம்பின்
குடைநிழற் பருதி யொத்தான்.
விளக்கம் : பொன்னிற் சட்டகம் செய்து என மாறுக. சட்டகம் - சட்டம். சுட்டுதல் - விலைகுறித்தல். தொத்து - தொகுதி. முந்நீர்ப்பட்ட கடலிலே பிறந்த பருதி - ஞாயிறு.
------------
-
2524. மடற்பனைக் குழாத்திற் பிச்ச
நிரைத்தன மன்னர் சூழ்ந்து
புடைக்களி றேறித் திங்கட்
பொழிகதிர்க் குப்பை யன்ன
வெடுத்தெறி கவரி வீச
வியம்பல முழங்கி யார்ப்பக்
கடற்படை வெள்ளஞ் சூழக்
காவலன் வீதி சேர்ந்தான்.
விளக்கம் : பிச்சம் - பீலிக்குடை. புடை - பக்கம். குப்பை - குவியல். எறிகவரி: வினைத்தொகை. இயம் - இசைக்கருவி. கடல்போன்ற படை. காவலன் - சீவகன்.
------------
-
2525. அடிநில முறுத னாணி
யருவருத் தமரி னாலித்
திடுமயிர் சிறக ராக
வெழுந்துமேற் பறப்ப போலப்
படுமழைத் துளியிற் பாய்மாப்
பரந்தன நிரந்த பொற்றே
ரிடைநில மின்றி வேழ
மீண்டின மள்ளர் தொக்கார்.
விளக்கம் : மேற் கடற்படை வெள்ளம் என்றார். அப்படை பரந்தபடி யிங்குக் கூறினார். ஆலித்து - முழங்கி. இடுமயிர் : வினைத்தொகை. சிறகர் - சிறகு. பாய்மா - குதிரை. தேர் நிரந்த என மாறுக. மள்ளர் - மறவர். துளி எண்ணிறத்தற்குவமை என்பர் நச்சினார்க்கினியர். அஃதாவது பாய்ந்து செல்லும் சிறந்த குதிரைகள் மழைத்துளிகள் போன்ற எண்ணிறந்தன என்க. ( 148 )
------------
-
2526. கொழுமடற் பெண்ணை யீன்ற
குரும்பையுஞ் செப்புங் கொன்ற
விழைமுலைத் தடத்தி னாடன்
கணவனைக் காண வேகிக்
கழுமொலி யரவ வானங்
கனைபெயல் கடற்பெய் தன்ன
குழுமொலி யரவ மீண்டிக்
கொடிநகர் பொலிந்த தன்றே.
விளக்கம் : ஒலியரவம் : ஒருபொருட் பன்மொழி. வானம் கடலிலே பெய்த ஒலியன்ன திரண்ட அரவத்தோடே யீண்டி. பெண்ணை - பனை. இழை - அணிகலன். முலைத்தடத்தினாள்; இலக்கணை. கணவன் : சீவகன். ( 149 )
------------
-
2527. ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ
ருலாமுகில் கிழிக்கு மாடக்
கொள்கொடிக் குழாத்தி னாலுங்
கொழுநறும் புகையி னாலுந்
தெள்ளுறு சுண்ணத் தாலுந்
தேமலர்த் துகளி னாலும்
புள்ளினம் பொழுது காணா
புலம்பிக்கூ டடைந்த வன்றே.
விளக்கம் : கதிரவன் மறைதலிற் காணாமல் வருந்தின. தெள்நீர் உலாம் முகில் என்பது கடலிலே யுலாவும் முகில் என்றுமாம். உலாவும் என்பது உலாம் என விகாரப்பட்டது. கொள்கொடி : வினைத்தொகை. சுண்ணம் - நறுமணப் பொடி. மலர்த்துகள் - பூந்தாது. காணா - காணாதனவாய். புலம்பி - வருந்தி. ( 150 )
------------
-
2528. பைந்தொடி மகளிர் பாங்கர்
பரிந்துநூல் சொரிந்த காசு
சிந்தின தழலென் றஞ்சிச்
சிறையன்ன நிலத்தைச் சேரா
விந்திர கோப மாமென்
றிளமயில் குனிந்து குத்திச்
சிந்தையிற் றேம்பத் தாமே
திருமணி நக்க வன்றே.
விளக்கம் : அன்னமும் மயிலும் ஆங்கே வளர்ந்தன. ( 151 )
------------
-
2529. வெள்ளைமை கலந்த நோக்கிற
கிண்கிணி மிழற்றி யார்ப்பப்
பிள்ளைமை காதல் கூரப்
பிறழ்ந்துபொற் றோடு வீழத்
துள்ளுபு செலபுஇய தோற்றந்
தொடுகழற் காமன் காமத்
துள்ளுயி ரறியப் பெண்ணாய்ப்
பிறந்ததோர் தோற்ற மொத்தார்.
விளக்கம் : இச் செய்யுள் முதலாக வேட்கையிலாப் பருவத்தாரும். பிறக்கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாரும் என மூன்று கூறாக்கிக் கூறுகின்றார். பேதை அல்லை மேதையங் குறுமகள் - பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென (அகநா. 7) என்றலின், பேதை வேட்கை பிறவாப் பருவத்தாதலும், பெதும்பை வேட்கை பிறக்கின்ற பருவத்தாதலும் பெற்றாம். இவை ஒழிந்த மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெயர்கள் வேட்கை பிறக்கின்ற பருவத்துப் பெயர்களாம். அன்றி, அவையும் பல பருவத்தை உணர்த்தும் பெயர்களெனின் : அது முதனூல்களிற் கூறாமையானும், சான்றோர் வேறுபாடு கூறாமல் மகளிர்க்குப் பொதுப் பெயராகச் செய்யுள் செய்தலானும் தேவர்க்கும் அது கருத்தன்றாம். இனி, உலாவிற்கு அங்கமாகப் புதிய நூல்களிற் கூறிய விதி இதற்காகாமையுணர்க. இச் செய்யுள் வேட்கை பிறவாப் பருவத்தாரைக் கூறிற்று. ( 152 )
------------
-
2530. தன்னெறி வளரக் காமன்
றான்முலை யிரண்டு மாகி
முன்னரே வளர்கின் றாற்போன்
முகிழ்முலை முத்த மேந்திப்
பொன்னெறி மணியிற் பொங்கிக்
குழல்புறம் புடைப்ப வோடிப்
பின்னிறீஇ வைத்த போலப்
பெதும்பையர் விதும்பி நின்றார்.
விளக்கம் : போல் முகிழ்ந்த எனக் கூட்டுக. எறிதல் : திரை எறிதல் போல நின்றது. பின்னும் தலை நிறுத்தி வைத்தாற் போல என்றது சேர நிறுத்தினாற் போல நின்றமை கூறிற்று. இனிக் காமன்றான் தன் நெறி வளர முலையிரண்டும் தனக்குண்டாய் வளர்கின்றாற்போல நின்றார் என்றும் உரைப்ப. நச்சினார்க்கினியர், முன்னரே என்பதைப் பின்னுக்குக் கொணர்ந்து, முன்னரே நின்றார் என்றியைப்பர். பெதும்பைப் பருவம் மங்கைப் பருவத்திற்கு முற்பட்டதாய் வேட்கை பிறக்கும் பருவமாய் நின்றதாதலின், காமனும் வேட்கை பிறப்பிக்க முன்னரே வளர்கின்றான் என்பது பொருத்தமாக இருக்கவும், பின்னுக்குக் கொண்டு வந்து கூட்டுவதன் காரணம் விளங்கவில்லை. ( 153 )
------------
-
2531. அணிநிலா வீசு மாலை
யரங்குபுல் லென்னப் போகித்
துணிநிலா வீசு மாலைப்
பிறைநுதற் றோழி சேர்ந்து
மணிநிலா வீசு மாலை
மங்கையர் மயங்கி நின்றார்
பணிநிலா வீசும் பைம்பொற்
கொடிமணி மலர்ந்த தொத்தார்.
விளக்கம் : பணி கொடி என்க. பணி - பரத்தலுமாம். இது சிறிது வேட்கை பிறந்து மயங்கியவர்களைக் குறிக்கின்றது. ( 154 )
------------
-
2532. வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை நோக்கி னாரை
யுள்ளுயி ருண்ணுங் கூற்றி னுடன்றுகண் கரிந்து பொங்கக்
கள்ளுயி ருண்ணு மாலைக் கதுப்பொரு கையி னேந்தி
நள்ளிருள் விளக்கிட் டன்ன நங்கைமார் மல்கி னாரே.
விளக்கம் : சிவத்தலும் கருகலும் சினத்தின் குறிகள். கதுப்பையேந்துதலின் இருளிலே விளக்கிட்டாற் போன்றனர்; செறிந்த இருளுக்கு விளக்கிட்டாற் போலும் நங்கையர் எனினும் ஆம். இதுமுதலாக வேட்கை மிக்காரைக் கூறுகின்றார். ( 155 )
------------
-
2533. மட்டொளித் துண்ணு மாந்தர்
மாண்புபோன் மறைந்து வண்ணப்
பட்டொளித் தொழிய வல்குற்
பசுங்கதிர்க் கலாபந் தோன்றக்
குட்டநீர்க் குவளைக் கண்கள்
விருந்துண விரும்பி நின்றா
ரட்டுந்தே னணிந்த மாலைப்
பவளக்கொம் பணிந்த தொத்தார்.
விளக்கம் : கள்ளைக் கரந்துண்ணு மாக்கள் கரக்கவுந் தோன்று மாறு போல, மேகலை வண்ணப்பட்டிலே ஒளித்துக் கிடவா நிற்கவும் சிறிது தோன்றுற என்க என்பர் நச்சினார்க்கினியர். ( 156 )
------------
-
2534. பெரும்பொரு ணீதிச் செங்கோற்
பெருமக னாக்கம் போலப்
பரந்திட மின்றி மேலாற்
படாமுலை குவிந்த கீழா
லரும்பொரு ணீதி கேளா
வரசனிற் சுருங்கி நந்து
மருங்குநொந் தொழிய வீதி
மடந்தைய ரிடங்கொண் டாரே.
விளக்கம் : இது முதலாக மூன்று செய்யுட்கள் பின்பு வந்தோரைக் குறிக்கின்றன. ஆல் இரண்டும் அசைகள். பெரும் பொருள் ஆகிய நீதி என்க. மேலால், கீழால் என்பவற்றுள் ஆல்கள் : அசைகள். நந்தும் - மெலிந்த, மடந்தையர் வீதியிடங் கொண்டார் என்க.
( 157 )
------------
-
2535. செல்வர்க்கே சிறப்புச் செய்யுந்
திருந்துநீர் மாந்தர் போல
வல்குற்கு முலைக்கு மீந்தா
ரணிகல மாய வெல்லா
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்ற
மென்றுநுண் ணுசுப்பு நைய
வொல்கிப்போய் மாடஞ் சேர்ந்தா
ரொருதடங் குடங்கைக் கண்ணார்.
விளக்கம் : திருந்து நீர் மாந்தர் என்றது இகழ்ச்சி. செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு என்றார் வள்ளுவனாரும் (குறள். 752). நல்கூர்ந்தார்க்கில்லை சுற்றம் என்பது நுசுப்பின் கூற்றென்க. ஒரு குடங்கைத் தடங்கண்ணார் என மாறினுமாம். அல்குற்கும் முலைக்கும் செல்வர் உவமை; நுசுப்பிற்கு நல்கூர்ந்தார் உவமை. ( 158 )
------------
-
2536. கார்வளர் மின்னு வீசுங்
குண்டலங் காய்பொ னோலை
யேர்வளர் பட்ட மேற்ப
வணிந்திருள் சுமந்து திங்க
ணீர்வளர் நீலம் பூத்து
நிரைத்தபோ னிரைத்த மேலால்
வார்வளர் முலையி னார்த
மாழைவாண் முகங்கண் மாதோ.
விளக்கம் : கார் - முகில். காய் பொன்னோலை என்க; வினைத்தொகை. ஏர் - அழகு. இருள் - கூந்தலுக்கும், திங்கள் முகத்திற்கும், நீலம் கண்களுக்கும் உவமைகள் என்க. மாழை - இளைமை. ( 159 )
------------
-
2537. குறையணி கொண்ட வாறே
கோதைகா றொடர வோடிச்
சிறையழி செம்பொ னுந்தித்
தேன்பொழிந் தொழுக வேந்திப்
பறையிசை வண்டு பாடப்
பாகமே மறைய நின்றார்
பிறையணி கொண்ட வண்ணல்
பெண்ணொர்பால் கொண்ட தொத்தார்.
விளக்கம் : பறை - பறத்தல். குறையணி - அரைகுறையான ஒப்பனை. கோதை - மாலை. கால் தொடர்தல் : ஒரு சொல். பிணங்குதல் என்க. உந்தி - கொப்பூழ். அக்கோதையை ஏந்தி என்க. பறத்தலையும் இயையையும் உடைய வண்டென்க. அண்ணல் : சிவபெருமான். அண்ணல் ஓர்பால் கொண்ட பெண் ஒத்தார் என்க. ( 160 )
------------
-
2538. பொன்னரி மாலை பூண்டு
பூஞ்சிகை குலாவி முன்கை
மின்னரிச் சிலம்பு தொட்டு
விருப்பொடு விரைந்து போவான்
கன்னிய ராடி நோக்கித்
தம்மைத்தாங் கண்டு நாணிப்
பின்னவை யணிந்து செல்வா
ரிடம்பெறா தொழிந்து போனார்.
விளக்கம் : சிகையிலே சூட்டுதற்குரிய பொன்னரி மாலையைக் கழுத்திலே பூண்டு என்பது பூண்டு என்னும் வினையாற் போந்தது. அடியிலணிதற்குரிய சிலம்பை முன்கையிலிட்டு என்க. ஆடி - கண்ணாடி. பின் அவற்றை அவற்றிற்குரிய விடத்தே அணிந்து என்க. ( 161 )
------------
-
2539. முத்துலாய் நடந்த கோல
முலைமுதன் முற்ற மெல்லாம்
வித்திய வேங்கை வீயும்
விழுப்பொனும் விளங்கக் காமத்
தொத்துநின் றெரிந்து கண்டார்
கண்சுடச் சுடர்ந்து நின்றா
ரொத்தொளிர் காம வல்லி
யொருங்குபூத் துதிர்ந்த தொத்தார்.
விளக்கம் : அலர்ந்த காமவல்லியை ஒத்தார் எனச் சுட்டுப் பெயராக்கும் நச்சினார்க்கினியர், இனி, பசந்த தம்மை நோக்கினார் கண் சுடும் படி நின்றார். வல்லிபூத்துப் பொலிவழிந்த தன்மையை ஒத்தார் என்றும் உரைப்ப என்றுங் கூறுவார். இத்துணையும், மணநிலை வகையிற் பிறந்த பெண்பாலாரையும் பரத்தையரையும் கூறினார். இது, மக்கள் வகையான் காமப் பொருட் பகுதி பற்றி முன்னோர் கூறிய குறிப்பு வகையாள் வந்த செந்துறைப் பாடாண்பகுதியாம். ( 162 )
------------
-
2540. உகிர்வினை செய்து பஞ்சி
யொள்ளொளி யரத்த மூட்டி
யகில்கம ழங்கை சேப்ப
வரிவைய ரலங்க றாங்கி
வகிர்படு மழைக்கண் சின்னீர்
மாக்கய லெதிர்ந்த வேபோன்
முகில்கிழி மின்னி னோக்கி
முரிந்திடை குழைந்து நின்றார்.
விளக்கம் : இது முதலாகக் கற்புடை மகளிரைக் கூறுகின்றார். இடை குழைந்து நின்றாரெனவே மனக் குழைவின்றி நின்றாரென்பது பெறப்பட்டது. ( 163 )
------------
-
2541. முனித்தலைக் கண்ணி நெற்றிச்
சிறார்முலை முழாலிற் பில்கிப்
புனிற்றுப்பால் பிலிற்றித் தேமா
வடுவிறுத் தாங்குப் பாய
நுனிந்துக்கண் ணரக்கி நோக்கா
தொசிந்துநின் றார்க ளன்றே
கனிப்பொறை மலிந்து நின்ற
கற்பகப் பூங்கொம் பொத்தார்
விளக்கம் : கனியாகிய சுமை மிக்கதொரு கற்பகமெனவே புதல்வனாகிய பயனைக் கொடுத்தாரென்பது பெறப்பட்டது. கற்பு மிகுதியால் தம் கணவர்க்குச் செல்வம் எல்லாந் தருவாரெனற்குக் கற்பகங் கூறினார். முனித்தலைப் புதல்வர் (புறநா. 250). ( 164 )
------------
-
2542. அவிரிழை சுடர முல்லை யலங்கலங் கூந்தல் சோரத்
தவிர்வெய்ய காமந் தாங்கித் தடமுலைக் கால்கள் சாய
விவர்தரு பிறவி யெல்லா மின்னமா கென்று நின்றார்
சுவர்செய்தாங் கெழுதப் பட்ட துகிலிகைப் பாவை யொத்தார்.
விளக்கம் : முல்லை கற்பிற்குச் சூடினார். தவிர் வெய்ய காமம் என்பது காமம் இன்மையைக் குறிக்கின்றது. இன்னமாக; பிறக்கும் பிறவி எல்லாம் நீ காக்கின்ற உலகிலே இங்ஙனம் இனிது உறைவோமாக. பாவை; கொண்டநிலை தான் கெடுமளவும் குலையாத தன்மை போல. அவர் தாம் கொண்ட கற்பும் குலையாதிருத்தலின், பாவை என்றார். ( 165 )
------------
-
2543. வேரிநா றலங்கன் மாலை மின்னிழை மயங்கி யெங்கும்
பூரித்துப் புதவந் தோறுங் குவளையு மரையும் பூத்துப்
பாரித்துப் பைம்பொ னாகருலகிவண் வீழ்ந்த தேபோன்
மாரிமா மயில னாரு மைந்தரு மயங்கி னாரே.
விளக்கம் : குவளை மகளிர் கண்களுக்கும் தாமரை ஆடவர் கண்களுக்கும் கொள்க. அன்றி மகளிர் முகத்திற்குத் தாமரையும் கண்கட்குக் குவளையுங் கொள்ளினும் பொருந்தும். தம்மைக் காக்கும் அரசனாதலின் இருபாலாரும் அன்பு மிகுதியால் உடன் வந்தனர். ( 166 )
------------
-
2544. கோதைதாழ் குடையி னீழற் கொற்றவன் பருதி யாக
மாதரார் முகங்க ளென்னுந் தாமரை மலர்ந்த தெண்ணீர்க்
காதநான் ககன்ற பொய்கைக் கடிநகர் குவளை பூத்துப்
பேதுறு கின்ற போன்ற பெருமழைக் கண்கண் மாதோ.
விளக்கம் : காவிரிப் பூம்பட்டினத்தையும் நான்கு காதப் பரப்புடையதாகக் கூறியுள்ளனர். காத நான்குங் கடுங்குரல் எழுப்பி (சிலப். 5 : 133). ( 167 )
------------
-
2545. மாந்தரு மாவுஞ் செல்ல மயங்கிமே லெழுந்த நீறு
தேந்தரு கோதை யார்தந் தெண்மட்டுத் துவலை மாற்ற
வாய்ந்தபொன் னகர மெங்கு மணிகல வொளியி னாலே
காய்ந்துகண் கலக்கப் பூத்த கற்பக மொத்த தன்றே
விளக்கம் : பொன்னகர் கற்பகத்தை ஒத்தது, அணிகலவொளி நகரம் எங்கும் நிறைந்தது என்பதனால் மைந்தர்கள் அணிகலன்களை வீசினர் என்பது பெறப்படும், கண்கலக்க - எதிர்ப்பட்ட, பொன்னுலகக் கற்பகம் கேட்ட பின்னரே கொடுக்கும் : இக் கற்பகங்கள் கண்ட அளவிலே கொடுத்தன. அரசன்முன் மகிழ்ச்சியினால் அணிகலன்களை எறிந்தனர். பூத்த கற்பகம் எனவே கொடை கொள்க.
( 168 )
------------
-
2546. பெண்பெற்ற பொலிசை பெற்றார்
பிணையனார் பெரிய யாமுங்
கண்பெற்ற பொலிசை பெற்றா
மின்றெனக் கரைந்து முந்நீர்
மண்பெற்ற வாயுள் பெற்று
மன்னுவாய் மன்ன வென்னாப்
புண்பெற்ற வேலி னான்மேற்
பூமழை தூவி னாரே.
விளக்கம் : உப்பும் உலகும் உள்ளளவும் வாழ்வீர் என்பது உலக வழக்கு. வீரமகளும் திருமகளும் விடாமல் இவனிடம் உறைதலின் பெண்பெற்ற பேறு பெற்றாராயினார். இங்ஙனம் நீடுவாழ்கென வாழ்த்துதற்கு உரியோர் கற்புடை மகளிர். ஏனையோர் வாழ்த்துதலிற் பயனின்றாம். இத்துணையும் உயர்குடிப் பிறந்தோர் உறையும் தெருவைக் கூறினார். ( 169 )
------------
-
வேறு
2547. சுண்ணமேற் சொரிவார் தொழுதுதொங்கல் வீழ்ப்பார்
தண்ணென் சந்தனநீ ரார்ந்துதேன் றுளும்பும்
வண்ணப்பந் தெறிவார் வளையொலிப்ப வோச்சிக்
கண்ணியிட் டெறிவார் கலவைநீர் தெளிப்பார்.
விளக்கம் : தொங்கல் - மலர்மாலை. தண்ணென் : குறிப்பு மொழி, ஆர்ந்து - நிறைந்து; நிறையப்பட்டு என்க. கண்ணி - ஒருவகை மாலை. இட்டெறிவார் : ஒருசொல். கலவை நீர் பல்வேறு நறுமணமுங் கலந்த நீர். ( 170 )
------------
-
2548. முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பா
ரைந்துருவ வம்பி னநங்கனென் றயர்வார்
கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார்
சிந்தையிற் களிப்பார் சேணெடிய கண்ணார்.
விளக்கம் : முந்து என்றது பண்டைக்காலத்தே என்றவாறு. சூர் - சூரபன்மா. இந் நம்பி முருகன் என்பார் என மாறுக. நம்பி : சீவகன். ஐந்தம்பு உருவ அம்பு என இயைக்க. மலரம்பு என்பது தோன்ற உருவ அம்பு என்றார். அநங்கன் - காமன்; உருவமில்லாதவன் என்னும் பொருட்டு. சேண்நெடிய - மிக நீண்ட என்க. ( 171 )
------------
-
2549. தேசிக முடியுந் திருந்துபட் டுடையும்
பாசமாக நின்று பன்மலர்க் கழுநீர்
மூசிவண் டிமிரும் மொய்யலங்க றாழக்
காசில் காமஞ்செப்பிக் கண்ணினா லிரப்பார்.
விளக்கம் : தேசிகம் - ஒளி. பாசம் - கயிறு. பல் கழுநீர் மலர் என்க. கழுநீர் மலர் அலங்கல் வண்டிமிரும் மொய்யலங்கல் என இயைக்க. காசு - குற்றம். ( 172 )
------------
-
2550. வண்டறைந்த தாரான் வண்ணங்கண்ட பின்றைக்
கண்டிலேனென் மாமை கைவளையொ டென்பா
ரொண்டொடி யிவன்றன் னுருவுகண்டு வாழ்வார்
பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர்போத வென்பார்.
விளக்கம் : உருவுகண்டு வாழும் பெண்டிர் பெரியர் எனவே, யாமும் பெரியம் என்றாராம். மற்றும், உருவு கண்டு வாழ்வார் பெரியர் எனவே நுகரும் மகளிர் தவத்தால் மிகப் பெரியரென்றும் அத்தகைய தவத்தை யாமும் செய்தல் வேண்டும் எனவும் கூறினாராயிற்று. ( 173 )
------------
-
வேறு
2551. கொழித்திரை யோத வேலிக்
குமரனைப் பயந்த நங்கை
விழுத்தவ முலக மெல்லாம்
விளக்கிநின் றிட்ட தென்பார்
பிழிப்பொலி கோதை போலாம்
பெண்டிரிற் பெரிய ணோற்றாள்
கழித்துநின் றறாத கற்பிற்
சுநந்தையே யாக வென்பார்.
விளக்கம் : சுழித்தல் வேறிடத்தின்றி நிற்றல். அறாத கற்பு - அருட் கற்பு. ஓதவேலி : அன்மொழித்தொகை : உலகம். குமரன் : சீவகன். பயந்த நங்கை என்றது விசயையை. பிழி - தேன். பெரியளாக நோற்றவள் என்க. ( 174 )
------------
-
2552. சாந்தகங் கிழிய மாலைத்
தடமுலை ஞெமுங்கப் புல்லிச்
சேர்ந்தெழு நங்கை மாரே
திருநங்கை மார்க ளல்லார்
கூந்தலு முலையு முத்துங்
கோதையுஞ் சுமந்து நைவான்
போந்தவந் நங்கை மார்கள்
பொய்ந்நங்கை மார்க ளென்பார்.
விளக்கம் : வடிவு மாத்திரையாய்ப் பயன் பெறாமையின், பொய்ந் நங்கைமார்கள் என்றார். அகம் : ஆகம் என்பதன் விகாரம்.(175)
------------
-
2553. இடம்பட வகன்று நீண்ட
விருமலர்த் தடங்க ணென்னுங்
குடங்கையி னொண்டு கொண்டு
பருகுவார் குவளைக் கொம்பி
னுடம்பெலாங் கண்க ளாயி
னொருவர்க்கு மின்றி யேற்ப
வடங்கவாய் வைத்திட் டாரப்
பருகியிட் டீமி னென்பார்.
விளக்கம் : இட்டீமின் : வினைத்திரிசொல். இரு கண்களால் நுகர முடியாதென்பார், உடம்பெலாங் கண்களாயின் என்றார். ( 176 )
------------
-
2554. முலைமுத றுறத்த வன்றே
மூரித்தா ளாளி யானைத்
தலைநிலம் புரள வெண்கோ
டுண்டதே போன்று தன்கைச்
சிலையிடம் பிடித்த ஞான்றே
தெவ்வரைச் செகுத்த நம்பி
நிலவுமிழ் குடையி னீழற்
றுஞ்சுக வைய மென்பார்.
விளக்கம் : தெவ்வர் என்ற பன்மை பிள்ளைகள் நூற்றுவரையுங் கருதி. வேடர் பகைவரல்லர் என்பது ஆண்டே விளக்கப்பட்டது. யானைக்குக் கோட்டைப் பறித்த பின்னரும் சிறிது பொழுது பதைத்து உயிர் போகுமாறுபோல, நிரைமீட்ட அன்று தொட்டும் இவன் நமக்குப் பகையாவன் என்னுங் கருத்துடன் பதைத்துப் பட்டான் என்று தாம் கருதி யிருந்தமை கூறினார். அவன் பதைத்தமை, வாளுற்ற புண்ணுள் வடிவே லெறிந்திற்றதே போல் (சீவக. 455) என்றதனான் உணர்க. ( 177 )
------------
-
வேறு
2555. இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறுந்
தன்னிகரில் வாணிகனிற் றான்வளர்ந்த வாறுங்
கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவுங் கண்டா
லென்னைதவஞ் செய்யா திகழ்ந்திருப்ப தென்பார்.
விளக்கம் : பொன்னகர் எனவும் பாடம். கண்டார் கூற்றாதலின் பிள்ளையார் குலத்திற்கு ஒவ்வாத வாணிகன் என்றார். (பிள்ளையார் : சீவகன்.) ( 178 )
------------
-
2556. பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினுந்
திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்ட
மொரு முழமுஞ் சேறலில ரேனும் பொரு ளூர்க்கே
வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ.
விளக்கம் : கடத்தற் கருமையின், வரையையும் நீந்தி என்றார். தந்தை முறையால் தேடிய பொருள் தானே வந்து இவனுக்கு எய்திற்றென்றார். ( 179 )
------------
-
2557. நஞ்சு குடித் தாலுநவை யின்றுதவ நின்றா
லஞ்சியொளித் தாலுமா ணில்லைதவ முலந்தாற்
குஞ்சரத்தின் கோட்டிடையு முய்வர்தவ மிக்கா
ரஞ்சலில ரென்றுமற னேகளைக ணென்பார்.
விளக்கம் : தன்னை ஆக்கிய சச்சந்தனைக் கொன்றும் கட்டியங்காரன் அரசாண்டிருந்ததனால், நஞ்சு குடித்தாலும் தவம் நின்றால் நவையின்றாம் என்றார், தாமரை வியூகம் வகுத்து அதனுள்ளிருந்தும் அவன் பட்டமை கருதி, அஞ்சி ஒளித்தாலும் தவம் உலந்தால் அரண் இல்லை என்றார். சீவகன் யானையால் இடறுண்டிறக்கவேண்டும் என்று கட்டியங்காரன் கருதினும் சீவகன் உய்ந்தமை கருதித், தவம் மிக்கார் கோட்டிடையினும் உட்பட உய்வர் என்றார். களைகண் : முதுகண் என்றாற் போலும் வழக்கு, முதுகண் - காப்பாக இருக்கும் முதியவர். முற்றிழை மகளிர்க்கு மதுகணாம் என்பது பெருங்கதை (1. 36 : 189). ( 180 )
------------
-
2558. முரல்வாய சூற்சங்க முடமுட்
டாழை முகைவிம் முங்
கரைவாய முத்தீன்று கானன்
மேயுங் கடற்சேர்ப்ப
னுரைவாய் நகர்பரவப் போகி
யொண்பொ னெயிழ்சூழ்ந்த
விரைவாய் பூம்பிண்டி வேந்தன்
கோயிற் கெழுந்தானே.
விளக்கம் : சங்கு முத்தை யீன்று வருத்தம் இன்றித் தானே மேயும் எனவே, தன் பிள்ளைக்குச் செவிலியாய்த் தாழை முகை வளர்க்குமென்று கருதிற்றெனத் தோன்றல்காண்க; சங்கு தாழையின் முகைக்கு உவமை. உரையிடத்தனவாகிய நகர்; நிலநாவின் திரிதரூஉம் என்றாற் போல. தெய்வத்தால் அசோகு விரைமாறாமல் நிற்கும். ( 181 )
------------
-
2559. அருகு மயில்கவ வன்ன
மேங்கக் குயில்கூவக்
குருகு பொறையுயிர்க்குங் கொடுமுட்
டாழை வெண்டோட்டு
முருகு பொறையுயிர்க்கு மொய்பூங்
காவிற் படைநீக்கித்
திருகு கனைகழலான் செம்பொற்
கோயில் சேர்ந்தானே.
விளக்கம் : மயிலும் அன்னமும் குயிலும் கூவக் குருகு பொறை உயிர்க்குங்கா வெனவே, குருகின்வருத்தத்திற்கு அவைகளும் வருந்தின என்பது தோன்றிற்று. ( 182 )
------------
-
2560. திறந்த மணிக்கதவந் திசைக
ளெல்லா மணந்தேக்கி
மறைந்த வகிற்புகையான் மன்னர்
மன்னன் வலஞ்செய்து
பிறந்தே னினிப்பிறவேன் பிறவா
தாயைப் பெற்றேனென்
றிறைஞ்சி முடிதுளக்கி யேத்திக்
கையாற் றொழுதானே.
விளக்கம் : ஏத்தி : நிகழ்காலமுணர்த்தியது. அரசன் வருங்காலத்துப்பிறர் புகுதாமற் கதவடைத்து அவனுக்குத் திறத்தல் இயல்பு. அகிற்புகை மணத்தினோடு நிறைதலினாலே திசைகள் மறைந்தன. ( 183 )
------------
-
வேறு
2561. திருமறு மார்பினை திலகமுக் குடையினை
யருமறை தாங்கிய வந்தணர் தாதையை
யருமறை தாங்கிய வந்தணர் தாதைநின்
னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும்.
விளக்கம் : தொழுதும் எனும் உளப்பாடு மற்றைய மக்களையும் கருதிற்று. உம்மொடு வரூஉம் கடதற (தொல். வினை. 5) நிகழ்கால முணர்த்தல் காலமயக்கு. எரிபுரைமலரடி என்றார் பிறவியைச்சுடுதலின், அன்றி மலரின் நிறத்திற் காக்கலுமாம். ( 184 )
------------
-
2562. உலகுணர் கடவுளை யுருகெழு திறலினை
நிலவிரி கதிரணி நிகரறு நெறியினை
நிலவிரி கதிரணி நிகரறு நெறியைநின்
னலர்கெழு மரைமல ரடியிணை தொழுதும்.
விளக்கம் : அணி : உவமஉருபு. நிலவின் கதிர் போன்ற நெறி : சுக்கிலத் தியானம். ( 185 )
------------
-
2563. மறுவற வுணர்ந்தனை மலமறு திகிரியை
பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனை
பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வநின்
னறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும்.
விளக்கம் : இவை மூன்றும் தாழம்பட்ட ஓசையும் முடுகியலுமாய் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிக் கந்தருவ மார்க்கத்தான் இடைமடக்கிய தேவபாணித் தாழிசைக் கொச்சக ஒருபோகு. திகிரி - அறவாழி. பொறியுணர் வடங்கிய விடத்தே உணரப் படுபவன் ஆகலின் பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வனை என்றார். இந்திரியங்கட்கு வரம்பாகிய முதல்வன் என்றது, அவற்றிற்கு அவ்வருகு பட்டிருக்கின்ற முதல்வன் என்றவாறு என்பர் நச்சினார்க்கினியர். ( 186 )
------------
-
2564. நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடி
நொந்தார்க் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
கந்தார் கடாத்த களிறுங்கொடித் தேர்க ணூறுஞ்
செந்தா மரைமே னடந்தானடி சேர்த்தி னானே.
விளக்கம் : நொந்தார் - பகைவர். நொந்தார்க் கடந்தான் என்றது சீவகனை. விளக்குப்புறம் - திருவிளக்கெரித்தற் பொருட்டுக் கொடுக்குங் கொடைப் பொருள். கந்து - தூண். செந்தாமரைமேனடந்தான்; அருகக் கடவுள். ( 187 )
------------
-
2565. வாடாத மாலை மணிமாலைபொன் மாலை முத்த
நீடார மாலை நிழன்மாண்ட பவழ மாலை
மாடார்ந் திழியு மருவிம்மலர் பொற்ப வேற்றிக்
கூடார்க் கடந்தான் வலங்கொண்டிடஞ் சென்று புக்கான்.
விளக்கம் : வாடாத மாலைகளாகிய என்க. நிழல்மாண்ட - ஒளியால் மாட்சிமைப்பட்ட. மாடு - பக்கம். அருவிம்மலர் : மகரம் வண்ண நோக்கி விரிந்தது. பொற்ப - பொலிவுற. கூடார் - பகைவர். இடம் - தன்னிடமாகிய அரண்மனை. ( 188 )
------------
-
வேறு
2566. உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை
வலமருப் பீர்ந்து செய்த மணிகிளர் கட்டி லேறி
நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்தி ருந்தான்
புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ.
விளக்கம் : நிவந்து என்றார் அரசரில் தான் மேலாக இருத்தலின். ( 189 )
------------
-
2567. எத்துணைத் தவஞ்செய் தான்கொ
லென்றெழுந் துலக மேத்த
வித்திய புகழி னாற்கு
விருந்தர சியற்றி நாடு
மொத்தன னல்கித் தன்னை
யுழந்தனள் வளர்த்த தாய்க்குச்
சித்திரத் தேவிப் பட்டந்
திருமக னல்கி னானே.
விளக்கம் : அந்தணா ளர்க்கு அரசுவரைவின்றே (தொல். மரபு. 82); என்பதனால், ஈண்டு அளித்தது குறுநில மன்னர்க்குரிய அரசாயிற்று ; முடியுடை வேந்தனாந்தன்மை வணிகனுக்கில்லையாதலின் என்பர் நச்சினார்க்கினியர். ( 190 )
------------
-
2568. இனக்களி யானை மன்ன
ரிளவுடை யானென் றேத்தத்
தனக்கிளை யானை நாட்டித்
தான்றனக் கென்று கூறிச்
சினக்களி யானை மன்னர்
மகளிரைச் சேர்த்தி நம்பன்
மனக்கினி துறைக வென்று
வளங்கெழு நாடு மீந்தான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், மன்னர் மகளிரை மணம் புணர்த்தியதையும் நாடுகளை நல்கியதையும் நபுல விபுலர்க்குச் செய்தான் என்பர். செய்யுளிற் சிறிதும் அதற்கு இடமில்லை. மன்னர் மகளிரை எனப் பன்மையாற் கூறியுள்ளாரே எனின், ஒருவன் பல பெண்களை மணத்தல் அக்கால இயல்பென்க. போரில் விபுலன் பட்டான் என்றும் நம்பன் என்றது நபுலனை யென்றும் அவனுக்கு மகளிரைச் சேர்த்தினான் என்றும் நச்சினார்க்கினியர்க்கு முன்னிருந்தோர் கூறுவதாகத் தெரிகிறது. இதனை, அன்றி, விபுலன் பட்டான் என்று கூறுவார் நம்பனென்றதனை, நபுலனுக்காக்கி அவனுக்கு மகளிரைச் சேர்த்தி என்ப என்று கூறுவதாற் காண்க. ( 191 )
------------
-
2569. ஆழ்கடல் வையத் தில்லா
வருநிதி யரசு நல்ல
சூழ்மணி யாழி செம்பொற்
சூட்டொடு கண்ணி காதற்
றோழர்கட் கருளித் தொல்லை
யுழந்தவர் தம்மைத் தோன்ற
வாழ்கென நிதியு நாடு
மன்னவன் கொடுப்பித் தானே.
விளக்கம் : அருநிதியும் அரசும் எனினுமாம். மணியாழி என்றது அரசனாற் கொடுக்கப்படும் பட்டத்திற்கு அறிகுறியாகிய ஏனாதி மோதிரத்தை. தோழர் - பதுமுகன் முதலியோர். ( 192 )
------------
-
2570. வளர்த்தகைத் தாயர் தம்மை
வருகென வருளித் தங்கள்
கிளைக்கெலாஞ் சிறப்புச் செய்து
கேட்டவர் மருள வைந்தூர்
விளைத்துள கெடாத வைக
லாயிர மிறுப்புத் தண்டக்
கொளக்கொடுத் தயா வுயிர்த்தான்
கொற்றவ னென்ப வன்றே.
விளக்கம் : என்ப : அன்று ஏ : அசைகள். கைத்தாயர் - செவிலித்தாயர். தங்கள் என்றது அவர்கள் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. உள விளைத்துவைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கெடாத ஊர் ஐந்து கொடுத்து என இயைக்க. கொற்றவன் : சீவகன்.(193)
------------
-
2571. கைத்தல மந்தி கொண்ட
கைமகப் போன்று தன்கட்
பத்திமை விடாது மேனாட்
படைக்கல நவின்ற பொற்றேர்
மைத்துன மன்னர்க் கெல்லாம்
வளநிதி மணிசெய் மான்றேர்
தத்துநீர் மிசைச்சென் மாவுந்
தவழ்மதக் களிறு மீந்தான்.
விளக்கம் : மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் - அவையும் அன்ன அப்பா லான, (தொல். மரபு. 14) - என்றாராதலின் மகவு என்றார். மான் தேரும் என உம்மை விரிக்க. மைத்துன மன்னர்! உலோகபாலன் விசயன் முதலோர். ( 194 )
------------
-
2572. கோமகன் கோல மான்றேர்க்
கோவிந்த னென்னுங் கொய்தார்
மாமற்கு மடங்க லாற்றற்
கட்டியங் கார னென்ற
தீமக னுடைய வெல்லாந்
தேர்ந்தனன் கொடுத்துச் செல்வ
னோவலில் கறவை யொத்தா
னுலோகபா லற்கு மாதோ.
விளக்கம் : கோமகன் ஆகிய கோவிந்தன் என்க. மடங்கல் - சிங்கம். தீமகன் - தீயவன். தேர்ந்தனன் : முற்றெச்சம். செல்வன் : எழுவாய்; சீவகன். ஓவல் - ஒழிதல். கறவை - கறக்கும் ஆள். மாது, ஓ : அசைகள். ( 195 )
------------
-
2573. பேரிடர் தன்க ணீக்கிப்
யாய தோழற்
கோரிடஞ் செய்து பொன்னா
லவனுரு வியற்றி யூரும்
பாரிடம் பரவ நாட்டி
யவனது சரிதை யெல்லாந்
தாருடை மார்பன் கூத்துத்
தான்செய்து நடாயி னானே.
விளக்கம் : பேரிடர் என்றது. கட்டியங்காரனால் கொலையுண்ணலை. தனது துன்பக்கடலுக்குத் தெப்பமாகிய என்க. தோழன் : சுதஞ்சணன். இடம் - ஈண்டுக் கோயில். பாரிடம் : ஆகுபெயர். சரிதை - வரலாறு. ( 196 )
------------
-
2574. ஊன்விளை யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத்
தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத்
தேன்விளை யாடு மாலை யணிந்துபொற் பீடஞ் சேர்த்தி
யான்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே.
விளக்கம் : அதன் நிழலிலே ஆனிரை தங்குதலும் பால் சொரிதலும் அறமாமென்ப. ( 197 )
------------
-
வேறு
2575. கொட்ட மேகம ழுங்குளிர் தாமரை
மொட்டின் வீங்கிய வெம்முலை மொய்குழ
லட்டுந் தேனழி யும்மது மாலையார்
பட்ட மெண்மரும் பார்தொழ வெய்தினார்.
விளக்கம் : கொட்டம் - மணம். மொட்டு - அரும்பு. மொய்குழல் : வினைத்தொகை. மதுமாலை என்புழி - மது, அடைமொழி மாத்திரையாய் நின்றது. பார்தொழ எண்மரும் பட்டம் எய்தினார் என்க. ( 198 )
------------
-
2576. பஞ்சி சூழல்குற் பல்வளை வீங்குதோள்
வஞ்சி நுண்ணிடை வம்பணி வெம்முலை
விஞ்சை யன்மகள் சீறடி வீழ்ந்தன
ரஞ்சி லோதிய ரும்பவிழ் கோதையார்.
விளக்கம் : பஞ்சி - ஈண்டு ஆடை. வஞ்சி - கொடி. வம்பு - கச்சு. விஞ்சையன் மகள் : காந்தருவதத்தை. கோதையார் என்றது ஏனைய மனைவிமார் எழுவரையும். ( 199 )
------------
-
2577. வீடி லைந்தரைக் கோடி விருத்திமே
னாடி யாயிர நாடொறு நங்கைமார்க்
காடு சாந்தடி சிற்புற மாக்கினான்
கோடு வாலொளிக் குங்குமக் குன்றனான்.
விளக்கம் : வீடு - விடுதலுமாம். விருத்தி - (வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்) சீவிதம். ஆடு - அடுத்திருப்பது. ஆடு - ஆடுதலுமாம். அடிசில் - உணவு. புறம் - இறையிலி. குன்றனான் : சீவகன். ( 200 )
------------
-
2578. ஆனை மும்மத மாடிய காடெலா
மானை நோக்கியர் வாய்மது வாடின
வேனன் மல்கிவெண் டேர்சென்ற வெந்நிலம்
பானன் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே.
விளக்கம் : காடு கெடுத்து நாடாக்கினான் என்க. புறவே, ஒள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன (பதிற். 13) என்றார் பிறரும். மும்மத யானையாடிய காடு எனினுமாம். மான் நை நோக்கியர் எனக் கண்ணழித்துக் கொள்க. நைநோக்கியர் : வினைத்தொகை. வேனல் - வேனில், வெண்டேர் - பேய்த்தேர். பானல் - குவளை. ( 201 )
------------
-
2579. மாரி மல்கி வளங்கெழு மண்மகள்
வாரி மல்கி வரம்பில ளாயினா
ளாரி யாவடி சிற்றளி யானெய்வார்ந்
தேரி யாயின வெங்கணு மென்பவே
விளக்கம் : மாரி - மழை. மண்மகள் - நிலம். வாரி - வருவாய். ஆரி - மேல். ஆக, ஈறு கெட்டு ஆ என நின்றது. அடிசிற்றளி - மடைப் பள்ளி. ஆனெய் - பசுவின் நெய். ஆனெய் வார்ந்து ஏரியாயின என்றதனால் பசுக்கள் மிக்குப் பால் சுரந்தன என்பது பெற்றாம். ( 202 )
------------
-
2580. ஏக வெண்குடை யின்னிழற் றண்ணளி
மாக மாய்க்கட லெல்லை நிழற்றலாற்
போக பூமியும் பொன்கிளர் பூமியு
நாகர் நாகமு நாணி யொழித்தவே.
விளக்கம் : ஏகவெண்குடை - ஒற்றைக்குடை. போகபூமி - உத்தர குரு. பொன்கிளர் பூமி - வானவர் உலகம். நாகர் நாகம் - நாகர்கள் உறையும் நாகலோகம். தம் பெருமையை ஒழித்த என்க. ( 203 )
------------
-
2581. வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகைக்
கெண்டை வென்றகண் ணார்களுங் கேள்வரு
முண்டு மூத்திடை யூறிலர் சேறலாற்
பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே.
விளக்கம் : வரி - இசைப்பாடல். முரலுதற்கிடமான பூஞ்சிகை என்க. கேள்வர் - அவர்தம் கணவன்மார். பண்டையூழி - முகலூழி; அது கிருதயுகம். பார் உலகம் முதலூழியில் மாந்தர் நிறைவாழ் நாளுடன் குறைவொன்றுமின்றி வாழ்ந்தனரென்ப. ( 204 )
------------
-
வேறு
2582. செருநாடு செஞ்சுடர்வேற்
றிருகுசெம்பொற் கனைகழற்காற்
றிருநாடு தேம்பைந்தார்ச்
செல்வன்செவ்வி பெறாதொழிந்து
பெருநாட் டருங்கலங்கள்
சுமந்துபேரு மிடம்பெறாஅ
தொருநாட் டரசுணங்க
வுரவோன்கொற்ற முயர்ந்ததே.
விளக்கம் : நாட்டு : நிலை யெனினும் ஆம். செரு போர். செருநாடுதற்குக் காரணமான வேல் என்க. திரு : திருமகள். வெற்றித்திரு வென்க. உணங்க வருந்த. உரவோன் - சீவகன். கொற்றம் - வெற்றி; அரசுரிமையுமாம். ( 205 )
------------
-
வேறு
2583. வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச்
சிலையவர் குரம்பை யங்கண் மானினஞ்சென்று சேப்ப
நிலைதிரிந் தூழி நீங்கி யுத்தர குருவு மாகிக்
கொலைகடிந் திவற வின்றிக் கோத்தொழி னடத்து மன்றே.
விளக்கம் : வாளை முன்றிலிற் பாயினும் வலையர் பற்றாராய், மானினம் தம் குரம்பையிலே தங்கினும் வேடர் கொல்லாராய்க் கொலை கடிந்தான். அதனாலே இவ்வூழியின் நிலை திரிந்தது. இச்செய்யுளோடு,
-
கிளை கலித்துப் பகைபேணாது
வலைஞர் முன்றில் மீன்பிறழவும்
விலைஞர் குரம்பை மாவீண்டவும்
கொலைகடிந்தும்“,(196 - 99)
எனவரும் பட்டினப்பாலை ஒப்புநோக்கற்பாலது. ( 206 )
------------
-
வேறு
2584. கதங்கனல் யானை நெற்றிக்
கட்டிய பட்ட மேபோன்
மதங்கமழ் கோதை யல்குன்
மனாக்கிடந் திமைத்துக் காமப்
பதம்பல பார்க்குஞ் சாயற்
பாவைமற் றநங்க மாலை
விதம்படக் கருதி மாதர்
விளைத்தது விளம்ப லுற்றேன்.
விளக்கம் : என்பது, பதுமையாருடன் கூட அழைத்துக் கொள்ளல் முறை யன்மையின், பின்பு அழைக்கக் கருதியிருந்த தேசிகப்பாவை, சீவகன் தன்னிடத்தே அன்பின்மையின், தன்னை மறந்தானெனக் கருதித் தானே வந்தவள், சீவகன் கருத்தறியாமல், அவன் அநங்க மாலையை நினைத்துக் கொண்டிருக்கிறானெனக் கருதி, அவள் தோழியைப் போல் ஓலை கொண்டு வந்தாளாக நடித்ததொரு செய்தியைக் கூறுகின்றார். தானுடைய முல்லை யெல்லாம் தாது உகப் பரித்திட்டானே (சீவக. 686) எனவே, அவளைக் கட்டியங்காரன் கூடியது பெற்றாம். அதனாற் சீவகன் அவளைப் புணர்ந்தானெனக் கூறுதல் ஆசிரியர்க்குக் கருத்தன்றென்க. ( 207 )
------------
-
வேறு
2585. ஈர்ந்தண் கோதை யிளையார்குழாத்திடை
யாளெங்கோனடி சேர்வலென்
றார்ந்த செந்தா மரைமுகத்தினா
ளடிகள்வந்தீங் ககன்கடை யுளாள்
சார்ந்த சாயற் றடமாமுலைத்
தையல்வல்லே வருகென் றான்
சேர்ந்து மன்னர் முடிவைரவிற்
றிளைக்குஞ் செம்பொற் செறிகழலினான்.
விளக்கம் : நாம் அழைப்பதற்கு முன்னே தேசிகப் பாவை வந்தாள் என்று உணர்தலின், வல்லே வருக என்றான். அன்றி, அநங்கமாலையை வல்லே வருக என்றானாயின், அவள் எக்காலத்து வருவாள் என்று அவள் வரவை விரும்பியிருந்தானாம். ஆகவே, அவளைத் தீண்டி ஒப்பனை செய்தலின், தனக்கு நிகழ்ந்த வேட்கையைக் கட்டியங்காரற்கஞ்சிக் கரந்திருந்து, அவன் அவளை வலிதிற் கொண்டு போதற்கும் பொறுத்திருந்தானாம். அவ்வாறாயின், அவள் வீரத்திற்கிழுக்காம். ( 208 )
------------
-
2586. அருவிலை நன்கலஞ் செய்போர்வை
யன்னநாண வடியொதுங்கிச்சென்
றுருவ மொவ்வா தொசியுநுசுப்
பொல்கிக்கோமா னடிதொழுதபின்
மருவின் சாயன் மணிமெல்விரல்
கூப்பியோலை மரபினீட்ட
விரவி யென்ன விளங்குமொளி
யிறைவன் கொண்டாங் கதுநோக்குமே.
விளக்கம் : நோக்கும் என்பதனைப் பெயரெச்சமாக்கி, நோக்கும் இறைவன் எனக் குளகம் ஆக்குவர் நச்சினார்க்கினியர். அருவிலைப் போர்வை, நன்கலம் செய் போர்வை என இயைக்க. நன்கலத்தைப் புறத்தே காட்டும் நுண்போர்வை என்றவாறு. அன்னமும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. ஒல்கி - ஒல்க. கோமான் - சீவகன்; மருவின்சாயல் என்றது தேசிகப்பாவையை. இரவி - ஞாயிறு இறைவன் : சீவகன். அது அவ்வோலையை.( 209 )
------------
-
2587. அடிகள் கண்டாங் குவந்தருளுக
வநங்கமாலை யடிவீழ்ச்சிமுன்
கொடிய வேலான் கொதித்தரங்கி
னீக்கிக்கோயிற் சிறைவைத்தபின்
கடிசெய் பைந்தார்க் கமழ்மாலைவேற்
கந்து கற்குச் சிறுவயானிப்
படிய னல்காய் பசுமணிகள்வேய்ந்
தோங்கும்பைம்பொற் செறிகழலினாய்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். மாலை வேலிற்கு அடை. அடிகள் : விளி. ஆங்கு : அசை. வேலான் : கட்டியங்காரன். அரங்கு - கூத்தாடு களம். கடி - மணம். சிறுவ என்று என வருவித்துக்கொள்க. ( 210 )
------------
-
2588. என்ன நாளு மரற்றப்பொறான்
விடுப்பப்போகி யினமழைகண்மொய்த்
தன்னந் துஞ்சு மடிக்குடிலினுள்
ளன்றியான் கொண்ட நாடகத்தினைத்
துன்னி நம்பி யுருவுதீட்டித்
தொங்கல்வேய்ந்து தொழுதாற்றநீ
மன்னர் மன்ன மதிதோய்குடையாய்
மகளிர்காம மறைத்தொழி தியோ.
விளக்கம் : இப் பாட்டும் அடுத்த பட்டுடன் தொடரும். ஒழிதியோ என்று தொழுது ஆற்ற எனப் பிற்கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
பொறானாகி விடுப்ப என்க. அடிக்குடில் - அடிச்சேரி. துன்னி - துன்ன. நம்பி : முன்னிலைப்படர்க்கை. தொங்கல் - மாலை. குடையாய் நீ என இயைத்துக்கொள்க. ஆற்ற என்பதற்கு ஒருவாறு யான் ஆற்றியிருப்பவும் எனினுமாம். ( 211 )
------------
-
2589. கண்க டுஞ்சா கதிர்முத்தமே
காலுங்கையார் வளைகழலுமாற்
பண்கொள் சொல்லார் மாமைநீங்கிப்
பைம்பொன் போர்த்த படாமுலைகளு
மண்கொள் வேன்மன்னர் நண்பின்மையை
வையக்கெல்லா முடனறையவோ
பெண்க ளாவி விடுத்ததொழிபவோ
பெரியோர்நண்படைந் தார்பெயர்பவோ.
விளக்கம் : துஞ்சாதனவாகி முத்தம் காலும் என்க. முத்தம் - கண்ணீர்த்துளி ஆல் - அசை, மாமை - பொன்னிறம். பொன்போர்த்த - பசலைபூத்தன. வையக்கு - வையத்திற்கு. நண்பின்மை - நட்புப்பண் பின்மையை. ( 212 )
------------
-
2590. அறனிழலா யுலகளிக்கு நின்னார
மாலையணி வெண்குடைப்
புறனிழலி னயலேனோ யான்புல்லா
மன்னர்நிணம் பொழியும்வேன்
மறனிழன் மதயானையாய் வந்தவென்
றோழி வாமலேகை
திறனழி யாமையின்னே விடுத்தருளுக
தேர்வேந்தர் வேந்தனே.
விளக்கம் : அடிகள் என்று தொடங்கும் (2587) செய்யுள் முதல் இதுவரையுள்ள பொருள்கள் தேசிகப்பாவை கொணர்ந்த முடங்கலில் உள்ளவை. இவன் அநங்கமாலையை உட்கொண்டிருப்பானாகக் கருதி, இவற்கு அவள் எழுதின ஓலைகொண்டு வந்தாளொரு தோழியாத் தேசிகப் பாவை நடித்தாள். இதனால் தன் வேட்கையை அறிவித்தாளாயினாள் ( 213 )
------------
-
2591. புள்ளும்யாழுங் குழலுமேங்கப்
புனைந்துவல்லா னினைந்தியற்றிய
பள்ளிச்செம்பொற் படையமளிமேன்
மழலைமணியாழ் தான்வெளவிக்
கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங்
கொடியைப்புல்லி மணிக்குவட்டினை
யெள்ளிவீங்கித் திரண்டதோண்மேற்
குழைவில்வீச விருந்தானே.
விளக்கம் : புள் - வளை. புட்கை போகிய புள்தலை மகார் (மலைபடு 253) என்றார். தாளத்தை ஒற்றுதலின் வளையொலித்தன.(214)
------------
-
2592. அங்கைசேப்பக் குருகிரங்க
வலங்கலம்பூங் குழறுயல்வர
மங்கைநல்லார் பவழவம்மி
யரைத்தசாந்த மலர்பெய்மாலை
பொங்குதூமக் கொழுமென்புகை
புரிந்தபஞ்ச முகவாசமுந்
தங்குதாம மார்பினாற்குந்
தையலாட்குங் கொண்டேந்தினாரே.
விளக்கம் : அங்கை - அகங்கை; உள்ளங்கை. சேப்ப - சிவப்ப; குருகு - வளையல். அரைத்த - அரைக்கப்பட்ட. தூமம் - தூமமூட்டி; ஆகுபெயர். மார்பினான் : சீவகன். தையலாள் : தேசிகப்பாவை. ( 215 )
------------
-
2593. அருளுமாறென்னை யநங்கமாலை
யடித்திதோழி யன்றோவெனத்
தெருளலான்செல்வக் களிமயக்கினாற்
றிசைக்குமென்னறி வளக்கியகருதி
மருளிற்சொன்னாய் மறப்பேனோயா
னின்னையென்ன மகிழைங்கணை
யுருளுமுத்தார் முகிழ்முலையினா
ளுள்ளத்துவகை தோற்றினாளே.
விளக்கம் : மயக்கின் : இன் : ஏதுப் பொருட்டு; அறிவை அளந்து காட்ட எனவே, குறிப்பான் அறிவின்மையையே ஈண்டுக் காட்டிற்று. இனி, ஆற்றிசைக்கும் என்று பாடம் ஓதி, மயக்கினால் தெருளலான் என்று கருதி, நன்னெறியிலே இசைக்கும் என்னறிவை அளக்கிய என்றுமாம். திகைக்கும் என்று பாடமாயின,. மயக்கினால் திகைக்கும் தெருளலான் என்க. யான் நின்னை மறப்பேனோ எனவே தேசிகப் பாவையே யாயினாள். காமன் ஜங்கணையைத் தன்னிடத்தே உடைய தேசிகப் பாவை யெனவே வேட்கையைத் தான் நிகழ்த்துவாளாயிற்று. தோற்றினாள் எனச் சினைவினை முதலொடு முடிந்தது. ( 216 )
------------
-
2594. முறுவற்றிங்கண் முகவரங்கின்மேன்
முரிந்துநீண்ட புருவக்கைக
ணெறியின்வட்டித்து நீண்டவுண்கண்
சென்றும்வந்தும் பிறழ்ந்துமாடப்
பொறிகொள்பூஞ் சிலம்புமேகலைகளும்
புணர்ந்தவின்னியங்க ளார்ப்பவேந்த
னறியுநாடகங் கண்டான்பைந்தா
ரலர்ந்துமாதர் நலங்குழைந்ததே.
விளக்கம் : நெறியின் - புணர்ச்சிக் காலத்து நிகழும் முறையானே. அவன் தொழிலாற் சிலம்பும், அவள் தொழிலால் மேகலையும் ஆர்த்தன. அறியும் நாடகம் எனவே, முன் புணர்ந்த தேசிகப் பாவையே ஆயிற்று. ( 217 )
------------
-
2595. நான்மருப்பின் மதயானை
நறியபைந்தா மரைமடந்தையைத்
தேன்மதர்த்த திளைத்தாங்கவன்
றிருவின்சாய னலங்கவர்ந்தபி
னூன்மதர்த்த வொளிவேற்கண்
ணார்பரவவிவ்வா றொழுகுமன்றே
வானகத்து நிலத்துமில்லா
வண்ணமிக்க மணிப்பூணினான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், நான் மருப்பின் மதயானையென்பது, யானை யிரண்டினை யுணர்த்திற்று என்று விளக்கங் கூறி, இரண்டானை பக்கத்தே நின்று நீரைச் சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகள் என்று பொருள் கூறுவர்: வரிநுதல் எழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப் - புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் - திருநயந்திருந்தன்ன (கலி. 44) என்றார் பிறரும் என மேற்கோள் காட்டுவர். அவர், மேலும், இனி, ஐராவதத்தின் மேலே பொய்கையாயதில் தாமரையிலே யிருக்கும் திரு என்பாருமுளர் என்பார், ஐராவதத்தின்மேற் பொய்கையில் மலர்ந்த தாமரையில் திருமகள் இருப்பதாக ஸ்ரீ புராணங் கூறும் என்பர். பொலம் பூங்காவும் புனல் யாற்றுப் பரப்பும் - இலங்கு நீர்த் துருத்தியும் இளமரக்காவும் - அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி - ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த - பெருமால் களிற்று (சிலப். 25 : 12 - 19) அரும்பதவுரை. வானிலும் நிலத்திலும் இல்லாதவன் என்றார் பிறன் தாரம் விரும்பாத பண்புடைமையின். ( 118 )
------------
-
வேறு
2596. நரம்புமீ திறத்தல் செல்லா
நல்லிசை முழவும் யாழு
மிரங்குதீங் குழலு மேங்கக்
கிண்கிணி சிலம்பொ டார்ப்பப
பரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த்
தேசிகப் பாவை கோல
வரங்கின்மே லாடல் காட்டி
யரசனை மகிழ்வித் தாளே.
விளக்கம் : இடக்கண் இளியா வலக்கண் குரலா - நடப்பது தோலியற் கருவி ஆகும் என்றார். ( 219 )
------------
-
2597. கடற்படை மன்னர் தம்மைக்
காதலின் விடுத்துக் காமன்
றொடுத்தகோன் மார்பிற் றங்கத்
தூமலர்க் கொம்ப னாளை
வடித்தவின் னமிர்தி னாரப்
பருகலின் மழைக்கட்செவ்வாய்
துடித்துவண் டுண்ணத்தூங்குஞ்
செந்தளி ரொத்ததன்றே.
விளக்கம் : வண்டு அதரத்தில் வடுவிற்கு உவமை; இல்பொருளுவமை. இசையும் கூத்தும் காமத்தை வளர்க்கும் கருவிகளாதலிற் பின்னர்ப் புணர்ச்சி கூறினார். ( 220 )
------------
-
2598. இளமையங் கழனிச் சாய
லேருழு தெரிபொன்வேலி
வளைமுயங் குருவ மென்றோள்
வரம்புபோய் வனப்புவித்திக்
கிளைநரம்பிசையுங் கூத்துங்
கேழ்த்தெழுந் தீன்றகாம
விளைபய னினிதிற் றுய்த்து
வீணைவேந் துறையுமாதோ.
விளக்கம் : தனது சாயலால் விளைந்த அழகைக் கண்ட அளவில் காமவேட்கை விளைவித்தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலின் பிறந்தது காமம் என்க. ( 221 )
இலக்கணையார் இலம்பகம் முற்றிற்று.
-------------------
This file was last updated on 26 July 2019.
Feel free to send the corrections to the .